அடிப்படையில் வலுவான நிறுவனங்களில் முதலீடு செய்யுங்கள்.
பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தை சமாளித்து, காலப்போக்கில் நமக்கு லாபம் தரும் பங்குகளை, நன்கு ஆராய்ந்து தேர்வு செய்யுங்கள்.
பங்குகளில் முதலீடு செய்தாலும், நமக்கு தேவைப்பட்ட நேரத்தில் அதனை எளிதில் விற்று பணம் எடுக்கும் வகையில் நல்ல வலிமையான பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும். ஒரு சில பங்குகளை பல சமயங்களில் வாங்குவதற்கே ஆள் இருக்காது. இப்படிப்பட்ட பங்குகளைத் தவிர்ப்பது நல்லது.
ஒரு சில பங்குகளுக்கு ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் அல்லது சூழ்நிலையில் மட்டும் ஏற்றம் இறக்கம் இருக்கும். மற்ற நேரங்களில் அதனை வாங்க ஆளே இருக்காது. அப்படிப்பட்ட பங்குகளை வாங்காமல் தவிர்ப்பது நல்லது.
அதுல கொஞ்சம், இதுல கொஞ்சம்
முதலீட்டுப் பணம் முழுவதையும் போட்டு ஒரே பங்கினையோ அல்லது ஒரு துறையைச் சேர்ந்த பங்கினையோ வாங்காமல், பல்வேறு துறைகளைச் சேர்ந்த பல்வேறு பலமான பங்குகளை ஆராய்ந்து வாங்கி வைப்பது, நம்முடைய முதலீட்டை பத்திரமாக வைக்க உதவும்.
முதலில் நம்முடைய அடிப்படைத் தேவைகளுக்கான பணத்தை ஒதுக்கி வைத்துவிட வேண்டும். அதன் பிறகே, முதலீடு செய்வதற்கான தொகையை முடிவு செய்ய வேண்டும்.
இன்றைக்கு முதலீடு செய்தால் நாளைக்கே பணம் கிடைக்க வேண்டும் என எதிர்பார்த்து முதலீடு செய்யக் கூடாது. நாம் செய்யும் முதலீடு, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு, நமக்கு நல்ல பொருளை ஈட்டித் தரும் என்ற அடிப்படையில் நம் முதலீடுகள் இருக்க வேண்டும்.
முதலீடு என்பது ஒழுக்கத்துடன், வாழ்நாள் முழுவதும் தொடர்ச்சியாக செய்ய வேண்டிய விஷயம். கொஞ்சம் கொஞ்சமாக தொடர்ச்சியாக செய்யும் முதலீடு, நல்ல பலனைக் கொடுக்கும்.
பங்கு வாங்கினால் மட்டும் போதாது, விற்கவும் தெரியணும்
பலர் பங்கு வாங்குவதோடு சரி, விற்கவே மாட்டார்கள். அந்த நிறுவனத்தைப் பற்றியும் கவலைப்படாமல் இருப்பார்கள். இது தவறான அணுகுமுறை.
ஒரு பங்கினை இந்த விலைக்கு வாங்கினோம் என்றால் நமக்கு ஒரு 10 சதவீத விலை உயர்ந்தால் விற்றுவிடலாம் அல்லது 4 சதவீதம் விலை குறைந்தாலும் விற்றுவிடலாம் என முன்பே முடிவு செய்து வர்த்தகம் செய்ய வேண்டும். (ஒரு புரிதலுக்காக மட்டும் கொடுக்கப்பட்ட விகிதாச்சாரங்கள் இவை)
சில சமயங்களில் பங்கு வர்த்தகத்தில் தாறுமாறான ஏற்ற இறக்கம் காணப்படும். நம்மைப் போன்ற சிறு வர்த்தகர்கள் ஏமாறுவது இது போன்ற சமயத்தில் தான். இந்த மாதிரியான சமயத்தில் பயப்படாமல் சிந்தித்து செயல்படுவது அவசியம்.
