அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் சொல்லும் சாக்குப்போக்குகள் சிலசமயம் மேனேஜர்களுக்கு ஆத்திரத்தை வரவழைக்கும், சில சமயம் நகைச்சுவையாகவும் இருக்கும்.
குறித்த நேரத்தில் ஒரு காரியத்தை முடிக்காமல் இருந்தாலோ, அலுவலகத்திற்குத் தாமதமாக வந்தாலோ அல்லது வேறு சில வேலைகளுக்கு அவர்கள் சொல்லும் காரணங்கள் இருக்கின்றதே, ரூம் போட்டு யோசித்தாலும் நமக்கு வராது. இதுபோன்ற ஊழியர்களை எப்படிச் சமாளிப்பது என்று குழப்பத்தில் இருக்கும் மேனேஜர்கள் மற்றும் உரிமையாளர்களுக்காக இதோ எங்களின் ஐந்து சுலபமான வழிகள்.
ஊழியர்களின் மனநிலையைப் புரிந்து கொள்ளுங்கள்
முதலில் ஒரு ஊழியர் தன்னுடைய வேலையை முடிக்காததற்குக் காரணங்கள் சொல்லும்போது அவர்களுடைய மனநிலையைப் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். தனிப்பட்ட மனநிலை காரணத்தாலோ அல்லது குடும்ப சூழ்நிலை காரணத்தாலோ தாமதம் எனத் தெரிய வந்தால் அவருக்கு விதிவிலக்கு கொடுக்கலாம்.
ஆனால் அதே நேரத்தில் தொடர்ந்து ஒரே காரணங்களை கூறி வரும் ஊழியர்களுக்குக் கண்டிப்பாக அதற்குரிய தண்டனையை கொடுத்தே ஆக வேண்டும். இல்லாவிட்டால் அவரைப் பார்த்து மற்ற ஊழியர்களும் அதே முறையை கடைப்பிடிக்கும் ஆபத்து ஏற்படலாம்.
திறந்த மனதுடன் கலந்துரையாடங்கள்
ஊழியர்கள் தொடர்ந்து சாக்குப்போக்கு சொல்லி கொண்டிருந்தால் அவர்களை எதிரே உட்கார வைத்துத் திறந்த மனதுடன் கலந்துரையாடங்கள்.
அவர்களுடைய உண்மையான பிரச்சனை என்ன என்று புரிந்து கொண்டு அதைத் தீர்க்க நம்மால் முடிந்த அளவு உதவ வேண்டும், மற்ற நபர்களுக்கு அதுபோல நடந்திருந்தால் அந்த உதாரணத்தை அவர்களுக்குப் புரிய வைப்பது பலனளிக்கும். மாதம் ஒருமுறை ஊழியர்களை நேருக்கு நேர் சந்தித்து டிஸ்கஸ் செய்தால் சாக்குப்போக்கு சொல்லும் ஊழியர்கள் சாதனை புரியத் தொடங்கி விடுவார்கள்.
சவாலான பணியை கொடுங்கள்
ஒரே வேலையைத் திரும்ப திரும்பச் செய்யும் ஊழியர்களுக்கு தங்கள் வேலை ஒரு கட்டத்தில் போர் அடிக்க ஆரம்பிக்கும். அந்தச் சமயங்களில் அவர்களது சாக்குப்போக்கு அதிகரிக்கும்.
எனவே ஊழியர்களுக்கு எப்போதும் அவர்களுடைய திறமைக்கு சவாலான பணியை கொடுங்கள். இதை முடித்தால் உங்களுக்கு இன்னது கிடைக்கும் என ஆசையைத் தூண்டிவிடுங்கள். அப்புறம் பாருங்கள் அவர்களது சுறுசுறுப்பை
ஊழியர்களின் சுற்றுப்புறத்திற்கு மதிப்பு கொடுங்கள்
ஊழியர்கள் பணிபுரியும் இடத்தின் சுற்றுப்புறம் ரொம்ப முக்கியமானது. அவர்கள் உட்கார்ந்து பணிபுரியும் இடம், அவர்களுக்கு அருகில் இருக்கும் நபரின் குணங்கள் ஆகியவை அவர்களது வேலையைக் கூட்டவோ குறைக்கவோ செய்யும் தன்மை கொண்டது.
எனவே ஒரு டீம் லீடரின் முக்கிய பணி ஊழியர்களின் சுற்றுப்புற சூழ்நிலையைச் சரியாக வைத்துக் கொள்வது.
கொஞ்சம் தள்ளியே நில்லுங்கள்
சில உரிமையாளர்கள் அல்லது மேனேஜர்கள் ஊழியர்களிடம் சகஜமாக பழகுவார்கள். இது தட்டிக்கொடுத்து வேலைவாங்க உதவியாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் நமது மரியாதை போகும் ஆபத்து உள்ளது.
உயரதிகாரி என்ற நினைப்பில்லாமல் தோள் மேல் கைபோட்டு பேசும் அளவுக்கு எல்லை மீறிவிட்டால் பின்னால் அவர்களை அடக்குவது சிரமம். எனவே ஊழியர்களுடன் எப்போதுமே ஒரு சிறு இடைவெளியுடன் இருப்பது நல்லது.
மேற்கண்ட ஐந்து வழிமுறைகளைப் பின்பற்றி பாருங்கள். சாக்குப்போக்கு சொல்லும் ஊழியர்கள் நன்னடத்தை ஊழியர்களாக மாறி உங்கள் நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பார்கள்.
யுபிஐ செயலி-ஐ பயன்படுத்துவது எப்படி..?
யுபிஐ செயலியின் வாயிலாக இரண்டு வங்கிகளுக்கு இடையில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தி எளிதாக பண பரிமாற்றம் செய்யலாம். இதற்கு சில நொடிகள் போதும் என்பதே இதன் சிறப்பு. இது வணிக வங்கிகள் வைத்திருக்கும் செயலிக மூலமாகவே செய்ய முடியும்.