வரி திட்டமிடல் என்பது வரிச்சுமையை குறைக்க மேற்கொள்ளும் ஒரு உரிமையுள்ள, நேர்மையான நடவடிக்கையாகும். இது வரி விதிப்பு விதிகளில் உள்ள இணக்கமான அம்சங்களை சாதகமாக பயன்படுத்தி வரியை மிச்சப்படுத்த வகை செய்கிறது. வரியை சரியாக திட்டமிடுவதன் மூலம் நாம் பல்வேறு பிடித்தங்கள் மற்றும் விதி விலக்குகளின் பயனை முழுமையாக அடைய முடியும். வரி செலுத்தும் அனைத்து தரப்பு மக்களும், வரியை அதிகப்படுத்துவதை விட தங்களின் வருமானத்தை சேமிக்கவே ஆசைப்படுவர். அவ்வாறு சேமிப்பதற்கு வசதியாக ஒவ்வொருவரும் தங்களின் வருமானத்தை சரியான திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும்.
இந்திய வருமான வரி சட்டம் 80 சி-இன் படி ஒவ்வொரு தனி நபரும் தங்களின் வருமானத்தில் அதிக பட்சமாக ரூ. 1 லட்சம் வரை விலக்கு பெறலாம். மேலும், வருமான வரி சட்டங்கள், 80 சிசிசி மற்றும் 80 சிசிடி, நாம் ரூ. 1 லட்சத்திற்கு மேல் வரி விலக்கு பெற வழி வகை செய்கிறது. வரி விலக்குகளை அதிகப்படுத்த ஏரளமான வழிகள் உள்ளன. மருத்துவ காப்பீடு பிரீமியம், மருத்துவ சிகிச்சை, உயர் கல்வி கடனுக்கான தவணை, நன்கொடைகள், வீட்டிற்கு செலுத்தும் வாடகை, ராயல்டி வருமானம், நீண்ட கால உள்கட்டமைப்பு பத்திரங்களில் செய்யப்படும் முதலீடு ஆகியவற்றிற்கு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு வரி விலக்களிக்கப்பட்டுள்ளது. இவற்றை தவிர வீட்டு வாடகைப்படி, பணிக்கொடை, தொகுத்தளிக்கப்பட்ட ஓய்வூதிம் போன்ற சில வருமானங்களுக்கும் வரி விலக்களிக்கப்பட்டுள்ளது.
ஒரு பணியாளர் தனது சம்பளத்தை திட்டமிட வாய்ப்பு பெற்றார் எனில் அவர் பின்வரும் அம்சங்களை கருத்தில் கொள்ள வேண்டும். சம்பளமானது அடிப்படை ஊதியம் மற்றும் பல படிகளாக பிரிக்கப்பட்டிருக்க வேண்டும். இது தொகுப்பூதியத்தை விட சிறந்தது. ஏனெனில் சில படிகள் வரியிலிருந்து விலக்கு பெற்றுள்ளன.
அகவிலைப்படியை (டிஏ) ஓய்வு நலன்களின் ஒரு பகுதியாக உருவாக்க வேண்டும். இது ஒய்வு கால நன்மையை அதிகரிப்பதோடு வீட்டு வாடகைப்படி, பணிக்கொடை மற்றும் தொகுத்தளிக்கப்பட்ட ஓய்வூதியத்தினால் ஏற்படும் வரிச் சுமையை குறைக்கும். ஊழியர்கள் பெறும் கமிஷன், அடிப்படை சம்பளத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். இது வரிச்சுமையை குறைக்கும்.
பணியாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட வருங்கால வைப்பு நிதிக்கு (ஆர்பிஎப்) தங்களின் பங்களிப்பாக சம்பளத்தில் 12 சதவீதத்தை செலுத்த வேண்டும். ஏனெனில், இந்த எல்லை வரை மட்டுமே வரி விலக்கு உள்ளது.