இந்திய ரிசர்வ் வங்கி ஒவ்வொரு ஆண்டும் கிடைக்கும் லாபத்தின் ஒரு பகுதியை மத்திய அரசுக்கு டிவிடெண்டாக வழங்கி வருகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டு சுமார் ரூ.66,000 கோடி டிவிடெண்ட் ஆக மத்திய அரசுக்குக் கடந்த வியாழக்கிழமை இந்திய ரிசர்வ் வங்கி அளித்துள்ளது.
80 வருட ரிசர்வ் வங்கி வரலாற்றில் மத்திய அரசுக்குக் கொடுத்த டிவிடெண்ட் தொகை இந்த ஆண்டுதான் மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
டிவிடெண்ட் என்றால் என்ன?
ஒவ்வொரு ஆண்டும், நிறுவனங்கள் லாபம் ஈட்டும் போது, அந்த லாபத்தைப் பங்குதாரர்களுக்கு பகிர்ந்து அளிப்பது வழக்கம். இதனைத் தான் டிவிடெண்ட் அல்லது லாபப் பங்கு என்பர்.
ரிசர்வ் வங்கி என்றால் என்ன?
ரிசர்வ் வங்கியின் டிவிடெண்ட் குறித்து மேலும் தெரிந்து கொள்வதற்கு முன்னர் இந்திய ரிசர்வ் வங்கி குறித்து ஒருசிறு விளக்கம்.
இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 1935ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மத்திய அரசின் வங்கி ஆகும். இந்த வங்கி கடந்த 1949ஆம் ஆண்டு நாட்டுடைமை ஆக்கப்பட்டது.
முக்கிய பணிகள்
இந்தியாவின் செலாவணிக்குரிய நாணயத்தை வெளியிடுவது, நாட்டின் பல பொருளாதார நடவடிக்கைகளை இயக்குவது ஆகியவை இந்த வங்கியின் முக்கிய பணிகள்.
பொது மக்கள் மற்ற வங்கிகளைப் போல ரிசர்வ் வங்கியைப் பயன்படுத்த முடியாது. ஆனால் அதே நேரத்தில் ரிசர்வ் வங்கி தனது ஏஜன்ட்டுகளாக செயல்படப் பல வங்கிகளை அமைத்துள்ளது. அவ்வகையில் பாரத ஸ்டேட் வங்கி இதன் ஏஜண்ட் வங்கிகளில் ஒன்று ஆகும்.
ஒவ்வொரு ஆண்டும் கொடுத்த டிவிடெண்ட் தொகை
கடந்த ஆண்டு வழங்கியதை விட இந்த ஆண்டு 20% டிவிடெண்ட்டை அதிகம் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த 2014ஆம் ஆண்டு ரூ.52,679 கோடியும், 2013ஆம் ஆண்டில் ரூ.33,100 கோடியும், 2012ஆம் ஆண்டு ரூ.16,010 கோடியும், 2011ஆம் ஆண்டு ரூ.15,009 கோடியை மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி டிவிடெண்டாக அளித்துள்ளது ரிசர்வ் வங்கி ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வரும் டிவிடெண்ட் தொகை வருடத்திற்கு வருடம் உயர்ந்து வரும் நிலையில் இந்த ஆண்டு புதிய உச்சத்தை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டிவிடெண்ட் தொகை எதற்குப் பயன்படுகிறது?
ரிசர்வ் வங்கி கொடுத்துள்ள இந்த டிவிடெண்ட் தொகை மூலம் மத்திய அரசு பல ஆக்கபூர்வ பணிகளுக்குப் பயன்படுத்தி வருவதாகவும் குறிப்பாக நிதிநிலையில் ஏற்படும் பற்றாக்குறை, நலத்திட்டங்கள், வட்டி விகிதங்கள் குறைப்பு ஆகியவற்றுக்கு பயன்படுவதாகவும் பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த டிவிடெண்ட் தொகை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும் வகையில் உள்ளது. அதுமட்டுமின்றி இந்த டிவிடெண்ட் தொகை மத்திய அரசின் ஆண்டு பற்றாக்குறை இலக்கை எளிதில் அடைய உதவிக்கரமாக இருக்கும்.
ரிசர்வ் வங்கிக்கு வரும் வருமானம் எப்படி?
இந்திய ரிசர்வ் வங்கிக்குப் பலவிதமான முறைகளில் வருமானம் வந்தபோதிலும் மூன்று முக்கியமான வழிகளில் இருந்து வருமானம் வருகிறது. முதலாவதாக அரசு வெளியிடும் பத்திரங்களில் இருந்தும், இரண்டாவதாக ரெப்போ வங்கிகளின் மூலம் கிடைக்கும் வட்டிகளில் இருந்தும், மூன்றாவதாகத் தங்க கடன் பத்திரங்களில் இருந்தும் கிடைக்கின்றது. இவ்வாறு கிடைக்கும் வருமானங்களில் இருந்துதான் ஒவ்வொரு வருடமும் ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு டிவிடெண்ட் கொடுக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
நிதி அமைச்சரின் எதிர்பார்ப்பும், டிவிடெண்ட் தொகையும்
கடந்த ஆண்டு இந்திய நிதி அமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டில் ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு ரூ.64,500 கோடி டிவிடெண்ட் ஆக வழங்கும் என்று கணித்திருந்தார். ஆனால் அவரது எதிர்பார்ப்பையும் மீறி இந்த ஆண்டு சுமார் ரூ.500 கோடி அதிகமாக ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளதால் தாமதமாகி வந்த பல மத்திய அரசின் திட்டங்கள் உயிர் பெறும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
பொருளாதார வல்லுநர்கள் என்ன சொல்கின்றனர்.
இந்தியாவின் பொருளாதார மேதைகளில் ஒருவராகிய சித்தார்த்தா சான்யால் இதுகுறித்து கூறியபோது, 'நிதியமைச்சரின் எதிர்பார்ப்பை விட அதிகமாகக் கிடைத்துள்ள இந்தத் தொகையால் மத்திய அரசி மிக எளிதாக பட்ஜெட் பற்றாக்குறையை சரிசெய்துவிடும் என்றும் வரும் மாதங்களின் வங்கிகளின் வளர்ச்சிக்கும் இந்த பணம் செலவு செய்யப்படும் என்று எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளார்.
புதிய கவர்னர்
இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் திரு.ரகுராம் ராஜன் அவர்களின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைய உள்ளது. புதிய கவர்னராக துணை கவர்னராக இருந்த உர்ஜித் பட்டேல் புதிய கவர்னராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிய தலைமை ரிசர்வ் வங்கிக்குக் கிடைத்துள்ளதால் வரும் வருடங்களில் இதைவிட அதிக டிவிடெண்ட் மத்திய அரசுக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.