புதிய ரியல் எஸ்டேட் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ள இந்தக் காலம்தான் ரியல் எஸ்டேட் தொழிலில் அல்லது தனிப்பட்ட நபர்கள் வீடுகள் வாங்குவதற்கு ஏற்றக் காலம்.
ரியல் எஸ்டேட் மார்க்கெட் தற்போது தூக்கத்தில் இருந்து எழுந்துள்ளது. விற்பனையாளர்கள், வாங்குபவர்கள் மற்றும் புரோக்கர்கள் ஆகியோர்களுக்கு இது தகுந்த காலம் ஆகும். ரியல் எஸ்டேட் வாங்க இது சரியான தருணம் என்பதைக் கூறும் பத்து உண்மைகள் குறித்து தற்போது பார்ப்போம் .
1. சொத்து வாங்குவது ஒருபோதும் தவறான முடிவாக இருக்காது
ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் கூறுவது போல் எந்தக் காலத்திலும் சொத்துக்களின் விலை வீழ்ச்சி அடைய வாய்ப்பே இல்லை என்பதை முழுவதும் நம்ப வேண்டாம். அதே நேரத்தில் தகுந்த விலை கொடுத்து வாங்கிய சொத்துக்கள் கண்டிப்பாக எதிர்காலத்தில் லாபத்தையே தரும். ஒருசில இடங்கள் விலையேற ஓரிரண்டு வருடங்களோ அல்லது அதற்கு மேலும் ஆகலாம்.
ஆனால் கண்டிப்பாக பங்குவர்த்தகத்தில் முதலீடு செய்தால் சில சமயம் நம்முடைய முதலீடு ஜீரோ ஆவது போல், சொத்துக்களில் செய்யும் முதலீடு ஆவதற்கு வாய்ப்பே இல்லை. ஆனால் அதே நேரத்தில் ஒருசில இடங்களில் வாங்கும் சொத்துக்களின் மதிப்பு பல வருடங்களுக்கு விலை ஏறாது. அதுபோன்ற இடங்களைத் தவிர்த்தால் சொத்துக்கள் வாங்குவது ஒருபோதும் தவறான முடிவாக இருக்காது.
2. விலை மலிவு என்பதால் தூரத்தில் உள்ள இடத்தைத் தேர்வு செய்ய போகின்றீர்களா?
சென்னையில் இருந்து வெகு அருகில் என்று சொல்வார்கள். ஆனால் அந்த இடம் சென்னைக்கு வெகுதூரத்தில் இருக்கும். விலை மலிவு என்று இதுபோன்ற இடத்தை வாங்கி அங்கு வீடு கட்டினால், நீங்கள் அலுவலகம் செல்லவோ, குழந்தைகள் பள்ளிக்கு செல்லவோ வெகுதூரம் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். அதேபோல் ஷாப்பிங், விசேஷங்களுக்குச் செல்தல் ஆகியவற்றிலும் பிரச்சனை உண்டு. மேலும் இதுபோன்ற இடத்தை வாடகைக்கு விட்டாலும் பெரிய அளவில் தொகை கிடைக்காது. எனவே நீண்ட கால முதலீடாக இருக்க மட்டுமே இந்தச் சொத்துக்கள் பயன்படும் என்றால் மட்டுமே இதுபோன்ற சொத்துக்களை வாங்கவும்.
3. சொத்துக்கள் வாங்கும்போது விலையில் கவனம் தேவை
சமீபத்திய ரியல் எஸ்டேட் கொள்கை மாற்றத்தினால் பல இடங்களில் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த வீழ்ச்சி குறித்து சொத்தை விற்பவர்களிடம் சொன்னால் அவர்கள் நம்ப மாட்டார்கள் அல்லது ஒப்புக்கொள்ள மாட்டார்கள். இருப்பினும் அதுதான் உண்மை என்று அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.
வார்த்தை ஜாலங்களால் இந்த இடத்திற்கு அருகில் விமான நிலையம், ரயில்வே ஸ்டேசன் பஸ் ஸ்டாண்ட் ஆகியவரை வரப்போகின்றது என்ற மாயஜால வார்த்தைகளில் மயங்கிவிட வேண்டாம். உண்மையில் அதுபோன்றவை வருகின்றதா? என்பதை ஆராய்ந்து கொள்ளுங்கள். அந்த நிலத்திற்கு இப்போதைய நிலையில் என்ன விலை என்பதை மட்டும் நிர்ணயித்து வாங்க வேண்டும் என்பதுதான் நல்ல முடிவு.
