சென்னை: உயர்ந்து கொண்டே போகும் பணவீக்கம், எச்சரிக்கை மணி அடித்துள்ள தற்போதய பொருளாதார சூழலில், எதிர்காலத்தில் கைகொடுக்கக்கூடிய நிதி முதலீடுகளை கவனமாகத் திட்டமிட்டு செயல்படுத்துவதல் ஒவ்வொரு குடும்பத்தலைவரின் தவிர்க்க முடியாத கடமையாகும். பெற்றோர்கள் மற்றும் விரைவில் பெற்றோர் ஆகப் போகின்றவர்களுக்கு பொருந்தக்கூடியதான இந்த சித்தாந்தம், குழந்தைகளின் வாழ்வில் வரக்கூடிய கல்வி, திருமணம் போன்ற எதிர்கால நிகழ்வுகளுக்காக திட்டமிட்டுக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாகத் திகழ்கிறது.
தமது குழந்தைகளுக்கு சிறப்பான பயனளிக்கக்கூடிய காப்பீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்ய விரும்பும் பெற்றோர்களுக்கு உதவும் நோக்கில் தற்போது புழக்கத்தில் இருக்கும் சிறந்த குழந்தை நலத்திட்டங்களை அக்கறையோடு முன்வைக்கும் முயற்சியே இந்த கட்டுரை. பின்வருமாறு விளக்கப்பட்டுள்ள சில குழந்தை நலத்திட்டங்கள் குழந்தைகளின் எதிர்கால தேவைகளை கண்டிப்பாக பூர்த்தி செய்யும் என நம்புகிறோம்.
எஸ்பிஐ லைஃப்-ஸ்மார்ட் ஸ்காலர் திட்டம்
எஸ்பிஐ வழங்கும் இந்த ULIP நலத்திட்டம், இன்சூரன்ஸ் மட்டுமின்றி சந்தை நிலவரத்தின் அடிப்படையிலான ரிட்டர்ன்களையும் வழங்கி குழந்தையின் எதிர்காலத்துக்கு பாதுகாப்பு அளிப்பதை இலக்காகக் கொண்டுள்ளது. காப்புறுதி அளிக்கப் பெற்றவர் (அஷ்யூர்ட்) இறக்க நேர்ந்தால், பிரீமியம் தொகை மட்டுமே வழங்கப்படும் என்ற வரையறைக்கு விலக்கு அளிக்கப்பட்டு, உறுதியளிக்கப்பட்ட பேஸிக் தொகை (எஸ்.ஏ) நாமினிக்கு இறப்பு உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் ஏற்கெனவே உள்ளதான எதிர்பாராத மரணம் மற்றும் எதிர்பாராத நிரந்தர குறைபாடு (டிபிடி) உள்ளிட்ட விபத்துக்களுக்கான உதவித்தொகை, எத்தகைய கூடுதல் கட்டணமும் இன்றி வழங்கப்படுகிறது. இந்த பாலிஸியை நீண்டகாலம் வைத்திருப்போருக்கு, லாயல்டி நலன்களாக, மேலும் பல இலவச யூனிட்கள் வழங்கப்படுகின்றன.
ரிட்டர்ன்களை அள்ளி தரும் திட்டம்
ஒன்பது வகையான வெவ்வேறு நிதிகள் மூலம் செயல்படுத்திக் கொள்ளக்கூடிய எண்ணற்ற முதலீட்டு வாய்ப்புகள் இருப்பதினால் இந்த பாலிஸி முதலீட்டாளருக்கு கிடைக்கக்கூடிய சராசரி ரிட்டர்ன்களை அதிகரிக்க முற்படுகிறது. இந்த அதிகரிக்கப்பட்ட ரிட்டர்ன் தொகை, உயர்ந்து கொண்டே இருக்கும் பணவீக்க விகிதத்தை ஈடு செய்வதோடு, எதிர்காலத்தில் மேலும் உயரக்கூடியதான குழந்தையின் படிப்புச் செலவிற்கும் மிகவும் உபயோகமாக இருக்கும். பார்ஷியல் வித்டிராயல் முறையின் மூலம் லிக்விடிட்டி ஆப்ஷனும் வழங்கப்படுகிறது.