அங்த பங்கு விலை மிகவும் குறைவாக இருக்கிறது, இப்பொழுதே நிறைய வாங்கி வைத்துவிடுவோம் என்று நினைக்கிறார்கள். விலை குறைவாக இருப்பது, சிறந்த பங்காக இருக்கும் என்று சொல்ல முடியாது. குறைவான விலையில் பங்கினைத் தேடுவதை விட தரமான பங்கினை தேடுவது தான் சிறப்பான செயல்.
திடீர் என்று ஒரு பங்கின் விலை மிகவும் குறைந்து காணப்படும். உடனே அந்த பங்கை வாங்கிவிடக் கூடாது. அந்த நிறுவனம் பங்கினை இரண்டாக ஏன் நான்காகக் கூடப் பிரித்து இருக்கலாம்.
பேராசை பெரும் நஷ்டம்
உணர்ச்சி வசப்பட்டு முதலீடு செய்வது தான் நம்மில் பலருக்கு இருக்கும் பிரச்சனை. இப்படி இல்லாமல், நம்முடைய நோக்கத்தில் தெளிவாக இருந்து முதலீடு செய்ய வேண்டும். நன்றாக ஆராய்ந்து முடிவுகளை எடுக்க வேண்டும்.
எங்கு பார்த்தாலும் இந்த நிறுவன விளம்பரம் தான் உடனே இந்தப் பங்கினை வாங்கி வைத்துவிடலாம் என்று நினைக்க வேண்டாம். விளம்பரங்களை வைத்து பங்கு நிறுவன மதிப்பை ஒப்பிடாதீர்கள். எஸ்.எம்.எஸ் இமெயில் மூலம் பணக்கார ஆசை காட்டும் ஆசாமிகளிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.
எதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
தற்போதைய நிலையில் எஃப்.எம்.சி.ஜி துறைப் பங்குகள் நன்றாக விற்பனையாகிறது என்பது கணிப்பு. அதனால், அந்தத் துறையில் இருக்கும் அனைத்து பங்குகளும் லாபம் ஈட்டும் பங்குகள் என்று நினைத்துவிடக் கூடாது. வாழ்க்கையைப் போல பங்குச் சந்தையில் நல்லதும், கெட்டதும் கலந்தே இருக்கும். இன்னும் ஒரு சில நிறுவனங்கள், முதலீட்டாளர்களின் ஆர்வத்திற்கு ஏற்றார் போல பெயரைக் கூட மாற்றி வைத்துக் கொள்வார்கள்.
ஒரு அடிப்படையே இல்லாமல், கண்ணை மூடிக்கொண்டு முடிவுகளை எடுக்காதீர்கள்.
நிறுவனத்தின் அகௌண்ட் ஸ்டேட்மென்ட்டை மட்டும் வைத்துக் கொண்டு, மற்ற எதையும் கணக்கில் கொள்ளாமல், முடிவுகளை எடுக்க வேண்டாம். மோசடியான அகௌண்ட் ஸ்டேட்மென்ட்ஸ் கொடுத்த பல நிறுவனங்களைப் பங்குச் சந்தை பார்த்திருக்கிறது. சத்யம் நிறுவன கதை நாம் அனைவரும் அறிந்ததே. ஆகையால், பல கோணங்களில் ஆராய்ந்து முடிவுகளை மேற்கொள்ளுங்கள்.
இதை அனைத்தையும் கொஞ்சம் மனதில் வைத்துக் கொண்டு, முதலீடு செய்யுங்கள். பலன் நிச்சயம். நம் வாழ்க்கையில் எவ்வளவு சீக்கிரம் முதலீட்டுப் பழக்கத்தை ஆரம்பிக்கிறோமோ அவ்வளவு நல்ல பயனைத் தரும் என்பதில் ஐயமில்லை.