சென்னை: வீட்டுக் கடன், கல்விக் கடன் போன்றவற்றில் கடன் தொகை மொத்தமாக தரப்படாமல் வெவ்வேறு கட்டங்களில் பகுதிகளாகப் பிரித்து வழங்கப்படுகிறது. இவ்வகைக் கடன்களில் கடனைத் திருப்பி செலுத்துவதில் இரண்டு முறைகள் உள்ளன.
மொத்த கடன் தொகையும் பெறப்பட்ட பின் திருப்பி செலுத்தும் காலம் தொடங்கும். உதாரணமாக கல்விக் கடனில், ஐந்து ஆண்டு படிப்பு எனில் ஒவ்வொரு ஆண்டும் கல்விக் கட்டணம் செலுத்த கடன் வழங்கப்படும். ஐந்து ஆண்டுக் கல்வி முடிந்து வேலைக்குச் சென்ற பிறகு ஈஎம்ஐ மூலம் கடனைத் திருப்பி செலுத்தத் தொடங்க வேண்டும். இடைப்பட்ட காலத்தில் பெற்ற தொகைக்கு வட்டி மட்டும் செலுத்தினால் போதும்.
மற்றொரு முறையில் கடனின் முதல் பகுதியைப் பெற்றவுடன் ஈஎம்ஐ மூலம் கடனைத் திருப்பி செலுத்தத் தொடங்கிவிட வேண்டும். உதாரணமாக, வீடு கட்ட வழங்கப்படும் கடனில், அடித்தளம் போட முதல் பகுதி கடன் பெற்றவுடன் முழுக் கடன் தொகைக்குமான வட்டியுடன் சேர்த்து ஈஎம்ஐ-யை செலுத்தத் தொடங்கிவிட வேண்டும். இதுவே முன் ஈஎம்ஐ வட்டி எனப்படுகிறது.
வீட்டுக் கடன்:
வீட்டுக் கடனைப் பொறுத்தவரை மேற்கண்ட இரண்டு முறைகளுமே அனுமதிக்கப்படுகின்றன. முன் ஈஎம்ஐ வட்டி செலுத்தும் வசதி, கடன்தொகை பிரித்து வழங்கப்படும் திட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும். வீடு கட்டக் கடன் தரும் பெரும்பாலான நிதி நிறுவனங்களில் முன் ஈஎம்ஐ வட்டி செலுத்தும் முறை அனுமதிக்கப்படுகிறது.
முதலிலிருந்தே ஈஎம்ஐ செலுத்தத் தொடங்கி விடுவது அல்லது முழுக்கடனும் பெற்று முடியும் வரை வட்டி மட்டும் செலுத்தி விட்டு அதன் பிறகு ஈஎம்ஐ கட்டத் தொடங்குவது, இரண்டில் எது சிறந்தது?
முழு ஈஎம்ஐ முதலிலிருந்தே செலுத்துவது நீண்ட கால அடிப்படையில் பார்த்தால் லாபகரமானது. ஏனெனில் முதல் நாளிலிருந்தே கடனின் அசல் தொகை குறைய ஆரம்பித்துவிடுகிறது. வீடு கட்டி முடிக்கும் தருணத்தில் கடனின் பெரும்பகுதி கழிந்திருக்கும். ஆனாலும் கட்டிடம் கட்டி முடிக்கத் தாமதம் ஆகும் பட்சத்தில், கடன் பெறுபவர், இன்னும் வாங்காத கடன் தொகைக்கும் சேர்த்து வட்டியை செலுத்தும்படி ஆகிவிடும். வீடு கட்டி முடித்தவுடன் விற்கப் போவதாக இருந்தால் இந்த முறை லாபகரமானதாக இருக்கும்.
முன் ஈஎம்ஐ கடன் செலுத்தும் முறையின் மற்ற குறைபாடுகள்:
கடைசி கட்டத் தொகையை பெறும்வரை வட்டி மட்டும் செலுத்தும் முறையில் தொகை சிறிதாக இருந்தாலும் கடன் செலுத்தும் கால அளவு மிக நீண்டதாக இருக்கும். மாறாக, முழு ஈஎம்ஐ முதலிலிருந்தே செலுத்தும் முறையில் கடன் செலுத்தும் காலம் குறைவதோடு கடன் தொகையும் குறைந்து கொண்டே வருகிறது.
வட்டி மட்டும் செலுத்தும் முறையில் கட்டடம் கட்டும் வேலை நடந்து கொண்டிருக்கும் போது செலுத்தப்படும் வட்டித் தொகைக்கு வரிவிலக்கு கிடையாது. இருப்பினும் இதை ஒரு பெரிய விஷயமாகக் கருத வேண்டியதில்லை. ஏனெனில் வரிவிலக்கைக் கணக்கிடுவதில் இரண்டு முறைகளிலும் அதிக வித்தியாசமில்லை. அதாவது, கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட பின்னால் எவ்வளவு வட்டி செலுத்தப்பட்டுள்ளதோ அது மட்டுமே ஐந்து சமபகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.