ஐசிஐசிஐ ப்ரு ஸ்மார்ட்கிட் ரெகுலர் பிரீமியம்
ஐசிஐசிஐ வழங்கும் எண்டோமென்ட் ரெகுலர் பிரீமியம் கொண்ட திட்டமான இது, குழந்தையின் கல்விக்கான நிதித் தேவைகளை நிறைவேற்றக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சேர குறைந்த பட்ச பிரீமியம் தொகையான 8,400 ரூபாயை வருடத்திற்கொரு முறை கட்ட வேண்டும். காப்புறுதி அளிக்கப்பட்டவரின் (பெற்றோர்) எதிர்பாராத மரணத்திற்குப் பின்னும் நிறுவனத்தின் பங்களிப்பைக் கொண்டு இந்த பாலிஸி மெச்சூரிட்டி காலம் வரையில் அப்படியே தொடரப்படும். கூடுதலாக, ஒவ்வொரு வருடமும், டெவலப்மெண்ட் அலவன்ஸாக ஒரு குறிப்பிட்ட அளவு தொகையையும் நிறுவனம் அளிக்கும்.
மிகவும் நெகிழ்வான திட்டம்
இந்த நெகிழ்வான திட்டம், பாலிஸிதாரர்கள் குழந்தையின் படிப்பு செலவுக்கோ அல்லது சமூகப் பொறுப்புகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு, சீரான இடைவெளிகளிலோ அல்லது பாலிஸியின் காலவரையறை முடிவடையும் தருவாயிலோ, அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப பலன்களை உபயோகித்துக் கொள்ள அனுமதிக்கிறது. இத்திட்டம், குறைபாடு மற்றும் விபத்து ஆகியவற்றுக்கு எதிரான கூடுதல் பாதுகாப்பை மேலதிகக் கட்டணத்தில் வழங்குகிறது. காப்புறுதி அளிக்கப்பட்டவரின் இறப்புக்குப் பின் நாமினிக்கு வருடத்திற்கு ஒரு முறை எஸ்.ஏ தொகையில் சுமார் 10% வரையிலான தொகையை வழங்குவது, ஸ்மார்ட்கிட் ஆர் பிரீமியம் திட்டத்தில் காணப்படும் மற்றொரு வருமான நற்பலன் ரைடர் ஆகும்.
எல்ஐசியின் ஜீவன் அனுராக்
எல்ஐசி வழங்கும் இந்த குழந்தை நலத்திட்டம், லாபமளிக்கும் ஒரு பாலிஸியாகும். இத்திட்டம் பாலிஸிதாரர் உயிரோடு இருந்தாலும் இல்லாவிட்டாலும், முன்னரே நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசங்களில் பலன்களை அளிக்கக்கூடியதாகும். இந்த பாலிஸியின் தவணைக்காலத்தின் போது, காப்புறுதி அளிக்கப்பட்டவர் எதிர்பாராத விதத்தில் இறக்க நேர்ந்தால், உறுதியளிக்கப்பட்ட பேஸிக் தொகை உடனடியாக வழங்கப்படுகிறது. தவணைக்காலத்தின் முடிவில் கட்டாயம் அளிக்கப்படுவதாக உறுதியளிக்கப்பட்ட பலன்கள், அதாவது எஸ்.ஏ தொகையில் குறிப்பிட்ட சதவீதம் + போனஸ்கள், குழந்தையின் மேற்படிப்புச் செலவுகளுக்கான நிதித் தேவைகளுக்கு உபயோகப்படக் கூடியவை ஆகும்.
அசத்தும் திட்டம்
மேலும், முதல் மூன்று வருடங்களுக்கு மட்டுமே பிரீமியம் செலுத்தப்பட்டு, அதன் பின்னர் செலுத்தப்படாமல் இருந்தாலும் இந்த பாலிஸி செயலிழப்பதில்லை. ஆனால், இத்தகைய சூழலில் உறுதியளிக்கப்பட்ட தொகை, செலுத்தப்பட்ட தொகையாகக் குறைக்கப்படும். இந்த பாலிஸி கடுமையான நோய் தாக்குதல் மற்றும் தவணைக்கால இன்சூரன்ஸ் போன்றவற்றுக்கான விதிகளையும் உள்ளடக்கியுள்ளது. இப்பலன்களை, பாலிஸிதாரர்கள் தம் தேவையைப் பொறுத்து, வேண்டிய போது உபயோகித்துக் கொள்ளலாம்.
