ஒருவர் தமது வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின்பு அவருக்கு ஒரு பெரிய தொகை ஓய்வூதியமாக வழங்கப்படுவதே ஓய்வுதியத் திட்டம் என்று அழைக்கப்படுகிறது. ஓய்வூதியத் திட்டங்கள் ஏராளமாக இருப்பதால், ஒருவர் தான் விரும்பும் ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம். அதன் மூலம் அவர் ஓய்வு பெற்ற பின்பு தன் வாழ்நாள் முடியும் வரை ஒரு குறிப்பிட்ட தொகையை ஓய்வூதியமாகப் பெற முடியும்.
பல நிறுவனங்கள் ஓய்வூதியத் திட்டங்களை வெளியிட்டிருக்கின்றன. ஆனால் இந்த கட்டுரை, குறிப்பாக மியூச்சுவல் ஃபண்ட் வழங்கும் ஓய்வூதியத் திட்டங்களைப் பற்றி எடுத்துக்கூற விழைகிறது.
மியூச்சுவல் ஃபண்ட் வழங்கும் ஓய்வுதியத் திட்டம்
மியூச்சுவல் ஃபண்ட் தற்போது பலவகையான ஓய்வூதியத் திட்டங்களை வெளியிட்டிருக்கின்றன. இந்த திட்டங்கள் மிகவும் உயர்தரமானவை. இந்த ஓய்வூதியத் திட்டங்களில் இணைபவர்களிடமிருந்து பணம் வசூல் செய்யப்பட்டு அவை பங்குச் சந்தையிலும் மற்றும் கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்யப்படுகின்றன. குறிப்பாக இந்த முதலீட்டுத் தொகையிலிருந்து 40% அளவிற்கு பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது.
எனவே இந்த திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் ஒரு பெரியத் தொகையை முதலீடு செய்ய வேண்டும் அல்லது சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென் ப்ளான் (SIP)ஐத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
செயல்பாடு
மியூச்சுவல் ஃபண்ட் ஓய்வூதியத் திட்டங்கள் மற்ற மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைப் போலவே செயல்படுகின்றன. அதாவது இந்த ஓய்வூதியத் திட்டங்களில் இணைந்திருப்பவர்கள், தங்களின் பணிக்காலம் முழுவதும் முதலீடு செய்ய வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்யும் முதலீடு, பங்குச்சந்தை மற்றும் கடன்பத்திரம் போன்றவற்றில் முதலீடு செய்யப்படும். அந்த முதலீட்டிலிருந்து கிடைக்கும் வருமானத்திலிருந்து அவர்கள் ஓய்வு பெற்ற பின்பு, அவர்களின் இறப்பு வரை அவர்களுக்கு ஓய்வூதியமாக வழங்கப்படும்.
திரும்பப் பெறுதல்
ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்த பின்பு, பணி ஓய்வு பெறுவதற்கு முன்பாக முதலீடு செய்த பணத்தைப் பெறுவது சற்று கடினமான காரியம் ஆகும். மேலும் ஓய்வு பெறுவதற்கான வயது 58 என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. பணி ஓய்வு பெற்ற பின்பு முதலீட்டாளர் விரும்பும் வகையில், ஒரே நேரத்தில் ஒரு பெரிய தொகையாகவோ அல்லது மாதந்தோரும் ஒரு குறிப்பிட்ட தொகையாகவோ முதலீடு செய்த பணம் வழங்கப்படும். மேலும் பணிஓய்வு பெற்ற பின்பு, முதலீடு செய்த தொகையைத் திரும்பப் பெறவில்லை என்றால், அவை முதலீடாக எடுத்துக் கொள்ளப்பட்டு அது வளர்ந்து கொண்டே இருக்கும்.
நிறை குறைகள்
மியூச்சுவல் ஃபண்ட் வழங்கும் ஓய்வூதியத் திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் ஒரு சிறந்த முதலீட்டாளராக ஆகலாம். உங்களுடைய முதலீட்டுக்கும் நல்ல வருமானம் கிடைக்கும். குறிப்பாக உங்களுடைய முதலீட்டில் 40% பங்குச் சந்தையில் நெடுங்காலத்திற்கு முதலீடு செய்யப்படுவதால், அதில் நல்ல லாபம் கிடைக்கும்.
ஒருவேளை நீங்கள் ஓய்வு பெறுவதற்கு முன்பாக நீங்கள் முதலீடு செய்த பணத்தை எடுக்க விரும்பினால், அதற்கு மிகப் பெரியத் தொகையை வரியாகவும் மற்றும் கட்டணமாகவும் செலுத்த வேண்டும். ஆனால் நீங்கள் அவ்வாறு ஓய்வு பெறுவதற்கு முன்பாக உங்கள் பணத்தை எடுக்கவில்லை என்றால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
வரிச் சலுகை
மியூச்சுவல் ஃபண்ட் வழங்கும் ஓய்வூதியத் திட்டங்களில் முதலீடு செய்பவர்களுக்கு, ஒரு சில வரிச் சலுகைகளும் உள்ளன. வருடத்திற்கு ரூ.1 லட்சம் வரை இந்த திட்டங்களில் முதலீடு செய்பவர்களுக்கு, வருமானவரிச் சட்டம் 80சி பிரிவின்கீழ் வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. மேலும் வரிச் சலுகை பெறவேண்டும் என்றால், மற்ற நிதித் திட்டங்களைப் போலவே, 3 ஆண்டுகளுக்கு முதலீடு செய்து வரவேண்டும்.
முதலீடு செய்யும் முறை
மியூச்சுவல் ஃபண்ட் வழங்கும் ஓய்வூதியத் திட்டங்கள் சற்று வித்தியாசமானவை. மற்ற ஓய்வூதியத் திட்டங்களான பிபிஎஃப், என்எஸ்ஸி மற்றும் வரியை சேமிக்கும் எஃப்டிக்கள் ஆகியவை முழுவதும், கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படுகின்றன. ஆனால் மியூச்சுவல் ஃபண்டில் செய்யப்படும் முதலீடுகளில் இருந்து 40% பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது.
பங்குச் சந்தை
பங்குச் சந்தையில் முதலீடு செய்வது சற்று ஆபத்தானதாக இருந்தாலும், அவற்றில் நெடுங்காலம் முதலீடு செய்து வரும் போதும், அவற்றிலிருந்து, நிறைய லாபம் கிடைக்கும். ஆனால் மற்ற ஓய்வுதியத் திட்டங்கள், கடன் பத்திரங்களில் மட்டுமே முழுமையாக முதலீடு செய்யப்படுவதால், அவற்றிலிருந்து 8% அளவிற்கே லாபம் கிடைக்கும். ஆனால் நீண்ட காலத்திற்கு செய்யப்படும் முதலீட்டிலிருந்து 8% லாபம் என்பது போதுமானதாக இருக்காது.