சென்னை: ஒரு ‘பெரும்தொகையை' வங்கிக்கடனாக பெற முயற்சிக்கும்போது ஆபத்பாந்தவனாக நமக்கு கை கொடுப்பது ஜாயிண்ட் லோன் நடைமுறை தான். சுலபமாக நமது கடன் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு நாம் விரும்பும் கடனைப்பெறுவதற்கு இந்த நடைமுறை உதவும் என்றுதான் நாம்நினைத்துக் கொண்டிருக்கிறோம். இருந்தாலும் ஜாயிண்ட் லோன் விண்ணப்பத்தை அளிக்கும் இரு நபர்களின் ‘கிரடிட் ஸ்கோர்' நிலையை இந்த வசதி எப்படியெல்லாம் பாதிக்கும் என்பதை இங்கு பார்ப்போம்.
ஒரு விண்ணப்பதாரரின் ‘கிரடிட் ஸ்கோர்' மிகக்குறைவாக இருந்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்பதுதான் அடிப்படை உண்மை. மேலும் ஜாயிண்ட் லோன் வாங்கும்போது கிடைக்கும் டாக்ஸ் நன்மைகளை பற்றியும் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.
கேஒய்சி விண்ணப்பம்
எல்லா வங்கிகளுமே ஜாயிண்ட் லோன் விண்ணப்பத்தை பரிசீலிக்கும்போது கேஒய்சி எனப்படும் ‘நோ யுவர் கஸ்டமர்' எனும் நடைமுறையை அமல்படுத்தி விண்ணப்பதாரர்களின் கிரடிட் பின்னணி போன்றவற்றை பரிசீலனைக்கு உள்ளாக்கும் என்பதை மனதில் கொள்வதோடு நாம் அந்த நடைமுறைகளுக்கான முன் தயாரிப்புடன் வங்கியை நாடுவது சிறந்தது.
அனுமதி
இது போன்ற கடன் விண்ணப்பங்களை பரிசீலிக்கும்போது வங்கிகள் நமது வருவாய் வழிகள், கொலாட்டரல் செக்யூரிட்டி மற்றும் அதிகபட்சமான ‘கிரடிட் ஸ்கோர்' போன்றவற்றின் அடிப்படையில் கடனுக்கான அனுமதி வழங்குகின்றன.
கூட்டு கணக்கு
எனவே உங்கள் வாழ்க்கைத்துணை, தாய் தந்தை, நண்பர் அல்லது நெருங்கிய உறவினர் ஆகியோரை ஜாயிண்ட் விண்ணப்பதாரராக கொண்டு அதிக தொகைக்கான கடனுக்கு விண்ணப்பிப்பது சிறந்தது.
கடனைத்திருப்பிச் செலுத்துதல்
இருப்பினும் ஒரு விஷயத்தை மறந்துவிடக்கூடாது. அதாவது, கடனைத்திருப்பிச் செலுத்துவதற்கு எல்லா விண்ணப்பதாரர்களுமே பொறுப்பு உடையவர்களாக வங்கி எடுத்துக்கொள்ளும்.
பொறுப்புகள்
கடன் விதிமுறைகளின்படி கடனைத்திருப்பிச்செலுத்தும் பொறுப்பு பிரதான (ப்ரைமரி) கடன் தாரரையே சார்கிறது. அவர் அந்த பொறுப்பில் தவறும் பட்சத்தில், அதாவது EMI தவணைகளை சரியான தேதிகளில் கட்டாமல் போகும்போது, இரண்டாவது கடன் தாரர் வசம் அந்த பொறுப்பு வந்து சேரும்.
பாதிப்பு
எனவே எப்படி பார்த்தாலும் தவணைகள் சரிவர கட்டப்படாத பட்சத்தில் அது இருவருடைய ‘கிரடிட் ஸ்கோர்' மதிப்பையும் இறக்கிவிடுகிறது. ஒருவேளை தம்பதிகள் மணமுறிவு பெற்று பிரிந்து வாழ்ந்தாலோ, வியாபார ஒப்பந்தங்கள் முறிந்து போயிருந்தாலோ கூட அந்த தனிப்பட்ட விஷயங்களுக்கு வங்கி அமைப்புகள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. கூட்டு விண்ணப்பதாரர்கள் அனைவரையுமே கடன் தொகையை திரும்பச்செலுத்துமாறு அது நெருக்கடி கொடுக்கும்.
கிரடிட் ஸ்கோர்
எனவே, கூட்டு கடன் பெற்றவர்களின் தனிப்பட்ட ‘கிரடிட் ஸ்கோர்' இறங்காமல் இருக்கவேண்டும் என்றால் அந்த கடனுக்கான தவணைகளை தவறாமல் கட்டிவருவது அல்லது அப்படி கட்டப்படுவதை உறுதி செய்துகொள்வது மிக அவசியம்.
புதுப்பித்தல்
மேலும் வங்கிகள் ஜாயிண்ட் லோன் சம்பந்தமான சில விதிமுறைகளை மாற்றியமைக்கும்போது அவற்றை தெரிந்துகொண்டு புதிதான சேவைக்கட்டணங்கள் அல்லது பாக்கிகள் ஏதுமிருப்பின் அவற்றை காலாகாலத்தில் செலுத்திவிடுவதும் சிறந்தது.