சென்னை: பணம் வரும் காலத்தில் அதன் பயனை நன்குணர்ந்து முதலீடு செய்வதால் லாபத்தையும் வெற்றியையும் அடைய முடியும். பணத் தேவையை அறிந்து செயல்படுவதுடன் எது முக்கிய தேவை என்பதை அறிந்து செயல் பட வேண்டும். எனவே நீங்களும் பட்ஜெட் பத்பனாபன் ஆக வேண்டுமா?? முதலில் உங்கள் தேவையையும் இலக்கையும் கண்டு பிடியுங்கள்.
பட்ஜெட் போடுவது என்பது மிகவும் சுலபமான காரியம் இல்லை. நம் பணத்தேவையை சீராக ஆராய வேண்டும். முக்கிய தேவை எதற்கு என்பதை நன்கு உணர வேண்டும். பலர் தேவையற்ற செலவுக்கு அதிக பணத்தை ஒதுக்கி முக்கிய தேவைக்கான பணம் கிடைக்காமல் அலைவதுண்டு. சிலர் எது தற்பொழுது முக்கிய தேவை என்பதையே அறியாமல் இருப்பர். இதனால் முறையான வகையில் பட்ஜெட் போட முடியாமல் அவதிக்கு உள்ளாகின்றனர். எது முக்கிய தேவையோ அதற்கு பணம் ஒதுக்கு சாதுரியம் தேவை.
தற்பொழுது பிள்ளைகளுக்கான பள்ளிக்கூட கட்டணம் அனைத்து தேவைகளை விட உயர்வாக உள்ளது. அது போன்று பிஸினஸ் செய்பவர்களுக்கு எதிர்பாராத பணத் தேவை இருக்கும். இப்படி பல வித தேவைகள் நமக்கு இருந்தாலும் எது நமக்கான முக்கிய தேவை என்பதை அறிந்து கொள்ள வேண்டும். பின்பு அதை பட்டியலிட வேண்டும். அதன் பின் ஒவ்வொன்றாக செயல்படுத்தினால் வெற்றி காண முடியும்.
நம் அன்றாட தேவையை பாதிக்காத படி நம் வாழ் நாள் தேவையை வளர்க்கும் சில் டிப்ஸ் இங்கே உங்களுக்காக.
முக்கிய இலக்கை கண்டுபிடியுங்கள்
உங்கள் நிதி நிலைமையை பற்றி உங்கள் கனவு இலக்கை உங்களால் அடைய முடியாமல் போகக் கூடும். ஆகையால் உங்கள் இலக்கை கண்டு பிடியுங்கள். அதில் தெளிவடையுங்கள். பின் எது மிக முக்கியம் என்பதை கண்டு பிடியுங்கள். தெளிவான கவனத்தால் உங்கள் இலக்கை அடையும் வாய்ப்பு உங்கள் கை தேடி வரும்.
இலக்கை அடைய கவனம் தேவை
எது உங்களின் முதன்மையான தேவை என்பதை கண்டுபிடியுங்கள். தேவையில்லாத மற்றும் தற்பொழுது முக்கியமில்லை என்று இருக்கும் இலக்குகளின் மீது கவனம் செலுத்துவது அவசியம் அற்றது. அதை விடுத்து எது முக்கியமோ அதன் மீது கவனம் செலுத்துங்கள்.
முரண்பாடுகளை எதிர் கொள்ள தயாராகுங்கள்
நல்ல இலக்குகள் கூட சில சமையங்களில் பல இன்னல்களையும் முரண்பாடுகளையும் அடையக் கூடும். அப்படி முரண்பாடு வரும் சமயங்களில் உங்களுக்குள் சில கேள்விகளை கேட்டு கொள்ளுங்கள். அதாவது, முரண்பாடுகளில் ஏதாவது ஒன்று மற்றொன்றை விட கூடுதல் லாபம் தருமா? என்பதை பற்றி ஆராய வேண்டும். எந்த இலக்கை விடுத்தால் அதிக லாபம் அடைய முடியும் என்றும் எந்த இலக்கை விடுத்தால் நஷ்டம் வரும் என்றும் தெளிவாக ஆராய வேண்டும்.
