ஒருவர் ஒரு நிறுவனத்தில் இருந்து இன்னொரு நிறுவனத்திற்கு வேலைக்கு செல்லும்போது தனது பழைய பி.எஃப். கணக்கை புதிய நிறுவனத்திற்கு மாற்றுவார் அல்லது அந்த கணக்கில் உள்ள பணத்தை எடுக்க விண்ணப்பிப்பார். அவ்வாறு கணக்கை மாற்றும்போது அதில் உள்ள பணம் புதிய கணக்கிற்கு வந்துவிட்டதா என்பதை அறியவும், பணத்தை எடுக்க விரும்பி விண்ணப்பித்தால் அந்த தொகை எப்பொழுது கிடைக்கும் என்பதை அறியவும் பெரும்பாடுபட வேண்டியதாக இருக்கிறதா?
கவலையை விடுங்கள் தகவல் அறியும் சட்டத்தின்( ஆர்.டிஐ.) கீழ் விவரங்களை கேட்டு விண்ணப்பியுங்கள். 30 நாட்களில் நீங்கள் அறிய வேண்டிய தகவல் கிடைத்துவிடும்.
தகவல் அறியும் சட்டம்(ஆர்.டிஐ.) என்றால் என்ன? அது எப்படி செயல்படும்?
அரசு அலுவலகங்களில் இருந்து விவரங்கள் பெற அவதிப்படுவோருக்கு தகவல் அறியும் சட்டம் ஒரு சிறந்த கருவி.
தகவல் அறியும் சட்டத்தில் விவரங்களைப் பெறுவது எப்படி?
அருகில் உள்ள தபால் நிலையத்திற்கு சென்று ரூ.10க்கு மணி ஆர்டர் எடுக்கவும்( இது தான் விண்ணப்ப கட்டணம்). அதை இபிஎஃப்ஓ அலுவலகத்தின் பெயரில் எடுக்கவும். உதாரணமாக நீங்கள் பெங்களூரில் உள்ள பி.எஃப் அலுவலகத்திற்கு அனுப்ப விரும்பினால் இபிஎஃப்ஓ பெங்களூர் என்ற பெயரில் மணி ஆர்டர் எடுக்கவும்.
தகவல் அளிக்கக் கோரி கடிதம் எழுதுங்கள். இப்படித் தான் எழுத வேண்டும் என்று எந்த விதிமுறையும் இல்லை. அதனால் ஒரு பேப்பரில் எழுதுங்கள். அதில் உங்கள் பெயர் மற்றும் தொடர்புகொள்ள வேண்டிய முகவரியை தெளிவாக எழுதவும்.
கடிதத்தை வளவளா கொலகொலா என்று எழுதாமல் பாயிண்ட் போட்டு சுருக்கமாக எழுதவும். பெறுநர் முகவரியில், மத்திய பொது தகவல் அதிகாரி(சென்ட்ரல் பப்ளிக் இன்பர்மேஷன் ஆபீஸர், பி.எஃப். கமிஷனர் அலுவலகம், இபிஎஃப்ஓ(அலுவலக முகவரியை எழுதவும்).
உங்கள் கடிதத்தில் இருக்க வேண்டிய விவரங்கள்:
அதில் உங்கள் பி.எஃப் கணக்கு எண், முழு முகவரி, செல்போன் எண், இமெயில் முகவரி உள்ளிட்டவற்றையும் குறிப்பிடவும். கடிதத்தின் இறுதியில் நான் ஒரு இந்திய குடிமகன்/மகள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விண்ணப்பம் கிடைத்த 30 நாட்களுக்குள் நான் கோரிய விவரங்களை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிடவும். இந்த கடிதத்துடன் ரூ.10க்கான மணி ஆர்டரையும் இணைத்துள்ளேன் என்று மறக்காமல் எழுதிவிடுங்கள். விண்ணப்ப கட்டணம் ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடும். கடிதத்தை எழுதி முடித்த பிறகு அதை ஜெராக்ஸ் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
விண்ணப்ப கடிதத்தை பதிவு அஞ்சலில் அனுப்பி வைக்கவும். இந்த விண்ணப்பத்தை கூரியரில் அனுப்பினால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
ஆன்லைனிலும் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விவரம் கேட்டு விண்ணப்பிக்கலாம். தபால் நிலையத்திற்கு செல்ல முடியாதவர்கள் ஆர்டிஐநேஷன் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அந்த இணையதளத்திற்கு சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்து டவுன்லோட் செய்யுங்கள். அதில் கையெழுத்திட்டு அதை ஸ்கேன் செய்யவும். அந்த ஸ்கேன் காப்பியை பிரிண்ட் அவுட் எடுத்து இபிஎஃப்ஓ அலுவலகத்திற்கு சாதாரண தபாலில் அனுப்பி வைக்கவும். ஆன்லைனில் ரூ.150 விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த வேண்டும்.
நீங்கள் இரண்டு ஊர்களில் பணிபுரிந்திருந்தால் இரண்டு ஆர்டிஐ விண்ணப்பங்களை பூர்த்தி செய்து இரண்டு இடங்களில் உள்ள இபிஎஃப்ஓ அலுவலகங்களுக்கும் அனுப்ப வேண்டும்.