சொத்தின் மீது எப்போது கடன் வாங்கலாம்?
பலர் பல காரணங்களுக்காக தங்கள் சொத்தின் மீது கடன் வாங்குகின்றனர். குறிப்பாக தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த அல்லது தங்களுடைய மகன் அல்லது மகளுக்கு திருமணம் செய்து வைக்க அல்லது வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள என பல காரணங்களுக்காக சொத்தின் மீது கடன் வாங்குகின்றனர். இந்தியாவில் தங்கத்தின் மீது மக்களுக்கு ஒரு உணர்வுபூர்வமான நெருக்கம் உள்ளதால் அவர்கள் தங்கத்தை எளிதாக விற்பதில்லை. அதனால் பெரும்பாலும் சொத்தின் மீது கடன் வாங்குவதையே விரும்புகின்றனர். மேலும் மற்ற கடன்களைவிட சொத்தின் மீது கடன் பெறுவது மிகவும் எளிது.
எவ்வளவு கடன் கிடைக்கும்?
சொத்தின் மதிப்பை அளவிடுவது வங்கிகளுக்கு வங்கிகள் மாறுபடுகிறது. ஆனால் நமது சொத்தின் மதிப்பில் இருந்து 50 முதல் 60 சதவீதம் வரையிலான கடன் கண்டிப்பாக கிடைக்கும். எடுத்துக்காட்டாக ஒருவரிடம் ரூ. 1 கோடி மதிப்பிலான சொத்து இருக்கிறது என்றால் அவருக்கு ரூ.50 முதல் 60 லட்சம் வரை கடன் கிடைக்கும். கடனை வாங்கிய பின்பு சொத்தின் மதிப்பு அதிகரித்தால், கடன் தொகையும் அதிகரிக்கும்.
வீட்டுக் கடனை பெறுவதற்கு ஆகும் செலவை போல் சொத்தின் மீதான கடனை பெறுவதற்கும் செலவு ஆகும். எனவே எவ்வளவு கடனை வாங்கப் போகிறோம் என்று முதலிலேயே முடிவு செய்திருக்க வேண்டும்.
சொத்தின் மீதான கடனில் என்னென்ன நன்மைகள்?
மற்ற கடன்களைவிட சொத்தின் மீது கடன் வாங்குவது மிக எளிது. அதுபோல் மற்ற கடன்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தைவிட சொத்தின் மீதான கடனுக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் குறைவாக இருக்கும். மேலும் சொத்தின் மீது கடன் வாங்கினாலும் அந்த சொத்து உரிமையாளர் பெயரிலேயே இருக்கும். வங்கியிடம் கைமாறாது.
இந்தியாவில் சொத்தின் மீதான கடன் மிகவும் பிரபலமாகவில்லையானாலும், இந்த கடனில் ஏராளமான நன்மைகள் உண்டு என்பது மட்டும் உண்மை.