சென்னை: நம்மில் பலருக்கு வீட்டைக் கட்டுவது என்பது ஒரு கனவு. ஒவ்வொரு இந்தியனும் இந்தக் கனவை நனவாக்க படாதபாடு பட்டுப் பணத்தைச் சேர்க்க முயலுகின்றனர். சொந்தவீடு உணர்வுபூரவமான திருப்தி மட்டுமல்ல ஒரு நல்ல நிதிப் பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரு விஷயமாகும்.
எனவே இவ்வளவு முக்கியமான ஒரு சொத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம். இதற்கு அதிநவீன பூட்டுக்கள், எச்சரிக்கை மணிகள், தீயணைப்புக் கருவிகள் ஆகியவை மிகவும் அவசியமானவை என்றாலும். இவை மட்டும் உங்கள் இல்லத்தைப் பாதுகாக்கப் பயன்படாது.
வேற என்ன வேணும்..??
காப்பீடு
முழுமையான பாதுகாப்பிற்குச் சொந்த வீடு வைத்திருப்போர் கண்டிப்பாக ஒரு வீட்டுக் காப்பீட்டு பாலிசியை எடுக்க வேண்டியது அவசியம். வீட்டுக் காப்பீடு அல்லது வீடு உரிமையாளர் பாலிசி என்பது தனி நபர் வீட்டுச் சொத்துக்களுக்கான ஒரு காப்பீட்டுத் திட்டம்.
இது பல்வேறு தனிப்பட்ட காப்பீட்டு பாதுகாப்புகளையும் விபத்துக்களின் போது வீட்டிற்கு அல்லது வீட்டு உரிமையாளருக்கு ஏற்படும் ஆபத்துகளால் ஏற்படும் பொறுப்புகளிலிருந்து பாதுகாப்பையும் ஒருங்கிணைத்து வழங்கும் காப்பீட்டுத் திட்டமாகும்.
வீட்டு உபயோகப் பொருட்களையும் உள்ளடக்கிய ஒரு விரிவான பாலிசி நம்முடைய இழப்பைப் பெருமளவு குறைக்கிறது. ஒரு விரிவான காப்பீட்டுத் திட்டம் பின்வரும் அம்சங்களைக் கொண்டிருக்கும்:
தீ விபத்திலிருந்து காப்பு
தீயானது சிறிய தீப்பொறி உட்பட எப்படி வேண்டுமானாலும் பற்றிக்கொண்டு பெரும் சேதத்தைக் ஏற்படுத்தும். ஒரு விரிவான பாலிசி தீ விபத்தை உள்ளடக்கியதாக இருக்கும். இது உங்கள் வீட்டுக் கட்டமைப்பு மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் ஆகியவற்றிற்குப் பாதுகாப்பு அளிக்கிறது.
இயற்கைச் சீற்றங்களிலிருந்து காப்பு
புவி வெப்பமயம் மற்றும் மாறிவரும் சுற்றுச் சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் இயற்கைப் பேரிடர்களை அதிகரித்துள்ளதால் வீட்டிற்கான காப்பீட்டுத் தேவையின் மிக முக்கியத்துவமாக உள்ளது.
பூகம்பம் மற்றும் புயல் போன்ற இயற்கைச் சீற்றங்கள் உங்கள் வீட்டைச் சேதப்படுத்திப் பலவருடங்களுக்கு நம்மை வீடற்றவர்களாக மாற்றக்கூடும்.
ஆனால் இந்தச் சேதத்தைக் கட்டுக்குள் வைக்க ஒரு வீட்டுக் காப்பீட்டுத் திட்டத்தை எடுப்பதன் மூலம் பூகம்பம், வெள்ளம், சூறாவளி மற்றும் இடிமின்னல் ஆகியவற்றிலிருந்து காப்பீடு பெறலாம்.
மனித நடவடிக்கைகளால் ஏற்படும் சேதங்கள்
தீவிரவாதம், வீட்டுக் கொள்ளை மற்றும் திருட்டு ஆகியவை நம்மை வெறும்கையுடன் கதியின்றி ஆக்குவதுடன் மிகவும் கொடூர விளைவுகளை ஏற்படுத்துவதாக உள்ளன.
தீவிரவாதம் பெரும் சேதத்தை விளைவிப்பதால் பேராபத்தாகக் கருதப்படுகிறது. அதே வேளையில் பாதுகாப்பின்மை காரணமாகக் கொள்ளையும் திருட்டும் நம்மை நிர்கதியாக்கிவிடும்.
பொதுவாக ஒவ்வொரு வீட்டு உரிமையாளரும் வீட்டுக் காப்பது அல்லது இன்சூரன்ஸ் பாலிசி எடுக்கவேண்டியது அவசியமாக இருக்கும் வேளையில் தற்போது இது நகரங்களில் மட்டுமே பெரும்பாலும் பயன்பாட்டில் காணப்படுகிறது.
