சில முக்கியமான வைப்புத் தொகை திட்டங்கள் பின் வருமாறு,
வழக்கமான வைப்புத் தொகை திட்டங்கள்:
இவ்வகையான திட்டத்தில் முதலீட்டு காலம் என்பது ஒரு வாரத்திலிருந்து 10 வருடங்கள் வரை வேறுபடலாம். ஒவ்வொரு முதலீட்டுக் காலத்திற்குரிய வட்டி விகிதம் முன்னரே தீர்மானிக்கப்பட்டிருக்கும். முதலீட்டாளர் அவருக்கு தோதாக இருக்கக்கூடிய திட்டத்தை குறிப்பிட்ட காலவரையறையில் தேர்வு செய்து கொள்ளலாம்.
வரி விலக்கு வைப்புத் தொகை திட்டங்கள்:
இத்திட்டம், வருமான வரி விலக்கு பெற நினைக்கும் முதலீட்டாளர்களை கவரக்கூடிய திட்டமாக விளங்குகிறது. இதில், கட்டாய காலவரையறையாக 5 ஆண்டுகள் உள்ளது. இக்காலம் முடியும் முன் முதலீட்டு பணத்தை எடுக்க இயலாது.
சிறப்பு வைப்புத் தொகை திட்டம்:
சந்தையில் காணப்படும் பல்வேறு சிறப்பு வைப்புத் தொகை திட்டங்களில் பணத்தை, சிறப்பு காலவரையறைகளான 333, 339 அல்லது 555 நாட்கள், முதலீடு செய்து, அதற்கு அதிக வட்டி விகிதமும் பெறலாம்.
ரெக்கரிங் டெபாசிட் (ஆர்டி):
இது முதலீட்டாளர்களிடையே புகழ்பெற்ற மற்றுமொரு முதலீட்டுத் திட்டமாகும். இதில் முதலீட்டாளர்கள் வாடிக்கையாக ஒரு குறிப்பிட்ட தொகையை, ஒவ்வொரு மாதமும் செலுத்த வேண்டும். இத்தொகை, முன்பே நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதம் மற்றும் காலவரையறை கொண்ட வைப்பு நிதியாக கருதப்பட்டு, குறிப்பிட்ட தவணை முடியும் வரை வளர்ந்து கொண்டே இருக்கும்.
ஃபுளோட்டிங் வைப்புத் தொகை:
இத்திட்டத்தின் கீழ், முதலீட்டாளர் சந்தை நிலவரத்தை அடிப்படையாகக் கொண்ட வட்டி விகிதத்தை தேர்ந்தெடுக்கலாம். வட்டி விகிதம், அடிப்படை விகிதத்தின் மாறுபாடுகளை பொறுத்து தானாகவே புதுப்பிக்கப்பட்டுவிடும்.
வைப்புத் தொகை வட்டி கணக்கீட்டை தேர்ந்தெடுக்கும் முன் கருத்தில் கொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்கள்:
சந்தையில் வைப்புத் தொகை வட்டி கணக்கீடு என்பது ஒரு மாதம், காலிறுதி, அரையிறுதி, முழு ஆண்டு என்று காலத்தை பொறுத்து பல வழிகளில் வேறுபடுகிறது.
வட்டி வருவாய்:
முதலீட்டாளர் அவரது வசதிக்கேற்ப ஒன்று தன் வட்டி வருவாயை மறுமுதலீடு செய்து தன் வைப்புத் தொகையை அதிகப்படுத்திக் கொள்ளலாம் அல்லது அத்தொகையை வங்கியில் இருந்து ஒவ்வொரு மாதமும் பெற்றுக் கொள்ளலாம்.
அபராதம்:
சில நிறுவனங்கள், வைப்புத் தொகை முதலீட்டாளர் குறிப்பிட்ட தவணை காலத்திற்கு முன் முடிக்க விரும்பினால் அபராதமாக வட்டி விகிதத்தை குறைக்கின்றனர். அதனால் தவணை காலம் முடியும் முன் வைப்புத் தொகையை எடுப்பதற்கு, எந்த வங்கி அல்லது நிறுவனம் குறைந்த பட்ச அபராதம் விதிக்கிறது என்பதை முதலீட்டாளர்கள் நன்கு விசாரித்து தெரிந்து கொண்டு பின் முதலீடு செய்வது நல்லது.
வைப்புத் தொகை வட்டிக்குரிய வரிவிதிப்பு முறைகள்:
வைப்புத் தொகை மூலமாக பெறும் வட்டி, "பிற ஆதாரங்களின் மூலம் பெற்ற வருமானம்" என்ற விதியின் கீழ் வரிக்குட்பட்டதாகும். வருமான வரி சட்டத்தின் 80சி பிரிவின் கீழ், முதலீடு செய்யப்பட்ட தொகை வரி விலக்கு பெற்றதாகவும், ஆனால் அதன் மூலம் கிடைக்கும் வட்டித் தொகை வரிவிதிப்பிற்குட்பட்டதாகவும் உள்ளது. வைப்புத் தொகையின் மூலம் பெற்ற வட்டியானது, ஒரு நிதியாண்டில், 10,000 ரூபாயை தாண்டினால், மூல ஆதார வரி விதிப்பின்படி (ஆங்கிலத்தில் Tax Deduction at Source or TDS) 10 சதவீதமும், கல்வி வரி விதிப்பின்படி 3 சதவீதமுமாக, வைப்புத் தொகையால் பெறப்பட்ட வட்டியில் மொத்தம் 13 சதவீதம் வரிக்குட்பட்டதாகும்.
