சென்னை: மாறிவரும் வாழ்க்கை முறையும், அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்படும் இத்தகைய சூழலில், நம்பமுடியாத அளவு உயர்ந்துள்ள மருத்துவ சிகிச்சைக்கான கட்டணங்களால், மருத்துவக்காப்பீடு என்பது ஒரு முதலீடாகவே மாறிவிட்டது. மருத்துவக்காப்பீடு எவ்வாறு நமக்கு பலனளிக்கிறது, மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களின் வகைகள் மற்றும் உரிமைகள் என்ன என்பனவற்றைத் தெரிந்துகொள்வதற்கு முன்பாக மருத்துவக் காப்பீடு என்றால் என்ன எனத் தெரிந்துகொள்வது மிக அவசியம்.
எளிமையாகச் சொல்ல போனால், நமக்கு எதிர்வரும் ஓராண்டில் ஏதாவது நோய்கள் வரலாம் அல்லது மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம் என்று நினைத்தால், குறைந்த அளவு பிரிமியத்தினை காப்பீட்டு நிறுவனங்களுக்குச் செலுத்தி, அடுத்த ஓராண்டில் ஏற்படும் மருத்துவச் செலவுகளை காப்பீட்டு நிறுவனங்களே ஏற்கச்செய்யும் திட்டமே மருத்துவக்காப்பீட்டுத் திட்டம். இதற்கு ஒருவர் முதலில் காப்பீட்டு நிறுவனங்களிடம் ஆண்டுதோறும் பிரீமியத்தினைச் செலுத்தவேண்டும்.
நீங்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்தால், நான் ஏன் மருத்துவக்காப்பீட்டுத் திட்டத்தினை தேர்ந்தெடுக்கவேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். இதற்கான விடையை தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும், பதில் கண்டிப்பாக கிடைக்கும்.
மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கான அவசியம்
தற்போது எகிறிவரும் மருத்துவ சிகிச்சைகளுக்கான கட்டணங்களும் மருந்துகளுக்கான செலவுகளும்தான் சரிசெய்யதான் இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டம். எதிர்பாராமல் ஏற்படும் உடல்நலக் குறைவுகளுக்காகவும், விபத்து, அவசர சிகிச்சைகளுக்காகவும், மருத்துவமனைக்கு செல்லும்போது உங்களால் சமாளிக்கமுடியாத அளவு மருத்துவ செலவுகளை நீங்கள் எதிர்கொள்ள நேரிடலாம். எனவே அத்தகைய நேரங்களில், மருத்துவ செலவுகளை சமாளிக்க மருத்துவக் காப்பீடு, கைகொடுக்கும். மருத்துவக்காப்பீடுகளில் இரண்டுவகையான அடிப்படைத்திட்டங்கள் உள்ளன.
தனிநபர் திட்டம்
பெயரிலேயே உள்ளதுபோல இது தனியொரு நபருக்கான காப்பீட்டுத்திட்டமாகும்.
குடும்பத்துக்கான திட்டம்
இது ஒரு குடும்பத்திலுள்ள அனைவரையும் காப்பீட்டு பயன் வரையறைக்குள் கொண்டுவருகிற திட்டமாகும். தனிநபர் திட்டத்திற்கு ஆகும் பிரீமியத்தைவிட இத்திட்டத்துக்கு சற்று கூடுதலாக பிரீமியம் செலுத்தவேண்டும். மேலும் இக்காப்பீட்டுத் திட்டம் பின்வருமாறு இரண்டு பெரிய பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
வழக்கமான திட்டம்
அதிக ஆபத்தில்லாத மற்றும் இடர் குறைந்த நோய்களும் அவற்றுக்கான சிகிச்சைகளும் இத்திட்டத்திற்குள் கொண்டுவரப்படும். இவை பொதுவாக வழக்கமான மருத்துவ ஆலோசனைகளின் அடிப்படையிலும், தேவையின் அடிப்படையிலும், முடிவு செய்யப்படும். பாலிசி எடுத்தபிறகு ஏற்படும் உடல்நலக்குறைவுகளுக்கான மருத்துவச் செலவுகள் இத்திட்டத்தில் அடங்கும். இத்திட்டத்தின் கீழ், மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் செலவுகளில் ஒரு குறிப்பிட்ட அளவு தொகையே இதன் வரம்பிற்குள் கொண்டுவரப்படும்.
