சென்னை: இந்தியாவின் பணவீக்கம் படிப்படியாக குறைந்து வருவதால் வட்டி விகிதமும் இனி படிப்படியாகக் குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பொருளாதார வல்லுநர்கள் மத்தியில் பரவலாக உள்ளது. தற்போது ஒரு சில தேசிய வங்கிகள் வைப்புத் தொகைக்கு(பிக்சட் டெபாசிட்) அதிக வட்டி விகிதத்தை வழங்குகின்றன.
ஒரு சில தேசிய வங்கிகள் வழங்கும் வட்டி விகிதம், தனியார் வங்கிகள் வழங்கும் வட்டி விகிதத்தைவிட அதிகமாக இருக்கின்றது. ஆனால் எப்போதுமே நீண்ட காலத்திற்கான வைப்புத் தொகையில் முதலீடு செய்தால் தான் அதிகமான லாபம் கிடைக்கும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
எந்தெந்த தேசிய வங்கிகள் வைப்புத் தொகைக்கு அதிக வட்டி விகிதத்தை வழங்குகின்றன என்று பார்க்கலாம்.
பஞ்சாப் அன்ட் சிந்து வங்கி
தேசிய வங்கியான பஞ்சாப் அன்ட் சிந்து வங்கி 500 நாட்களுக்கான (16 வாரங்கள்) வைப்புத் தொகைக்கு 9.25 சதவீத வட்டி வழங்குகிறது. ஆனால் மற்ற குறைந்த கால வைப்புத் தொகைகளுக்கு இந்த வங்கி குறைந்த வட்டி விகிதத்தையே வழங்குகிறது. வட இந்தியாவில் இந்த வங்கி முக்கிய சேவையாற்றி வருகிறது.
ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர்
2 முதல் 3 ஆண்டுகளுக்கான வைப்புத் தொகைக்கு இந்த வங்கி 9.1 சதவீத வட்டி வழங்குகிறது. அதுபோல் 3 முதல் 5 ஆண்டுகளுக்கான வைப்புத் தொகைக்கும் இதே அளவிலான வட்டி விகிதத்தை இந்த வங்கி வழங்குகிறது. அதிகமான வட்டி விகதத்தை வழங்கும் தேசிய வங்கிகளில் ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர் 2வது இடத்தில் இருக்கிறது. தென் இந்தியாவில் உறுதியாக காலூன்றி இருக்கும் இந்த வங்கி, கர்நாடக மக்களுக்கு சிறப்பான சேவைகளை ஆற்றி வருகிறது.
ஆந்திரா வங்கி
ஆந்திரா வங்கியின் வைப்புத் தொகையில் முதலீடு செய்யப்படும் முதலீடுகளுக்கு 9 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஓராண்டுக்கு மேல் செய்யப்படும் வைப்புத் தொகைக்கு இந்த வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
ஸ்டேட் பேங்க் ஆஃப் ஹைதராபாத்
ஸ்டேட் பேங்க் ஆப் ஹைதராபாத், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் உதவி பெறும் வங்கியாகும். இந்த வங்கியில் செய்யப்படும் 1 முதல் 2 ஆண்டுகளுக்கான வைப்புத் தொகைக்கு 9 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. மேலும் பல தேசிய வங்கிகளும் வைப்புத் தொகைக்கு இதே 9 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகின்றன.