4. விலை குறைவாக ஒரு அபார்ட்மெண்ட் கிடைக்கின்றது என்றால் என்ன காரணம்?
ஒரு பகுதியில் உள்ள அபார்ட்மெண்டின் விலை ரூ.42 லட்சம் என்ற நிலையில் அதே பகுதியி. ரூ.50 லட்சத்திற்கு இன்னொருவர் அப்பார்ட்மெண்ட்டை விற்கின்றார் என்றால் அது முறைகேடா? கண்டிப்பாக இல்லை. பக்கம் பக்கமாய் விளம்பரம் தருபவர்கள் அபார்ட்மெண்டின் பெருமையை பேசுவார்களே தவிர, அபார்ட்மெண்டின் அளவை மறைப்பார்கள்.
சமீபத்தில் ரியல் எஸ்டேட் ஆலோசகர் ஜோன்ஸ் லாங் லசல்லே கூறியபோது, தற்போது ரியல் எஸ்டேட்டில் அபார்ட்மெண்டின் அளவு அதாவது சதுர மீட்டர் குறைந்தே கொண்டே வருவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். அதுமட்டுமின்றி குறைந்த விலைக்கு அபார்ட்மெண்டை விற்பவர்கள் தனியாக பார்க்கிங் கட்டணம், கிளப்பில் இணையும் கட்டணம், சர்வீஸ் கட்டணம், செக்யூரிட்டி சார்ஜ் கட்டணம் என்று பல்வேறு கட்டணங்களைக் கறப்பார்கள். எனவே அபார்ட்மெண்ட் வீடு வாங்குவதற்கு முன் இதுபோன்ற மறைமுக கட்டணங்களில் கவனம் தேவை
5. விலை உயரும் என்று பில்டர்கள் சொல்வதை நம்ப வேண்டாம்.
வீடு வாங்குபவர்களின் தேவையை பொறுத்து பில்டர்கள் விலையை அதிகரிக்கும் தந்திரங்களை கையாள்வார்கள். மிக அவசர தேவை என்று வீடு வாங்குபவர்கள் வந்தால் பெரும்பாலான வீடுகள் விற்பனை ஆகிவிட்டதாகவும், மிகவிரைவில் விலைகளில் மாற்றம் வரும் என்றும் நமது அவசர தேவையை பயன்படுத்தப் பார்ப்பார்கள். பெரும்பாலான பில்டர்கள் செய்யும் இந்த தந்திரங்களில் இருந்து வீடு வாங்குவோர் தப்பித்து கொள்ள வேண்டும்.
உண்மையில் நமக்கு எப்படி வீடு வாங்குவது அவசரமாக உள்ளதோ, அதே போல் வீட்டை விற்பவருக்கும் அவசர நிலை இருக்கும். இந்த உண்மையை அறிந்து உடனடியாக விலையை ஏற்றிக் கூறுவதை ஒப்புக் கொள்ள வேண்டாம்.
6. சரியான நேரத்தில் வீட்டை பில்டர்கள் ஒப்படைப்பார்களா?
ஒரு அபார்ட்மெண்ட் கட்டிக்கொண்டிருக்கும்போதே நாம் வாங்க முயன்றால் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளதுபோல் சரியான நேரத்தில் நமக்கு அந்த வீட்டை ஒப்படைப்பார்களா? என்ற சந்தேகம் இருக்கும். ஒருசில பில்டர்கள் தவிர பெரும்பாலான பில்டர்கள் சரியான நேரத்தில் வீட்டை ஒப்படைப்பதில்லை. அதற்குப் பதிலாக அவர்கள் நமக்கு ஒருசில குறிப்பிட்ட தொகையை அபராதமாகத் தருவதாக கூறுவார்கள். ஆனால் அந்த தொகையை அவர்கள் வேறு சில மறைமுக வழிகளில் நம்மிடமே கறந்துவிடுவார்கள். எனவே சரியான நேரத்தில் ஒப்படைக்கும் பில்டரா அவர் என்பதைத் தெரிந்து கொண்டு ஒப்பந்தம் செய்யவும்.
