ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என்று அறிவித்ததில் இருந்து பல தனியார் நிறுவனங்களின் பேடிஎம், மொபிகிவிக், போன்ற செயலிகளை மக்கள் பயன்படுத்த துவங்கி உள்ளனர். ஆனால் இந்தியர்களில் பலர் தனியார் வங்கி சேவைகளை நம்பாதவர்கள்.
எனவே யூபிஐ போன்ற செயலிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இப்போது இந்த யூபிஐ செயலிகளை பயன்படுத்தி என்னவெல்லாம் செய்யலாம்? எப்படிப் பயன்படுத்துவது என்று இங்குப் பார்ப்போம்.
யூபிஐ செயலியின் பணி என்ன?
யூபிஐ செயலி மூலம் மெய்நிகர் கொடுப்பனவு முகவரி (VPA-Virtual Payment Address) உருவாக்கி அதன் மூலம் வங்கி கணக்கை இணைத்து மொபைல் போன் பயன்படுத்தி எளிதாக பணத்தை அனுப்பலாம், பெறலாம். இதில் என்ன சிறப்பு என்றால் 24 மணி நேரமும் இதன் மூலம் பண பரிவர்த்தனை செய்ய இயலும்.
மெய்நிகர் கொடுப்பனவு முகவரி (VPA) என்றால் என்ன?
மெய்நிகர் கொடுப்பனவு முகவரி என்பது நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கி கணக்கிற்கான மின்னஞ்சல் முகவரியைப் போன்றது ஆகும். இந்த முகவரியைப் பயன்படுத்தி எளிதாக மின்னஞ்சல் அனுப்புவது போன்று பணத்தை அனுப்பலாம். மேலும் பணத்தை பெறுவதற்கான கோரிக்கையையும் வைக்கலாம்.
மெய்நிகர் கொடுப்பனவு முகவரியை எப்படி உருவாக்குவது?
யூபிஐ மொபைல் செயலியை பதிவிறக்கி நிறுவுவதன் மூலம் எளிதாக மெய்நிகர் கொடுப்பனவு முகவரியை உருவாக்கலாம்.
மெய்நிகர் கொடுப்பனவு முகவரி இருந்தால் வங்கி கணக்கு எண், ஐஎப்எஸ்சி குறியீடு, இணையதள வங்கி ஐடி, கடவுச்சொல் என்று எதையும் நினைவில் வைத்துக்கொள்ளத் தேவையில்லை.
வங்கி கணக்குடன் இணைத்தல்
பிரதமர் மோடி 30-ம் தேதி வெளியிட்ட பிஎச்ஐஎம் செயலியில் மெய்நிகர் கொடுப்பனவு முகவரி உருவாக்குவதன் மூலம் இரண்டு மூன்று வங்கி கணக்குகளை ஒரே யூபிஐ செயலியில் இணைக்க வேண்டும். மேலும் இந்தச் செயலியை பயன்படுத்த மொபைல் பின் எண் ஒன்றை உருவாக்குவது அவசியம்.
பண பரிமாற்றம் செய்தல்
மெய்நிகர் கொடுப்பனவு முகவரியை யூபிஐ செயலியில் உள்ளிட்டு எளிதாக பணத்தை அனுப்பலாம், பணத்தைப் பெறுவதற்கான கோரிக்கையை வைக்கலாம்.
பணத்தைப் பெறுவதற்கான கோரிக்கையை வைக்கும் போது நீங்கள் உள்ளிட்ட மெய்நிகர் கொடுப்பனவு முகவரியை வைத்துள்ளவர்கள் ஏற்கும் போது எதிர் தரப்பினர் கணக்கில் இருந்து எளிதாக பணத்தை உங்கள் வங்கி கணக்கில் பெற இயலும்.