வயதையும் காலத்தையும் வீணாக்க வேண்டாம்
உங்கள் இலக்கை அடைய உங்கள் வயதும் காலமும் மிக மிக முக்கியம். காலம் பொன் போன்றது, காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்ற பல பழமொழிகளை நாம் அறிந்திருப்போம். ஆமாம், சரியான காலத்தில் செய்யாத காரியம் எல்லாமே வீண் தானே. இளம் வயதினர் சாதிப்பது போன்று முதுமை வயதில் சாதிப்பதில் கடினமாகஇருக்கும் என்பதால், இளமைக் காலத்திலேயே உங்கள் இலக்கை நிர்ணயம் செய்து முன்னேற்றம் அடையுங்கள். ஒரு சில முதலீடுகள் இளம் வயதில் முதலீடு செய்வதால் பெரும் லாபத்தை பெற்று தரும். ஆகவே காலத்தையும் வயதையும் வீணாக்க வேண்டாம்
கவனமாக தேர்வு செய்யுங்கள்
உங்கள் இலக்கை தேர்வு செய்யும் பொழுது மிகவும் கவனமாக இருத்தல் அவசியம். முக்கிய இலக்குகளை பட்டியல் படுத்துங்கள். எது தேவையோ அதை முதன்மை பட்டியலில் வையுங்கள். பிள்ளைகளின் வகுப்பு கட்டணம், கடன், சேமிப்பு போன்றவை முதன்மை இடத்தை பிடிக்க வேண்டும். ஏனெனில் அவைதான் உங்களை மிகவும் பாதிக்கும் என்பதால் கவனமாக கையாளுங்கள்.
குடும்ப நபர்களை சேர்த்துக் கொள்ளுங்கள்
உங்கள் குடும்ப நபர்களின் ஆலோசனையையும் எடுத்து கொள்ளுங்கள். அவர்கள்தான் உங்களுடன் இருக்க போகின்றார்கள். நீங்கள் எடுக்கும் எந்த முடிவும் அவர்களைதான் பாதிக்கும். ஆகவே உங்கள் இலக்கு அவர்களை பாதிக்குமா என்பதை அவர்களிடமே கேளுங்கள். உங்கள் மனைவி மற்றும் குழந்தைகளின் வார்த்தைகள் உங்களுக்கு மிகவும் அவசியம்.
இப்பொழுதே துவங்கிவிடவும்..
உங்களின் இலக்கு என்ன என்பதை கண்டு பிடிக்க அதிக காலம் எடுத்துக் கொண்டால், இலக்கை அடையும் காலமும் நீட்டிக்கும் அபாயம் உள்ளது. இப்படி காலம் தாழ்த்துவதால் உங்களுக்கு கிடைக்கும் பல நல்ல விஷயங்களை விலக்கி விடக் கூடும். ஆகவே நேரத்தை வீணாக்காமல் இலக்கு எது என்பதை அறிந்து நிதி நிலைமையை சீராக்கி வெற்றி பெற செயல்படுங்கள்.
இலக்குகள் பாதிப்பு அடைய கூடாது
உங்கள் இலக்குகளின் பட்டியலில் அதன் முன்னுரிமை பட்டியலில் வைத்தவுடன் எது உங்களுக்கு முக்கியம் என்பதை அறிந்து கொள்வீர்கள். பின்பு நீங்கள் எதற்காவது பணம் செலவு செய்யும் பொழுது அந்த செலவு உங்கள் முக்கிய முதன்மை இலக்கை பாதிக்கின்றதா என்பதை ஆராயுங்கள். அப்படி பாதிக்கும் என்று உணர்ந்தால் உடனே உங்கள் எண்ணத்தை மாற்றி கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் முக்கிய இலக்கு பாதிப்பு அடையாமல் இருக்கும்.
முக்கியமில்லாத இலக்கிற்காக வேர்வை சிந்தாதீர்கள்
நம் வாழ்க்கையின் தேவைக்காக நாம் ஓடி கொண்டிருக்கின்றோம். அந்த ஓட்டம் சில வேளைகளில் நம் அன்றாட தேவைக்கானதாக மட்டுமே உள்ளது. வாழ்க்கை முழுவதற்குமான உயர்வை அது பெற்று தருவதில்லை. இதனால் நாம் கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கும் பொழுது இதற்காகவா ஓடி வந்தோம் என்று நினைக்க தோன்றும். எனவே இலக்குகள் பெரிதாக இருக்க வேண்டும். இதனால் வாழ்நாள் பலனை அடைய முடியும்.
மாற்றத்துக்கு தயாராகுங்கள்
உங்கள் வயது கூடக்கூட உங்கள் தேவையும், கனவுகளும் மாறக் கூடும். ஆகவே அந்தந்த நேரத்தில் உங்களுக்கு தேவையான இலக்கு எது என்பதை நன்கு ஆராய்ந்து தெளிவான முடிவை எடுக்க வேண்டும். ஐந்து வருடத்திற்கு ஒருமுறை உங்கள் ஆசைகளை ஆராய்ந்து மாற்றம் செய்து இலக்குகளை அடையுங்கள். வாழ்வின் வெற்றியை அடையுங்கள்.