சிகிச்சைத்திட்டம்
பாலிசி எடுக்குமுன் கண்டுபிடிக்கப்பட்ட நோய்களும் இத்திட்டத்தில் அடங்கும். உயிருக்கு ஆபத்தினை ஏற்படுத்தும் நோய்கள், நீண்டகாலம் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நோய்கள், அதிக மருத்துவச்செலவினை ஏற்படுத்தும் நோய்கள் ஆகியவை இத்திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
இத்திட்டத்தினால் ஏற்படும் பல்வேறுவிதமான நன்மைகள் குறித்து அறிந்துகொள்ள நீங்கள் ஆர்வம் காட்டலாம். இவற்றால் ஏற்படும் சில நன்மைகள் இதோ.
இத்திட்டத்தின் நன்மைகள்
மருத்துவக்காப்பீட்டுத்திட்டங்களில் செலுத்தப்படும் பிரீமியத்தொகைக்கு வருமான வரிச் சட்டப்பிரிவு 80டி யின் கீழ் வருமான வரி விலக்கு உண்டு.
சாதாரண பிரிவினருக்கு ஆண்டுக்கு 15,000 ரூபாய் வரையிலான பிரீமியத்துக்கும், மூத்த குடிமக்களுக்கு 20,000 ரூபாய் வரையிலான பிரீமியத்துக்கும் வருமான வரிவிலக்கு அளிக்கப்படுகிறது.
பைசா செலவில்லாமல் மருத்துவ சிகிச்சை
நீங்கள் மருத்துவக்காப்பீட்டுத்திட்டத்தில் பாலிசி எடுத்துள்ள காப்பீட்டு நிறுவனத்துடன் உடன்பாடு செய்துள்ள மருத்துவமனைகளில், பாலிசிக்கான அடையாள அட்டையை காட்டி நீங்கள் ஒரு பைசா செலவில்லாமல் மருத்துவ சிகிச்சை செய்து கொள்ளலாம். உங்களது மருத்துவச் செலவுக்கான பில் தொகையை காப்பீட்டு நிறுவனம் செலுத்திவிடும்.
அனைத்து நோய்களுக்கும் காப்பீட்டு
காப்பீட்டு நிறுவனம் நிர்ணயித்துள்ள காலத்திற்குப்பிறகு, நீங்கள் பாலிசி எடுக்கும்போது, ஏற்கனவே உங்களுக்கு இருந்த நோய்களுக்கான சிகிச்சைகளையும் தற்போதுள்ள காப்பீட்டுத்திட்ட வரம்பிற்குள் கொண்டுவர முடியும்.
பிரீமியத் தொகையில் தள்ளுபடி
நீங்கள் ஓராண்டுக்கான பிரீமியத்தை செலுத்தி ஓராண்டு முடிந்தநிலையில் எவ்விதமான மருத்துவ சிகிச்சைச் செலவினையும் ஈடு செய்யக் கோரவில்லையென்றால் அடுத்த ஆண்டுக்கான பாலிசியைப் புதுப்பிக்கும் பொழுது உங்களது பிரீமியத் தொகையில் கணிசமான தள்ளுபடி அளிக்கப்படும் அல்லது, உங்களது பாலிசியின் பயன் அளவு கணிசமான அளவு உயர்த்தி அனுமதிக்கப்படும்.
மருத்துவ செலவுகள்
ஒரு குறிப்பிட்ட வகையான பாலிசியின்படி, நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விட்டீர்கள் என்றால், உங்களது மருத்துவ செலவுகள் எவ்வளவு இருந்தாலும், நாள்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை உங்களுக்கு வழங்கப்பட்டு வரும். நீங்கள் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் (ICU) இருந்தாலும் இது பொருந்தும்.
புத்திசாலித்தனமான யோசனை
மேலே குறிப்பிட்டவற்றின் அடிப்படையில், ஒருவர் எவ்வளவுதான் உடல் ஆரோக்கியத்துடன் இருந்தாலும், மருத்துவக் காப்பீட்டு எடுத்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனமானது என்று கருதலாம். இன்னும் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் எவற்றிலாவது இணையாமல் இருந்தால், உடனே உங்களுக்கு தேவையான, வசதியான மற்றும் தகுதியான ஏதாவது ஒரு திட்டத்தினைத் தேர்ந்தெடுத்து சேருங்கள்.