7. நீங்கள் பார்த்த மாதிரியே உங்களுக்கு வீடு கிடைக்குமா?
ஒருசில பில்டர்கள் வீட்டை மாதிரியாக ஒன்றைக் காண்பித்து ஒப்பந்தம் செய்து கொள்வார்கள். ஆனால் வீட்டை நம்மிடையே ஒப்படைக்கும்போது மாதிரிக்கும் நிஜத்திற்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கும். ஒப்பந்தத்தின்படி பர்னிச்சர், இண்டீரியர் டெக்கரேஷன், மின்வசதி ஆகியவற்றில் பெரும் வேறுபாடு இருந்தால் கண்டிப்பாக நீங்கள் சட்ட நடவடிக்கை எடுக்கலாம். இந்த விஷயத்தில் மாதிரியை காண்பிக்கும்போதே தெளிவாகச் சந்தேகங்களை கேட்டு அறிந்து கொள்ளுங்கள். மேலும் ஏற்கனவே அந்த பில்டர் விற்பனை செய்த வீடுகளுக்குச் சென்று அதன் உரிமையாளர்களிடம் ஒப்பந்தப்படி சரியான பர்னிச்சர்களுடன் வீடுகளை ஒப்படைத்தாரா? என்பதைக் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
8. நீங்கள் கொடுத்த பணம் திரும்ப வருமா?
ஒரு வீட்டை வாங்க ஒப்பந்தம் செய்யும்போது வீடு கட்டி முடித்தவுடன் உங்களுக்குத் திருப்தி இல்லை என்றால் பணம் வாபஸ் என்ற மாயாஜால வார்த்தைகளை நிச்சயம் நம்ப வேண்டாம். பில்டர்களிடம் இருந்து பணத்தை திரும்ப வாங்குவது என்பது கிட்டத்தட்ட முடியாத காரியம்.
அப்படியே பில்டர்கள் பணத்தை திருப்பிக் கொடுக்க சம்மதித்தாலும் 10% கழித்துவிட்டுத்தான் தருவார்கள். ஒருசிலர் 20% வரை கழிக்கவும் வாய்ப்பு உண்டு. எனவே பணம் வாபஸ் என்று சொல்லிவிட்டார்களே, அதனால் வீடு பிடிக்கவில்லை என்றால் திரும்ப வாங்கிக் கொள்ளலாம் என்று கனவிலும் நினைக்க வேண்டாம்.
9. இலவசத்தை நம்பி ஏமாற வேண்டாம்
ஒரு வீடு வாங்கினால் ஒரு மனை இலவசம், வீடு வாங்கினால் தங்கக்காசு இலவசம் என்ற வார்த்தை ஜாலங்களில் மயங்கி விட வேண்டாம். இந்த நூற்றாண்டில் எதுவுமே இலவசமாகக் கிடைக்காது. இலவச பொருட்களுக்குரிய தொகையை விட பலமடங்கு உங்களிடம் வசூல் செய்துவிட்டுத்தான் அதை இலவசமாக வழங்குவது போல் பில்டர்கள் தோற்றத்தை ஏற்படுத்துவார்கள். எனவே இலவசம் என்று கூறும் நிறுவனங்களை பெரும்பாலும் தவிர்த்துவிடுவதே நல்லது. அல்லது எனக்கு எந்த இலவசமும் வேண்டாம். விலையைச் சரியாக சொல்லுங்கள் என்று கறாராக பேசுங்கள்
10. வங்கியில் லோன் வாங்கி தருகிறோம் என்று பில்டர்கள் கூறுகின்றார்களா?
வீடு, மனை வாங்க நாங்களே வங்கிகளில் லோன் வாங்கி தருகிறோம். என்று கூறும் பில்டர்களை முழுவதுமாக நம்ப வேண்டாம். பில்டர்கள் மூலமாக வாங்கும் லோன்களுக்கு வட்டி வகிதம் அதிகமாக இருக்க வாய்ப்பு உண்டு. நாமே வங்கியில் தொடர்பு கொண்டு லோன் குறித்து பேசலாம். இப்போது அனைத்து வங்கிகளும் வீடு வாங்க யோசிக்காமல் லோன் தருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.