தற்போது நிலவும் வட்டி விகிதங்களில் எவ்வித மாற்றமும் இல்லை என அறிவித்துள்ளது இந்தியன் ரிசர்வ் வங்கி. இதன் மூலம் வீட்டுக் கடன், தனி நபர் கடன், வாகனக் கடன் போன்றவற்றின் மீதான வட்டி விகிதங்கள் எளிதில் குறையப்போவதில்லை என்பதை உணரமுடிகிறது. ரிசர்வ் வங்கி, வட்டிவிகிதங்களை குறைக்காமல் இருப்பதற்கான காரணங்கள் சிலவற்றை இங்கு பார்ப்போம்.
ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
நாட்டின் வளர்ச்சியை விட, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதே ரிசர்வ் வங்கியின் முக்கிய கடமையாக உள்ளது. கடந்த வாரத்தில் வரலாறு காணாத அளவுக்கு, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 58.97 ரூபாயாக குறைந்திருந்தது. இதனால் கச்சா எண்ணெய்யை அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் போன்றவற்றின் விலைகள் மேலும் உயரக் கூடும்.
இறக்குமதியினால் உண்டான பணவீக்கம் , மொத்த வியாபார விலைக் குறியீட்டை உயர்த்தும்
கச்சா எண்ணெய்யை அதிக விலை கொடுத்து வாங்குவதால் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை அதிகளவு உயர்ந்துள்ளது. இதனால் போக்குவரத்து செலவு உயர்ந்து, இதன் மூலம் சில்லரை வணிகம் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையும் கணிசமாக உயரக் கூடும்.
அதிகமாக இருக்கும் நடப்பு கணக்குக் பற்றாக்குறை
அக்டோபர்-டிசம்பர் வரை உள்ள காலாண்டில், நிதிப்பற்றாக்குறை வரலாறு காணாத அளவிற்கு 6.7% உயர்ந்துள்ளது. இதனால் ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி அடையக் கூடும்.
அதிகரிக்கும் நுகர்வோர் விலைக் குறியீடு
தற்போது, மொத்த வியாபார விலைக் குறியீடு சற்று குறைந்திருந்தாலும், நுகர்வோர் விலைக் குறியீடு அதிகமாகவே இருக்கிறது. இது, ரிசர்வ் வங்கி எதிர்பார்க்கும் அளவை விட மிக அதிகமாக இருப்பதால், வட்டி விகிதங்களை குறைக்காமல் விட்டிருக்கலாம்.
அரசு நடவடிக்கை
ரூபாயின் வீழ்ச்சியைத் தடுக்கவும், தற்போது அதிகரித்திருக்கும் நடப்புக் கணக்கின் பற்றாக்குறையைத் தீர்க்கவும் இந்திய அரசு நடவடிக்கை எடுத்து நாட்டின் பணவீக்கத்தைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை குறைக்காமல் விட்டிருக்கலாம்.
வங்கிக் கடனின் சுமை குறையாதா என்று ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் மக்களுக்கு இது ஏமாற்றமான விஷயம் தான்.
பாமா விஜயம் படத்தில், கவியரசர் கண்ணதாசனின் வரிகள் இன்றும் எவ்வளவு சரியாக பொருந்துகிறது பாருங்களேன்.
வரவு எட்டணா...செலவு பத்தணா
அதிகம் ரெண்டனா....
கடைசியில்..... துண்டனா துண்டனா துண்டனா...!