சென்னை: தற்பொழுது யாரும் பணத்திற்காக வங்கியில் கால் கடுக்க நிற்க வேண்டிய அவசியம் இல்லை. ஏடிஎம் மெஷினில் இருந்து எளிமையாக பணத்தை எடுத்து கொள்ள முடிகின்றது. இதனால் நம் நேரமும் சேமிக்கப்படுகிறது. எங்கு சென்றாலும் பணம் பெற்றுக் கொள்ளலாம் என்ற வகையில், எல்லா முக்கியமான இடங்களிலும் ஏடிஎம் மையங்கள் உள்ளன.
இத்தனை வசதி இருந்தாலும் அதில் சில பிரச்சனையும் உள்ளது. சில நேரங்களில் நாம் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க முயற்சிக்கும் போது பணம் வராமல் பணம் பெற்று கொண்டதாக தகவல் வரும். இந்நிலை மக்களின் மன நிலையை பற்றி சொல்லவே வேண்டாம் படு மோசமாக இருக்கும்.
உடனே நாம் அதிர்ச்சி அடைய தேவையில்லை. வங்கிகள் மக்களுக்காகவே உள்ளன. எனவே பயம் இல்லாமல் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு காண்போம்.
பணத்தை திரும்ப பெற வேண்டிய கால அளவு
ஒருவருக்கு ஏடிஎம் இயந்திரத்திலிருந்து பணம் வராமலேயே பணம் பெற்றதாக தகவல் வந்து, வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட வங்கி அதற்கான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என்பது சட்டம். இந்த புகாரின் மூலம் உங்கள் பணம் பாதுகாக்கப்பட்டது என்றே அர்த்தம்.
7 நாட்கள் கெடு
இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறை படி வங்கிக்கு புகார் வந்த ஏழு நாட்களுக்குள் பணம் தரப்பட வேண்டும்.
நஷ்ட ஈடு
ஏழு நாட்களுக்கு மேல் ஆனால் கஸ்டமருக்கு நஷ்ட ஈடு கிடைக்குமா? கண்டிப்பாக கிடைக்கும். ஜூலை ஒன்று, 2011 ஆம் ஆண்டிலிருந்து இச்சட்டம் அமலுக்கு வந்திருக்கின்றது. அதாவது ஏழு நாட்களுக்கு மேல் கஸ்டமருக்கு பணம் கிடைக்க வில்லையென்றால் நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும் என்று விதி உள்ளது.
புகார்
ஏடிஎம் பிரச்சனை நடந்த முப்பது நாட்களுக்குள் புகார் அளிக்க படாவிட்டால் அதற்கு வங்கி எந்த வகையிலும் பொறுப்பு இல்லை. புகார் கொடுத்த பின்னும் ஒன்றும் நடக்க வில்லையென்றால் கஸ்டமர் வங்கி புகார் நிலையத்திற்கு செல்லலாம்.