இஎஸ்ஓபி (ESOP) என்று பொதுவாக அறியப்படும் எம்ப்ளாயீ ஸ்டாக் ஆப்ஷன் அல்லது ஈக்விட்டி இன்ஸென்டிவ் திட்டம், நிரந்தர ஊழியர்களுக்கு அவர்களின் செயல்பாட்டை அடிப்படையாகக் கொண்டு, ஸ்டாக் ஆப்ஷன்களாக நிறுவனங்களால் வழங்கப்படும் மற்றுமொரு ஊழியர் நலத் திட்டமாகும். இத்தகைய ஆப்ஷனைக் கொண்டிருப்பதனால், ஒரு நிறுவனத்தின் ஊழியர்கள் அவர்களை பணியிலமர்த்திய நிறுவனத்தின் பங்குகளை, முன்னரே தீர்மானிக்கப்பட்ட குறைவான விலையிலோ அல்லது ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குப் பின் எவ்வித விலையும் கொடுக்காமலோ வாங்குவதற்கு உரிமை அளிக்கப்படுகிறார்கள்.
இஎஸ்ஓபி விநியோகம் பொதுவாக தகுதி வாய்ந்த பணியாளர்களை தக்க வைத்துக் கொள்ளவும், பணியமர்த்தியவருக்கு நீண்ட கால சேவையை அளிக்க அவர்களை ஊக்கப்படுத்தற்கான உயரிய குறிக்கோளைக் கொண்டதாகும். ஊழியர்களுக்கு வழங்கப்படும் இஎஸ்ஓபிக்கள், தாங்கள் சார்ந்துள்ள நிறுவனத்தில் உரிமைப்பட்ட ஒரு உணர்வை அவர்களுள் விதைக்கிறது. தற்போது, இஎஸ்ஓபி விநியோகம், மனித மூலதனமே பிரதான சொத்தாக விளங்கக்கூடிய இந்திய ஐடி நிறுவனங்களிலேயே முக்கியமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இஎஸ்ஓபிக்களும் ஊழியர்களும்
இஎஸ்ஓபிக்கள், ஊழியர்களுக்கான பணி ஓய்வு நலத்திட்டமாகவும் பிரதிபலிக்கிறது. மேலும், இஎஸ்ஓபிக்கள் ஊழியர்களுக்கு அளிக்கக்கூடிய மிக முக்கியமான நன்மை யாதெனில், குறிப்பிட்ட ஒரு காலகட்டம் வரையில் பங்கு ஆப்ஷனுக்கான செயல்முறை விலையை நிலையானதாக வைத்திருப்பதே ஆகும். ஊழியர்கள் இந்த ஆப்ஷனை, சந்தை சக்திகளின் போக்கைப் பொறுத்து, செயல்முறை விலையோடு ஒப்பிடுகையில் சந்தை விலை உயர்வாக இருக்கும் தறுவாயில், தங்கள் விருப்பத்திற்கேற்ப செயல்படுத்திக் கொள்ள இயலும்.
இஎஸ்ஓபிக்களின் வருமான வரி பயன்கள்
எவ்வித நிதித்திட்டத்திற்கும் அடிப்படையாக இருக்கக்கூடியதான வரி விதிப்பு அடிப்படையிலேயே இஎஸ்ஓபிக்களும் இயங்குகின்றன. இஎஸ்ஓபிக்களை வைத்திருக்கும் ஊழியர்கள் அவற்றை விற்கும் போது மூலதன லாப வரியை மட்டும் செலுத்தினால் போதுமானது.
இஎஸ்ஓபிக்கள் மற்றும் அதனை விநியோகிக்கும் நிறுவனம்
டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கையின் தகவலறிக்கையின் படி, பெங்களூரை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பயோடெக் ஜாம்பவானாகிய பயோகானின் வழக்கைக் கருத்தில் கொண்டு, பெங்களூரு வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (ஐடிஏடி) இஎஸ்ஓபிக்களின் கீழ் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகைகள் ஊழியர்களுக்கான செலவீனமாகக் கருதப்படும் தகுதி பெறுகிறது; அதனால் அவற்றை வழங்கும் நிறுவனங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளதாகத் தெரிகிறது. மேலும், இந்தியாவில் செய்யப்படும் இஎஸ்ஓபி விநியோகம் முக்கியமாக ஊழியர்களை தக்க வைப்பதையே தன் இலக்காகக் கொண்டுள்ளதே தவிர மூலதன பங்கை உயர்த்தும் நோக்கம் எதுவும் அதற்கில்லை என்றும் இந்த பெஞ்ச் குறிப்பிட்டுள்ளது.
நிறுவனத்திற்கான வருமான வரி பயன்
சமீப காலமாக, ஊழியர்கள் தாங்களை சார்ந்துள்ள நிறுவனத்தின் பங்குகள் தங்களுக்கு விநியோகிக்கப்பட்ட போது இருந்த விலைக்கும், விநியோகிக்கப்பட்ட தேதியில் இருந்த அப்பங்குகளின் சந்தை விலைக்குமான வித்தியாசத்தினால் கிடைக்கும் அதிகப்படியான வருமானத்துக்கு உண்டான வரியை செலுத்தக் கடமைப்பட்டுள்ளனர். ஆனால் அதிகப்படியான வருமானத்திற்கான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருப்பதனால், இனி இஎஸ்ஓபிக்களை விநியோகிக்கும் நிறுவனங்கள் ஊழியர்களின் சம்பளத்திலிருந்து டிடிஎஸ் ஆக வரிப் பிடித்தம் செய்யத் தேவையில்லை.
இஎஸ்ஓபிக்களின் அந்நிய கட்டமைப்பு
அந்நிய கட்டமைப்பைப் பொறுத்த வரையில், பங்குகளின் மேம்படுத்துனர் அல்லது உரிமையாளர் பொறுப்பை கைகழுவும் பட்சத்தில், ஊழியர்கள் பொதுவாக இஎஸ்ஓபிக்களை தேர்வு செய்ய முனைகிறார்கள். இவ்வகையில், அந்நிய நாடுகளில் உள்ள நிறுவனங்கள், நிதி விரிவாக்க திட்டங்கள், கையகப்படுத்துதல், மேலும் இதுபோன்ற பிற செயல்பாடுகளில் இஎஸ்ஓபிக்களை உபயோகித்துக் கொள்கின்றன.