9 லட்சம் மதிப்புள்ள ஒரு பாலிசிக்கு இப்படி வீட்டைப் பாதுகாப்பதற்கான செலவு நாளைக்கு ரூபாய் ஐந்து மட்டுமே ஆகிறது. ஆனாலும் துரதிஷ்டவசமாக இதற்குக் குறைந்த முக்கியத்துவமே வழங்கப் படுவதுடன் பெரும்பாலும் ஒருவரின் நிதி திட்டமிடுதலில் இது ஒரு அங்கமாகவே கருதப் படுவதில்லை.
வீட்டுப் பாதுகாப்பு பாலிசிகளை வாங்கும்போது நீங்கள் மனதில் கொள்ளவேண்டியது இது உங்கள் வீட்டை மறுபடியும் கட்ட ஆகும் செலவை மட்டுமே தரும், சந்தை மதிப்பை அல்ல.
எனவே இந்தப் பாலிசியின் நோக்கம் சேதமடைந்த உங்கள் வீட்டைத் திரும்பக் கட்டுமானம் செய்வதே ஆகும்.
இந்த மருகட்டுமானத்தின் மதிப்பீடு உங்கள் வீடு எந்த இடத்தில் அமைந்துள்ளது என்பதைப் பொறுத்து அமையும் என்பதையும் நீங்கள் மனதில் கொள்ள வேண்டும். பிரிமியத் தொகைகள் ஒன்றாக இருப்பினும் இடத்திற்குத் தகுந்தாற்போல் கட்டுமானச் செலவு மாறுபடும் என்பதால் பாலிசி மதிப்பு வேறுபாடும்.
நீங்கள் ஒரு கூட்டுறவுக் குடியிருப்பில் இருந்தாலோ அல்லது வாடகை வீட்டில் இருந்தாலோ வீட்டைப் பாதுகாக்க உங்களுக்குப் பாலிசி தேவைப் படாது. மாறாக நீங்கள் வீடு உபயோகப் பொருட்களுக்கான பாலிசியைப் பரிசீலிக்கலாம். இது பெரும்பாலும் நகைகள், மின்னணு சாதனங்கள், அறைகலன்கள் ஆகிய மதிப்பு மிக்கப் பொருட்களை உள்ளடக்கியது.
இந்தவகைப் பொருட்களுக்கான மதிப்பானது சந்தை மதிப்பைப் பொறுத்துக் கணக்கிடப்படும். அதாவது ஒரு சேதம் ஏற்பட்டால் அந்தப் பொருளை புதிதாக வாங்கத் தேவைப்படும் விலை கணக்கில் கொள்ளப்படும்.
எனினும், சேதமடைந்த பொருளின் மீதான தேய்மானம் கணக்கில் கொள்ளப்பட்டு அதைப் புதிய விலையில் கழித்துக்கொண்டு மீதம் தரப்படும். பணம், பங்கு அல்லது கடன் பத்திரங்கள், தோல் பொருட்கள், பல்வேறு கலைப் பொருட்கள் மற்றும் சொத்து ஆவணங்கள் ஆகிய முக்கியமான பொருட்களுக்குக் காப்பீடு நிறுவனங்கள் காப்பீடு செய்வதில்லை.
மேலும் உங்கள் வீட்டில் பணி புரிபவர்களால் இந்தச் சேதம் ஏற்படுமாயின் அதற்கான இழப்பீட்டை நீங்கள் எதிர்பார்க்க முடியாது. பணி புரிபவர்கள் சேதத்திற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ காரணமானால் எந்த ஒரு நிறுவனமும் சேதத்தை ஏற்றுக்கொள்வதில்லை.
அதற்கும் மேல், நீங்கள் வீட்டிலிருந்து வேலை செய்பவரானால், இந்தப் பாலிசி உங்கள் வர்த்தகப் பயன்பட்டிர்காகப் பயன்படுத்தப் பட்ட பொருட்களுக்கு இழப்பீடு தராது. மாறாக அதற்கு நீங்கள் ஒரு வர்த்தகர் காப்பீட்டை (மெர்சண்ட் பாலிசி) எடுக்க வேண்டும். ஒரு நல்ல பாலிசியைத் தேர்ந்தெடுக்கச் சிறந்த வழி பல்வேறு நிறுவனங்கள் வழங்கும் பாலிசித் திட்டங்கள் மற்றும் இழப்பீட்டு மதிப்பு ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்த்து வாங்குவது.
ஒரு நீண்டகால, 10 வருட முதிர்வு கொண்ட ஒரு பாலிசி எடுப்பது வருடா வருடம் அதனைப் புதுப்பிக்க வேண்டிய வேலையைக் குறைப்பதுடன் அவ்வாறு எடுக்கும் போது பிரிமியத் தொகையில் நல்ல தள்ளுபடி அதாவது சில சமயங்களில் 50 சதவிகிதத் தள்ளுபடி கூடக் கிடைக்கும்.
எனவே நீண்ட காலப் பாலிசியை எடுப்பது தள்ளுபடியைத் தருவதுடன் பொருத்தமானதாகவும் இருக்கும்.