சென்னை: குழந்தைகளுக்காக பெற்றோர் படும் பாடு சொல்லி மாளாது. பெருகிவரும் செலவினங்களின் மத்தியில், அவர்களுக்கு நாம் சிறந்த வாழ்வை அளிக்க நம்மால் முடிந்த வரை முயற்சி செய்கிறோம். உங்கள் பிள்ளைகளின் பெயரில் நீங்கள் செய்யும் செலவுகள் மற்றும் முதலீடுகளுக்கு வரியை சலுகை உண்டு, இதை பற்றி உங்களுக்கு தெரியுமா?? இத்தகைய சலுகையின் மூலம் நாம் செலுத்தும் வரித் தொகையில் பெரும் பகுதியை சேமிக்கலாம்.
கல்விக்கடன் மீதான வட்டி
கல்விச் செலவுகள் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், இவற்றை திட்டமிடுவது இன்றியமையாததாகிறது. நம்மில் பலர் நம் குழந்தைகளில் மேல் படிப்பிற்காக கடன் வாங்க விரும்புவோம். இதை திருப்பிச் செலுத்துவது பெரும் சுமையாக இருக்கையில், இதன் மீது செலுத்தப்படும் வட்டியானது வருமான வரிச்சட்டப் பிரிவு 80 படி முற்றிலும் விலக்கான ஒன்றாதலால் இது நமக்கு ஆதாயமாக அமையும்.
கல்விக் கட்டணம்
நாட்டிலுள்ள பெரும்பாலான பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டணமாக நிர்ணயித்துள்ளன. இதற்கு பிரிவு 80Cயின் படி ரூபாய் 1 லட்சம் அளவிற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வரிவிலக்கு நம்மை சார்ந்துள்ள இரண்டு குழந்தைகளுக்கான படிப்பு செலவுக்கு மட்டும் பொருந்தும். மேலும் இது குறிப்பாக கல்விக் கட்டணத்திற்கு மட்டுமே பொருந்தும். ஆனால் கணவர் மற்றும் மனைவி ஆகிய இருவருக்கும் தனித்தனியாக இரு குழந்தைகளுக்கான செலவிற்கு விலக்கு உண்டு.
ஆரோக்கியக் காப்பீடுப் பிரிமியம்
ஹெல்த் இன்சுரன்ஸ் எனப்படும் காப்பீட்டுத் திட்டத்தில் நாம் நம் குழந்தைகளுக்காக சேரும்போது அதன் பிரிமியத் தொகையை ரூபாய் 15,000 அளவிற்கு வரிவருமானத்தில் 80D பிரிவின் கீழ் விலக்கு பெறலாம்.
மருத்துவச் செலவுகள்
பெற்றோர் தங்கள் குழந்தைக்கு ஏற்படும் சில ஆரோக்கியக் குறைபாடுகள் மற்றும் நோய்களுக்காக செய்யும் மருத்துவச் செலவுகளை இரண்டு பிரிவுகளின் கீழ் வரிவிலக்கு கோரலாம்.
பிரிவு 80DD-யின் படி, நோய்வாய்ப்பட்டுள்ள அல்லது குறைபாடுள்ள குழந்தைகளுக்கான மருத்துவச் செலவுகளுக்கு விலக்கு உண்டு. இந்த விலக்கு வரம்பு சாதாரண குறைபாடுகளுக்கு (அதாவது குறைந்தபட்சம் 40 சதவிகித உடற்கூறு குறைபாடு) 50,000 ரூபாயும், தீவிர குறைபாடுகளுக்கு (அதாவது 80 சதவிகிதம் அல்லது அதற்கு மேல்) 1 லட்சம் ரூபாயும் ஆகும்.
பிரிவு 80DDB-யின் படி குழந்தைகளின் சில குறிப்பிட்ட நோய்கள் மற்றும் குறைபாடுகளுக்கான மருத்துவ செலவுகளில் ரூபாய் 40,000 வரை விலக்கு அளிக்கப்படும்.
சம்பளப் படிகளில் விலக்கு
வரிச் சட்டத்தில் ஒரு பணியாளருக்கு குழந்தை தொடர்பான செலவுக்காக அவர் பணிபுரியும் நிறுவனம் வழங்கும் சில விலக்கு அளிக்கிறது. இதில் முதலில், குழந்தைகள் ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் செலவுக்கு ஒரு குழந்தைக்கு ஒரு மாதத்திற்கு 300 ரூபாய் என அதிகபட்சம் இரு குழந்தைகளுக்கும், கல்விச் செலவுப்படியாக ஒரு மாதத்திற்கு ஒரு குழந்தைக்கு 100 ரூபாய் என அதிகபட்சம் இரு குழந்தைகளுக்கும் விலக்கு அளிக்கப்படுகிறது.
மருத்துவத்தை பொருத்தவரையில், குழந்தைகளுக்கான மருத்துவ செலவுகளுக்கு ரூபாய் 15000 வரை விலக்கு போதுமான ரசீதுகள் சமர்ப்பித்தால் தரப்படுகிறது.
மைனர் குழந்தைகளின் வருமானம்
நாம் நம் குழந்தைகளின் பெயரில் முதலீடுகளைச் செய்யும்போது அவற்றிலிருந்து கிடைக்கும் வருமானமானது நம் வருமான வரிக்கணக்கில் சேர்க்கப்படுகிறது. அந்த குழந்தை மைனராக இருக்கும் பட்சத்தில் அந்த முதலீட்டிலிருந்து கிடைக்கும் வருவாயில் ஒரு குழந்தைக்கு சுமார் 1500 ரூபாய் என இரு குழந்தைகள் வரை விலக்கு உண்டு. எடுத்துக்காட்டாக, நாம் ரூபாய் 15000 வரை உள்ள வைப்புகளில் முதலீடு செய்து அதன் வட்டி ஆண்டுக்கு 10 சதமாக இருக்குமானால், அது வருமான வரியிலிருந்து விலக்கப்படும்.
அறக்கட்டளைகளை நிறுவுதல்
நாம் மைனராக உள்ள நம் குழந்தைகளின் பெயரில் அறக்கட்டளைகள் நிறுவுவதன் மூலம் வரியை சேமிக்கலாம். அதற்கு திரும்பப் பெற இயலாத ஒரு தொகையை அந்த அறக்கட்டளைக்கு அளித்து திரும்பப் பெற இயலாதவாறு செய்யப்பட வேண்டும். இது போன்ற அறக்கட்டளைகளில் செய்யப்படும் முதலீட்டின் மூலம் ஈட்டப்படும் வருமானம் நம் வருமானத்தோடு சேர்க்கப்படமாட்டாது. அந்த அறக்கட்டளை வருமான வரி செலுத்த நேர்ந்தாலும் மொத்த வரியானது அந்த அறக்கட்டளையின் வருவாய் நம் வருவாயோடு சேர்க்கப்படும் போது குறையும்.