கடன் பத்திரங்களில் முதலீடு ?
நாம் ஒருவருக்கு கடன் கொடுக்கிறோம். அந்தக் கடனைக் குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட வருவாயோடு அதனை நமக்கு திருப்பித் தருவர். கிட்ட தட்ட கடன் பத்திரங்களும் இப்படிப்பட்டவை தான்.
கடன் பத்திரங்களின் இயல்பு
1. தீர்மானிக்கப்பட்ட நிலையான வருமான விகிதம்.
2. தீர்மானிக்கப்பட்ட முதிர்வு காலம்.
3. குறைவான ரிஸ்க், குறைவான வருமானம்
4. நாம் தேர்ந்தெடுக்கும் திட்டத்தைப் பொறுத்து, எவ்வளவு விரைவில் பணமாகப் பெறமுடியும்
என்பது தீர்மானிக்கப்படுகிறது.
ஒரு சில முக்கியமான கடன் பத்திரங்களை இங்கு பார்ப்போம்.
1. நிலையான வைப்பு அதாவது ஃபிக்சட் டெபாசிட்
2. கடன் சார்ந்த பரஸ்பர நிதியம்
3. பாண்டுகள் மற்றும் கடன் பத்திரங்கள்
4. அரசாங்க சேமிப்புத் திட்டங்கள் (என்எஸ்சி, கேவிபி, பிபிஎஃப்)
கடன் பத்திரங்களில் எப்போது முதலீடு செய்ய வேண்டும்?
கடன் என்று வரும் போதே வட்டி என்ற ஒன்று கூடவே நினைவுக்கு வரும். ஆக, சந்தையில் வட்டி அதிகமாக இருக்கும் போது கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய வேண்டும். நாட்டின் பணவீக்கம் தான் வட்டியைத் தீர்மானிக்கின்றன. பணவீக்கம் எவருடைய கட்டுப்பாட்டிலும் இருப்பதில்லை. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கைகளால், கடந்த ஆண்டில் வட்டி விகிதம் மெது மெதுவாக உயரத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து சமீப காலத்தில், தன்னுடைய கொள்கையை சற்று மாற்றி அமைத்து கொண்டது ரிசர்வ். இதன் விளைவாக வட்டி விகிதம் குறையத் தொடங்கி இருக்கிறது. இருப்பினும், அது உச்ச வட்டி விகிதத்தை விட சற்று குறைவாக இருக்கிறது. ஆகையால், இந்த சமயத்தில் கடன் பத்திரங்களில் முதலீடு செய்வது நல்ல வருவாயைத் தரக் கூடும்.
எந்த முதலீடாக இருந்தாலும், அவர்கள் சொல்கிறார்கள், இவர்கள் சொல்கிறார்கள் என்று நம்பி, கண்ணை மூடிக்கொண்டு பணத்தை போடாமல், கொஞ்சம் நேரம் ஒதுக்கி, அந்த திட்டங்கள் குறித்த நன்மை தீமைகளை ஆராய்ந்த பின்னர் முதலீடு செய்வது தான் சிறந்த முதலீட்டாளர்களுக்கு அழகு.