சென்னை: பெரும்பாலான அலுவலகங்களில் மேனேஜர்கள் தங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களிடம் சுமூகமாகவே நடந்து கொள்ள மாட்டார்கள். எவ்வளவு சூப்பராக வேலையை முடித்துக் காண்பித்தாலும், 'ஒண்ணுக்கும் லாயக்கில்லை' என்பது போலத்தான் அவர்களின் பார்வை நம் மீது இருக்கும்.
அவர்களுடைய இந்தச் செயலுக்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஈகோ, பொறாமை, பாதுகாப்பின்மை, பயம் என்று இதன் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
இப்படிப்பட்ட மானேஜர்களை எப்படிச் சமாளிப்பது? இதோ சில வழிகளைப் பார்க்கலாம். குட் லக் & ஆல் தி பெஸ்ட் நன்பர்களே!!
அமைதியாய் இருங்கள்!
எந்தப் பிரச்சனையானாலும் சரி, உங்கள் மேனேஜருடன் ரொம்ப விவாதம் பண்ணாதீர்கள். நீங்கள் என்னதான் சொன்னாலும், தான் சொல்வதுதான் சரி என்று அவர் மல்லுக்கு நிற்பார். என்னத்துக்கு வம்பு? அமைதியாக அவர் சொன்னதை ஏற்றுக் கொள்ளுங்கள். சிறிது நேரம் அல்லது ஓரிரு நாட்கள் கழித்து, அவருக்கே உறுத்தும்!
கூல் செய்யுங்கள்!
எல்லா மேனேஜர்களும் 100% முசுடு அல்ல. அவர்களும் மனிதர்கள்தானே! உங்கள் மேனேஜரிடம் உள்ள இனிமையான குணங்களைத் தெரிந்து கொள்ளுங்கள். மோசமான சூழ்நிலைகளில் இதுதான் உங்கள் அஸ்திரம். அதைப் பயன்படுத்தினால், அவர் வீழ்வது நிச்சயம்!
சரண்டர் ஆகுங்கள்!
சில விஷயங்களில் உங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லையா? அப்படியே அவரிடம் சரணடைந்து விடுங்கள். நேரம் பார்த்து உங்கள் கவலைகளைப் பற்றி அவரிடம் எடுத்துக் கூறுங்கள். நிச்சயம் காது கொடுத்துக் கேட்பார். பிரச்சனைகளைத் தீர்த்தும் வைப்பார்.
எழுத்து முக்கியம் அமைச்சரே!
இது ரொம்பவும் முக்கியமான விஷயம். எந்தப் பிரச்சனையானாலும் சரி, அதை நீங்கள் எழுத்து வடிவில் (இ-மெயில் உள்பட) வைத்துக் கொள்வது நல்லது. இல்லையென்றால் உங்கள் பாஸ் உங்களையே எளிதில் மாட்ட வைத்து விடுவார். நீங்கள் என்னதான் மல்லுக்கட்டினாலும் ஆதாரம் இல்லாமல் உங்களை உயர் அதிகாரிகள் நம்பவே மாட்டார். உஷார்!
சுதாரிப்புடன் இருங்கள்!
நீங்கள் எத்தனை வருடம் உங்கள் நிறுவனத்திற்கு நாயாக உழைத்தாலும் சரி, உங்கள் மேனேஜர் ஒரு சொடுக்கு போட்டால் போதும். உங்கள் வேலை காலி. எனவே, எதற்கும் தயாராக இருங்கள். வேறு ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்தால் உடனே அங்கு தாவி விடுங்கள். உர்ர்ர்ர்ர் மானேஜரிடமிருந்து உங்களுக்கு விடுதலை!