நேஷனல் இன்சூரன்ஸ் வித்யார்த்தி-மெடிகிளெயிம்
இத்திட்டம் மாணவர்களுக்கு மருத்துவ மற்றும் விபத்து காப்பீட்டை வழங்குகிறது. பாதுகாப்பாளருக்கு இறப்பு அல்லது நிரந்தர குறைபாடு நேரும் பட்சத்திலும், இத்திட்டம் மாணவரின் படிப்பை தொடர்வதற்கு உதவுகிறது. மாணவர்கள் ஏதேனும் நோயினாலோ அல்லது விபத்தினாலோ பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், அவருக்கான மருத்துவ காப்பீடும் வழங்கப்படுகிறது.
மாணவர்களுக்கான மருத்துவ காப்பீடு
மாணவர்களுக்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் மருத்துவ முறையோடு தொடர்புடைய கட்டணங்களான மருத்துவமனையில் தங்குவதற்கான கட்டணம், கன்ஸல்டேஷன் கட்டணம், ஆபரேஷன் தியேட்டர் மற்றும் இதர மருத்துவ சாதனங்களின் உபயோகத்துக்கான கட்டணங்கள் போன்றவற்றை நிறுவனம் ஏற்றுக் கொள்கிறது. கிளெயிம் செய்யப்படாத ஒவ்வொரு வருடமும், உறுதியளிக்கப்பட்ட தொகை 5% விகிதத்தில் படிப்படியாக கூடிக் கொண்டே வரும். காப்புறுதி அளிக்கப்பட்டவருக்கு ஏற்படக்கூடிய காயங்கள் விபத்தினால் மட்டுமே ஏற்பட்டிருப்பின், இந்த பாலிஸி முன்னரே நிர்ணயிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட தொகையை அவருக்கு வழங்குகிறது. மேலும், இது போன்ற பல இக்கட்டான சூழ்நிலையின் போதும், இன்சூர் செய்யப்பட்ட தொகையை நிறுவனம் வழங்குகிறது.
எல்ஐசி ஜீவன் அன்கூர்
எல்ஐசி வழங்கும் இந்த குழந்தை நலத்திட்டத்தை, 17 வருடங்களுக்குக் குறைவான வயதுடைய குழந்தைகளின் பெற்றோர் மட்டுமே தேர்வு செய்ய முடியும். சிங்கிள் மற்றும் ரெகுலர் பிரீமியம் மோட்கள் கொண்ட இந்த பாலிஸி, காப்புறுதி அளிக்கப்பட்டவர் இருந்தாலும் இல்லாவிட்டாலும், குழந்தையின் தேவைகள் நிறைவடையும் வண்ணம் செயல்படக்கூடியதாகும். பெற்றோருக்கு அபாயக் காப்பீடு வழங்குவதோடு குழந்தையை நாமினியாக நியமிக்கவும் அனுமதிக்கும் இந்த பாலிஸி, குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகையாக 1 லட்சம் ரூபாயையும், அதிகபட்சமாக வரையறுக்கப்பட்ட தொகை என்று எதுவும் இன்றியும் செயல்பட்டு வருகிறது. இந்த பாலிஸியின் தவணைக்காலம், மெச்சூரிட்டி காலத்தின் போது இருக்கக்கூடிய குழந்தையின் வயதைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது.
ஆண்டிற்கு பாலிசியில் 10% தொகையை பெறலாம்
இந்த பாலிஸி, காப்புறுதி அளிக்கப்பட்டவரின் மறைவுக்குப் பின் பேஸிக் எஸ்.ஏ தொகைக்கு சமமான ஒரு தொகையை நாமினிக்கு வழங்குகிறது. கூடுதலாக, இதன் தவணைக்காலத்தின் முடிவு வரையிலும், வருடத்துக்கொருமுறை நாமினி, எஸ்.ஏ தொகையில் சுமார் 10% வரையிலான தொகையைப் பெறுவார். ஒருவேளை குழந்தை அல்லது இப்பாலிஸியின் நாமினியாக நியமிக்கப்பட்டவர் இறக்க நேர்ந்தால், காப்புறுதி அளிக்கப்பட்டவர் தனது மற்றொரு குழந்தையையோ அல்லது வாரிசாக தேர்ந்தெடுக்கப்பட்டவரையோ நாமினியாக நியமித்து இந்த பாலிஸியைத் தொடரவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த பாலிஸியை வைத்திருப்பதற்கான லாயல்டி நலன்களும் இதன் ஒரு பகுதியாக மெச்சூரிட்டி காலத்தின் போது அளிக்கப்படுகின்றன. கொடிய நோய் மற்றும் விபத்துக்களுக்கான ரைடர்களும் கூடுதல் கட்டணத்தில் வழங்கப்படுகின்றன.