உதாரணத்திற்கு, ஒரு முதலீட்டாளர் 20,000 ரூபாயை ஒரு ஆண்டில் வட்டியாக பெற்றிருப்பாராயின், அவ்வங்கி, 2000 ரூபாயை வரியாக பிடித்துக் கொண்டு 18,000 ரூபாய் மட்டுமே வட்டியாக அவருக்கு வழங்க வேண்டும். நிறுவனங்களின் வைப்புத் தொகை திட்டங்களுக்கான டிடிஸ் வரையறையானது ரூ. 5000 மட்டுமே. அதாவது, ஒரு நிறுவனத்தின் வைப்புத் தொகை திட்டத்தின் மூலம் முதலீட்டாளர்கள் பெற்ற வட்டியானது 5000 ரூபாய்க்கும் மேலாக இருக்குமாயின், அம்முதலீட்டாளர்கள் அவ்வட்டிக்கு வரி செலுத்தக் கடமைப்பட்டவர்களாவர்.
வைப்புத் தொகை விதிக்கப்படும் டிடிஸ்-ஐ தவிர்ப்பது எப்படி?
ஒரு முதலீட்டாளர் டிடிஸ்-ஐ பல வழிகளில் தவிர்க்கலாம்.
டிடிஸ் தவிர்ப்புக்கான சில முக்கிய யோசனைகள் பின்வருமாறு,
படிவம் 15ஜி/15ஹெச் சமர்பிப்பதன் மூலம்:
முதலீட்டாளர், தனக்கு வரிவிதிப்பிற்குட்பட்ட வருமானம் இல்லை என்று குறிப்பிட்டு, படிவம் 15ஜியை சமர்பித்தாரானால் அவர் பெற்ற வட்டிக்கு, அவ்வங்கி டிடிஸ் வரி வசூலிக்காது. மூத்த குடிமக்கள் டிடிஸ்-ஐ தவிர்க்க விரும்பினால், படிவம் 15ஹெச்-ஐ பயன்படுத்த வேண்டும்.
வைப்புத் தொகை முதலீட்டை பகிர்ந்தளிப்பதன் மூலம்:
வைப்புத் தொகையை பிரித்து ஒவ்வொரு முதலீட்டிலிருந்தும் அதிகபட்ச வட்டித் தொகை 10,000 ரூபாயை மிகாத வகையில், பல்வேறு வங்கிகளில் முதலீடு செய்யலாம்.
வைப்புத் தொகையின் காலவரையறையை நிர்ணயிப்பதன் மூலம்:
எந்த ஒரு நிதியாண்டிலும், வைப்புத் தொகைக்கான வட்டித் தொகையானது, 10,000 ரூபாயை மிகாமல் இருக்கும்படி, அந்த வைப்புத் தொகையின் காலவரையறையை நிர்ணயிப்பதன் மூலம் டிடிஸ்-ஐ தவிர்க்கலாம். உதாரணத்திற்கு, 12 மாத வைப்புத் தொகையான ரூ. 1 லட்சத்தை, 10.5 சதவீத வட்டி விகிதத்தில், செப்டம்பர் மாதம் தொடங்கினால், அந்த வட்டித் தொகை இரண்டு நிதியாண்டுகளுக்கு கணக்கிடப்படும். ஏனெனில், அந்த நடப்பு நிதியாண்டானது, மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்துவிடும். இதன் மூலம் டிடிஸ்-ஐ தவிர்க்கலாம்.
இன்னொரு வகையில் வைப்புத் தொகையை பிரிப்பதன் மூலம்:
ஒருவர் ஒரு வைப்புத் தொகையை அவரின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிலும், மற்றொரு வைப்புத் தொகையை இந்து கூட்டு குடும்ப வங்கிக் கணக்கிலுமாக தொடங்குவதன் மூலம், இரண்டையும் வெவ்வேறாக காட்ட முடியும். இவ்வாறு இந்து கூட்டு குடும்ப அடையாளம் உள்ள ஒரு முதலீட்டாளர் தன் வைப்புத் தொகையை இரண்டாக பிரித்து டிடிஸ்-ஐ தவிர்க்க முடியும்.
நிரந்தர வைப்பு நிதியான வைப்புத் தொகையானது, எப்போதும் முதலீட்டாளர்கள் மிக விரும்பும் ஒரு முதலீட்டுத் திட்டமாக திகழ்கிறது. இத்திட்டம் முதலீட்டாளர்களுக்கு தேவையான நேரத்தில் ஒரு கணிசமான தொகை கிடைக்கும்படி அமையப் பெற்றுள்ளது. மற்ற நிதித் திட்டங்களின் நிலையாமையையும், அபாயங்களையும், குறைந்த வருவாயையும் ஒப்பிடுகையில் இந்த வைப்புத் தொகையானது, வருங்காலத்தில் மென்மேலும் முதலீட்டாளர்களை கவர்ந்திழுக்கக் கூடியதாக வளர்ச்சியடையும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.