நிறுவனங்கள் டிடிஎஸ் பிடிக்காமல் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், வங்கிகளில் தாக்கல் செய்வதுபோல் படிவம் 15ஜி அல்லது படிவம் 15ஹெச்சை தாக்கல் செய்யலாம்.
நீங்கள் மூத்த குடிமகனாக இருந்து நிறுவனமானது பிடித்தம் செய்யும் வரியைக் குறைக்க வேண்டும் என விரும்பினால், அதற்குத் தக்கவாறு படிவம் 15ஜி அல்லது படிவம் 15ஹெச்சை தாக்கல் செய்யலாம்.
நீங்கள் முதலீடு செய்துள்ள நிறுவனமானது டிடிஎஸ் பிடித்தம் செய்ய வேண்டாம் என்றோ, படிவம் 15ஜி அல்லது படிவம் 15ஹெச்சை தாக்கல் செய்ய வேண்டாம் என்றோ நீங்கள் விரும்பினால், நீங்கள் உங்களது பணத்தை பிரித்து பல்வேறு நிறுவனங்களின் வைப்புத் தொகைகளில் முதலீடு செய்யலாம்.
உதாரணமாக, நீங்கள் ரூ. 1,50,000-ஐ ஒரு நிறுவனத்தில் ஆண்டுக்கு 10 சதவீத வட்டியில் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நிறுவனம் உங்களுக்குத் தர வேண்டிய வட்டித் தொகையான ரூ.15,000 ஆனது வரம்புத் தொகையான ரூ.5,000-ஐ விட அதிகமாக இருப்பதால் 10 சதவீத டிடிஎஸ் பிடித்தம் செய்ய வேண்டும்.
ஆனால் அதே ரூ. 1,50,000-ஐ நீங்கள் மூன்று நிறுவனங்களில் தலா ரூ. 50,000 வீதம் பிரித்து வைப்புத் தொகைகளில் முதலீடு செய்தால் ஒவ்வொரு நிறுவனமும் தர வேண்டிய வட்டியானது தலா ரூ. 5,000 மட்டுமே. எனவே எந்த நிறுவனமும் உங்களிடமிருந்து டிடிஎஸ் பிடித்தம் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.
உங்கள் முதலீட்டினைப் பிரித்து வெவ்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்வதால் உங்களது ரிஸ்க்கையும் நீங்கள் பிரித்துக் கொள்கிறீர்கள் என்று பொருள். நிறுவனங்களில் முதலீடு செய்வது மிக மிக ரிஸ்க் நிறைந்தது. அவை உத்திரவாதமான முதலீடுகள் அல்ல. எந்த நிறுவனத்தில் இருந்தாவது உங்களுக்கு உரிய காலத்தில் வரவேண்டிய அசலும், வட்டியும் தாமதமானால் கடினமாக உழைத்து நீங்கள் ஈட்டிய பணத்தை நீங்கள் இழக்க நேரிடலாம். கவனம்.