இருப்பினும், ஒரு அவசர பணத் தேவை. ஒன்றிரெண்டு நாட்களுக்குள் பணம் வேண்டும். என்ன செய்வது? தனி நபர் கடன் கோரி விண்ணப்பித்தாலும் அவ்வளவு விரைவில் பணம் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. அந்த சமயத்தில், கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுக்கலாமே என்று நமக்கு யோசனை தோன்றுவது இயல்பு.
சரி, இதைத் தவிர்த்து வேறு எப்படி எளிய முறையில் அதுவும் வழக்கமான வட்டியுடன் கடன் பெற முடியும்? இதற்கான ஒரு தீர்வு தான் கிரெடிட் கார்டை வைத்து வங்கிகளில் கடன் பெறுவது. இது எப்படி சாத்தியம் என்பதைப் பார்ப்போம்.
கிரெடிட் கார்டை வைத்து கடன் பெறுவது என்றால் என்ன?
ஏதாவது ஒரு வங்கியின் மூலமாக நாம் கிரெடிட் கார்டுகளை வாங்கி உபயோகித்துக் கொண்டிருக்கிறோம். வங்கிகள், நம்முடைய நம்பகத்தன்மை, பணம் செலுத்திய வரலாறு போன்றவைகளை கணக்கில் கொண்டு நமக்கு தரக்கூடிய கடன் தொகையை நிர்ணயம் செய்கின்றன. வங்கிகளுக்கு கடன் செலுத்துவதில் பாக்கி இல்லாமல் இருந்தால், எந்த வித ஆவணங்களும் இல்லாமல் உடனடியாக வங்கிகள் கடன் வழங்குகின்றன. அதுவும், கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களில் என்றால் நல்ல விஷயம் தானே.
கிரெடிட் கார்டு மூலம் கடன் வாங்குவதின் முக்கிய அம்சங்கள்:
* ஏற்கனவே நம்முடைய ஆவணங்கள் வங்கிகளிடம் இருப்பதால் புதிதாக எந்த ஆவணமும் தரத் தேவையில்லை.
* புதிதாக ஆவணங்கள் எதுவும் தேவைப்படாததால் மிக விரைவில் கடன் பெற முடியும்.
* உத்திரவாதம் எதுவும் பெறப்படாத கடன் என்பதால் இதற்கான சேவை மற்றும் செயலாக்க கட்டணம் அதிகமாக இருக்கும்.
* கிரெடிட் கார்டுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பண உச்ச வரம்பிற்கு கூடுதலாக இந்தக் கடன் தொகை வழங்கப்படுகிறது. கிட்டத்தட்ட ஒரு தனிநபர் கடன் வாங்குவது போன்ற பலனும் இதில் உண்டு.
* தனிநபர் கடன்களுக்கும் இவ்வகை கடன்களுக்கும் வட்டி விகிதங்களில் பெரிய வித்தியாசம் இல்லை. இருப்பினும், தனிநபர் கடனை விட கிரெடிட் கார்டு மூலம் பெறும் கடனின் வட்டி விகிதம் கொஞ்சம் அதிகமாக இருக்கும்.
* முன்கூட்டியே பணத்தைக் கட்டி கடனை அடைத்துவிடலாம் என நினைத்தால், அதற்கு அதிக அளவு அபராதம் செலுத்த வேண்டி இருக்கும். நம்மை நம்பி பெரிய ரிஸ்க் எடுத்த வங்கிகளுக்கு வட்டி வருவாயை இழக்க தயாரில்லை என்பதே இதன் காரணம்.
கடன் பெறத் தேவையான அடிப்படைத் தகுதி:
முன்பு வாங்கிய கடன்களை சரியான முறையில் செலுத்திய, நல்ல நம்பகமானவராக இருக்க வேண்டும். வங்கிகளுக்கு கடன் தொகை பாக்கி வைத்தவராக இல்லாமல் இருக்க வேண்டும். நீண்ட நாள் வங்கிப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டவராக இருத்தல் நலம்.
எவ்வளவு தொகை கிடைக்கும்?
பொதுவாக கிரெடிட் கார்டின் பண உச்ச வரம்பிற்கு கூடுதலாகத் தான் வங்கிகள் கடன் தொகையை நிர்ணயம் செய்கின்றன. இவ்வகையில், எவ்வித நிலுவைத் தொகையும் இல்லாமல், வெகு காலம் வங்கிப் பரிவர்த்தனையில் ஈடுபடுபவராக இருந்தால், கடன் தொகையை அதிகரிப்பது மற்றும் வட்டி விகிதம் குறைப்பது குறித்து வங்கிகளிடம் பேசி, நமக்கு சாதகமான முடிவுகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
கிரெடிட் கார்டு கடனை எப்போது வாங்கலாம்?
உடனடியாக பணம் தேவைப்படுகிறது. ஆனால் குறைந்த கால அவகாசகமே இருக்கிறது, வேறு வழியே இல்லை என்ற நிலையில் மட்டும் கிரெடிட் கார்டு மூலம் கடன் பெறுவதைப் பரிசீலிக்கலாம். கிரெடிட் கார்டுகளைக் கொண்டு ஏடிஎம் மூலம் பணம் எடுப்பதை விட இப்படி கடன் பெறுதல் சிறந்த வழி. தனிநபர் கடன் மூலமாகவோ அல்லது வேறு நல்ல முறையிலோ நம் பணத் தேவை பூர்த்தி அடைந்தால், இவ்வகைக் கடன்களைப் பற்றி சிந்திக்கத் தேவையில்லை.
கிரெடிட் கார்டு மூலம் கடன் பெறுவதை விட குறைவான வட்டியில் கிடைக்கும் தனி நபர் கடன்களைக் பயன்படுத்திக் கொள்வது சிறந்தது. அதுவுமில்லாமல், கிரெடிட் கார்டு கடன்களில் சேவை மற்றும் செயலாக்க கட்டணங்கள் மிக அதிகம். ஆக, இவை அனைத்தையும் மனதில் நிறுத்தி, நம்முடைய தேவைக்கு ஏற்ற கடனை எவ்வகையில் பெறுவது என முடிவு செய்வது நம் கையில் தான் இருக்கிறது.