சென்னை: வங்கிகளில் பணம் செலுத்தும்போது (ரொக்கமோ அல்லது காசோலை மூலமாக) பொதுவாகப் பான் எண் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், வைப்புகளுக்காக (டெபாசிட்) பணம் செலுத்துவது உள்ளிட்ட பெரும்பாலான பரிவர்த்தனைகளுக்குப் பான் எண் அவசியமாகிறது.
நீங்கள் 50,000 ரூபாய்க்கும் அதிகமான தொகையை வங்கியில் வைப்புக்காகச் செலுத்தும் போது பான் எண்ணைத் தெரிவிக்க வேண்டியது கட்டாயமாகிறது. நீங்கள் பான் எண்ணைக் குறிப்பிடவில்லை என்றால், வங்கிகள் உங்கள் பணத்தை ஏற்காமல் போக வாய்ப்புள்ளது.
எனினும், வங்கிகளில் இருந்து பணத்தை ரொக்கமாக எடுக்கும் போது இந்த விதி பொருந்தாது. நீங்கள் பான் எண்ணைத் தெரிவிக்காமலேயே பணத்தை எடுக்க முடியும்.
அதேபோல் நிரந்தர வைப்பு நிதிகளுக்குப் பணம் செலுத்தும் போதும் பான் எண்ணைத் தெரிவிக்க வேண்டியது அவசியம். அவ்வாறு செய்யவில்லையெனில், வங்கி டிடிஎஸ் (TDS) எனப்படும் மூல வரியைக் கழித்துக்கொள்ளும். இது 10,000 ரூபாய்க்கும் அதிகமான வட்டித் தொகைக்கு 20 சதவிகிதம் என்ற அளவில் இருக்கும்.
நீங்கள் பான் எண்ணைக் குறிப்பிட்டிருந்தால், அந்த வட்டியின் மீதான வரி 10 சதவிகிதமாக இருக்கும். வங்கி வைப்பு நிதியின் மூலம் கிடைக்கும் வட்டி வருமானம் 10,000 ரூபாய்க்கும் குறைவாக இருந்தால் அதன் மீது எந்தவிதமான வரியும் செலுத்தத் தேவையில்லை.