மும்பை: சொந்த தொழிலை துவங்கி, அதனை வெற்றியடையச் செய்வதென்பது அனைவருக்குமே மிகப்பெரிய சவால் தான். ஒரு தொழில் தொடங்க மிக முக்கியத் தேவை 'முதலீடு'.
நல்ல பணப் பின்புலம் கொண்டவர்கள் தொழிலிலே முதலீடு செய்யலாம். ஆனால் அவ்வாறு உறுதியான நிதி ஆதாரங்கள் இல்லாதவர்கள் அவற்றிற்கு மற்று ஏற்பாடுகளைப் பார்க்க வேண்டியுள்ளது.
காலம் காலமாகக் கடன் வழங்கி வரும் வங்கிகள் போன்ற அமைப்புகள் மூலம் கடன் பெறுவதென்பது மிகவும் மெதுவாக நடக்கக்கூடியது. அதுமட்டுமின்றிக் கடன் பெறுவோர் குறித்த விவரங்களை ஆராய்வது, பழைய வங்கிகளின் மூலம் உள்ள உங்கள் நிதி வரலாற்றைச் சரிபார்ப்பது ஆகிய நடைமுறை விதிகளுக்குட்பட்டதும் கூட.
உடனடியாகப் பணம் தேவைப் படுபவர்களுக்கு அதனைப் பெற பிற கடன் வழங்குவோரை நாட வேண்டியுள்ளது. இந்த அதிகம் பிரபலமில்லாத கடன் முறை தொன்று தொட்டு இருந்து வந்துள்ள போதிலும் அண்மை காலமாக இது போன்ற கடன் பெரும் முறைகள் வெகு பிரபலமாகி வருகின்றன.
கிரெடிட் கார்டு கடன்
உங்களுக்கு ஒரு நல்ல கடன் பின்னணி (கிரெடிட் ஹிஸ்டரி) இருந்தால் உங்களால் உடனடியாக ஒரு தொழில் தொடங்கக் கடன் பெற முடியும். கிரெடிட் கார்டு கடன் பெரும்பாலும் வாங்கக் கூடியவரின் வருவாய் ஈட்டும் திறன் மற்றும் கடனைத் திறனையும் பொறுத்து அமையும்.
கிரெடிட் கார்டு கடன் அதற்கே உரித்த சில அபாயங்களையும் வரையறைகளையும் கொண்டது. உதாரணமாகச் சேவைக் கட்டணங்களில் நீங்கள் தாமதம் செய்தால் அது உங்கள் கடன் பின்னணியைப் பாதிக்கும் என்பதுடன் அதற்காக ஒரு பெரும் தொகையை அபராதமாகவும் செலுத்த நேரிடுவதால் அது உங்கள் வியாபாரத்தையும் நிதி நிலையையும் பாதிக்கும்.
பாக்டரிங் ( Factoring)
பாக்டரிங் என்பது ஒரு கடன் அளிப்பவர் 75 முதல் 80 சதவிகிதம் மட்டும் அளித்துவிட்டு மீதத்தை நிலுவையில் வைப்பார். ரிசர்வ் எனப்படும் இந்த நிலுவைத் தொகையைக் கடன் பெற்றவர் திரும்பச் செலுத்தும் திறனைக் கொண்டு முடிவு செய்து பின்னர் வழங்குவார். நீங்கள் கடனை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டால் அது இந்த ரிசர்வ் தொகையை உயர்த்தும்.
ஹெட்ஜ் ஃபண்ட் (முன்காப்பு நிதி) அடிப்படையிலான கடன்
இந்த வகைக் கடன் அளிப்போரை பிசினஸ் வீக் வார இதழ் நவீன வர்த்தக ஏடிஎம்-கள் எனக் குறிப்பிட்டுள்ளது. காரணம் இந்த வகை அமைப்புகள் அபாயம் நிறைந்த தொழில் நுட்ப அடிப்படையிலான வர்த்தகங்களுக்குக் கடனளிக்கின்றன.
இந்தக் கடன் தொகை முற்றிலும் கடன் பெறுபவர் குறிப்பிடும் அளவைப் பொறுத்து அமையும். கடன் வழங்குவதற்கான முடிவு சில நடைமுறை விதிகளைப் பொறுத்து எடுக்கப்படும். ஆனால் அது நடப்பில் உள்ள சாதாரணக் கடன் முறைகளை ஒப்பிடும் போது எளிதாகவும் சற்று மேலானதாகவும் இருக்கும்.
தொடர்புக் கடன்கள் (பியர் டு பியர்)
இந்த வகைக் கடன் முறை பெரும்பாலும் உங்கள் வர்த்தக முயற்சியில் ஆர்வமுடைய நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மூலம் கிடைப்பது. இது உடனடியாகக் கிடைக்கும் என்பதுடன் நெருங்கியவர்கள் தருவதால் அபராதங்கள் எதுவும் கிடையாது என்பதால் மிகவும் பயனளிக்கக்கூடிய ஒன்றாக உள்ளது.
இத கடனுக்கான ஒப்பந்தங்கள் வாய்மொழியாகவோ அல்லது எழுத்துப் பூர்வமாகவோ அந்தத் தனி நபர்களின் வசதியைப் பொறுத்து அமையும் என்பதோடு இவர்கள் நெருங்கியவர்கள் என்பதால் சில சமயம் அவர்களுக்குத் தள்ளுபடியிலோ அல்லது இலவசமாகவோ கூட வர்த்தகச் சேவைகள் வழங்க நேரிடும்.
மாற்றத்தக்க கடன் பத்திரங்கள்
இந்த வகைக் கடன்களில் கடனளிப்பவர் தன் கடனுக்கு இணையாக வர்த்தகத்தில் ஒரு கூட்டாளியாகத் தன்னை ஏற்றுத் தன் கடன் தொகையைப் பங்குகளாக மாற்றிக்கொள்ளச் சொல்லிக் கேட்பார்.
இந்தத் தொகையைப் பங்குகளாக மாற்றுவதன் மூலம் நீங்கள் அந்தக் கடனை திரும்பச் செலுத்த வேண்டியதில்லை என்பதால் இது உங்களுக்கு மிகவும் சவுகரியமான ஒன்றாக இருக்கும். இதில் அபராத தொகைகள் கூட எதுவும் இருப்பதில்லை. கடனளிப்பவருக்கும் கடன் திரும்ப வருமா என்ற அச்சம் அவ்வளவாக இருக்காது. கடனளிப்பவர் வர்த்தகம் வளரவில்லை என்று கருதும் நேரத்தில் தன பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.