இந்த திட்டம் மூலமாக 60 வயதான ஒருவர் அஞ்சல் அலுவலகத்திலோ அல்லது ஒரு வங்கியிலோ தனது சேமிப்புக் கணக்கை தொடங்க முடியும். அவ்வாறு அவர் சேமிக்கும் தொகைக்கு பல்வேறு வங்கிகள் அதிகப்படியான வட்டியை வழங்குகின்றன. மேலும் ஓய்வு பெற்றவர்கள், விருப்ப ஓய்வு பெற்றவர்கள் இந்த கணக்கை துவங்க 55 வயதை அடைந்திருக்க வேண்டும்.
எஸ்சிஎஸ்எஸ் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம் 5 ஆண்டுகளைக் கொண்டது. 5 ஆண்டுகள் முடிந்த நிலையில் மேலும் 3 ஆண்டுகளுக்கு இந்த திட்டத்தை விரிவுபடுத்திக் கொள்ளலாம்.
இந்த திட்டத்தில் சேர்ந்து சேமித்து வரும் சேமிப்பில் ஒவ்வொரு காலாண்டிலும் அதற்கான வட்டி சேர்க்கப்படும். ஆனால் இந்த வட்டிக்கு வரி செலுத்த வேண்டும். குறிப்பாக பணத்தை எடுக்கும்போது அதிலிருந்து வட்டி கழிக்கப்படும்.
இந்த திட்டத்தின்படி அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
திட்ட காலம் முடியும் முன்பே பணத்தை எடுத்துக் கொள்ளலாம். எனினும் கணக்குத் தொடங்கி ஓராண்டு முடிந்த பின்பே பணத்தை எடுக்க முடியும். மேலும் அதற்கான அபராதத் தொகையையும் செலுத்த வேண்டும்.
இந்தியாவில் குடியிருக்காத வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ), இந்திய வம்சாவளியினர் (பிஐஒ) மற்றும் இந்து கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் (எச்யுஎப்) இந்த திட்டத்தில் சேர முடியாது.
இந்த திட்டத்தில் வங்கிக் கணக்கை ஒரு வங்கிக் கிளையிலிருந்து வேறொரு கிளைக்கு மாற்ற அனுமதி உண்டு.
கணக்கைத் தொடங்குபவர் தன்னுடைய பினாமியாக ஒருவரையோ பலரையோ நியமித்துக் கொள்ளலாம். இதன் மூலம் ஒரு வேளை அவர் இறக்கும் நிலையில் அவருடைய பினாமிகள் அந்த சேமிப்பு பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். எனினும் கணக்கைத் தொடங்கிய பின்பு அதன் முடிவு காலத்திற்கு முன் அவர் பினாமிகளை நியமிக்க வேண்டும்.
சேமிப்பு காலமான 5 ஆண்டுகள் முடிந்துவிட்டால் அந்த காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும்.
அவ்வாறு நீட்டிக்கப்பட் மூன்றாண்டு காலத்தில் முதல் ஆண்டு முடிவடைந்தவுடன் ஒருவர் கணக்கை முடிக்க விரும்பினால் அவருடைய சேமிப்பிலிருந்து 1.5 சதவீத தொகைக் கழிக்கப்படும். இரண்டாம் ஆண்டு முடிவடைந்த நிலையில் அவர் கணக்கை முடிக்க விரும்பினால் 1 சதவீத பணம் கழிக்கப்படும்.
இந்த வங்கிக் கணக்கைத் தொடங்கியபின் தொடங்கியவர் வெளிநாடு வாழ் இந்தியராக மாறினால் சேமிப்பு முதிர்வு அடையும் வரை அவர் கணக்குத் தொடரும். ஆனால் இந்த கணக்கிற்கு நான் ரெசிடன்ட் அக்கவுண்ட் அதாவது இந்தியாவில் குடியிருக்காதவரின் கணக்கு என்று முத்திரை கொடுக்கப்படும்.
நம் வீட்டு முதியோர்களும் இந்த திட்டத்தில் சேர்ந்து பயனடையலாம். இதன் மூலம் அவர்கள் யாரையும் சார்ந்திராமல், தங்கள் சொந்த கால்களில் நிற்கலாம்.