இந்த திட்டம் ரூ. 10 லட்சத்திற்கும் குறைவான ஆண்டு வருமானம் உடையவர்கள் ரூ. 50,000 வரை முதலீடு செய்தால் வரி விலக்கு பெற உதவுகிறது. இந்தத் திட்டம் பங்குகள் வாங்கும் கலாச்சாரத்தை இந்தியாவில் வளர்ப்பதற்காகவும், உள்ளூர் பங்குச் சந்தையில் பணப்புழக்கத்தை அதிகரித்து வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காகவும் முயற்சிக்கிறது.
இத்திட்டத்தின் சிறப்பம்சங்கள்:
1. பான் கார்டு எண் அடிப்படையில் அடையாளம் காணப்படும் புதிய சில்லறை முதலீட்டாளர்கள் அனைவரும் பங்கு பெறலாம். இது டீமாட் கணக்கு துவங்கி இத்திட்டம் அறிவிக்கப்படும் வரை பங்கு வர்த்தகத்தில் ஈடுபடாமல் இருப்பவர்களுக்கும் பொருந்தும். புதிதாக டீமாட் கணக்கு தொடங்குபவர்களுக்கும் பொருந்தும்.
2. ரூ. 10 லட்சத்திற்கும் குறைவான ஆண்டு வருமானம் உடைய புதிய முதலீட்டாளர்கள் இத்திட்டத்தின் கீழ் பயனுற தகுதி பெறுகிறார்கள்.
3. இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சம் ரூ.50,000 வரை முதலீடு செய்யலாம். முதலீடு செய்த தொகையில் 50 சதவீதம் வரை அந்த வருட வருமானத்தில் வரி விலக்கு பெறலாம்.
4. பி.எஸ்.இ 100 பங்குகள் அல்லது சி.என்.எக்ஸ் 100 பங்குகள், பொதுத் துறை நிறுவனங்களான நவரத்னா, மகாரத்னா மற்றும் மினிரத்னா பங்குகள் ஆகியவையே இத்திட்டத்தின் கீழ் தகுதியுடையன. மேற்கூறிய நிறுவனங்களின் கூடுதல் பங்கு வெளியீடுகளும், ரூ. 4,000 கோடிக்கு குறையாமல் மூன்று ஆண்டுகளாக வருமானம் ஈட்டும் பொதுத் துறை நிறுவனங்களின் அந்த நிதியாண்டிற்கான புதிய பங்கு வெளியீடுகளும் தகுதி பெறுகின்றன.
5. சிறிய முதலீட்டாளர்கள் பலனடைகிறார்கள். முதலீட்டை வரி விலக்கு பெறும் ஆண்டில் தவணை முறையில் செலுத்தவும் வழியுள்ளது
6. முதலீடு செய்த பணத்தை மூன்று ஆண்டுகளுக்கு திரும்பப் பெற இயலாது.