எந்த ஒரு செயலை செய்யவும் அடுத்தவர் போல யோசித்தால் வெற்றி பெற முடியாது. செயல் ஒன்றாக இருந்தாலும் அதை முடிக்க வித்தியாசமாகச் சிந்திப்பவனே வெற்றிப் பெறுகிறான். ஒரே ஒரு பழத்தை பெற வித்தியாசமாகச் சிந்தித்த விநாயகர் வெற்றி பெற்றார்.
எல்லோரையும் போலச் சிந்தித்த முருகன் தோல்வி அடைந்தார். அதைப்போலவே ஒரே ஒரு பழ ஐடியாவை வைத்து வித்தியாசமாகச் சிந்தித்த ஒரு இளைஞர் கடனில் மூழ்கிய குடும்பத்தினர்களை மீட்டதோடு, இன்று இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவராக விளங்கி வருகிறார். அவர்தான் பாப்ராய் ஐஸ்க்ரீம் நிறுவனர் குணால் பாப்ராய். செம business இல்ல.
பாப்ராய் நிறுவனம்
சாம்பலில் இருந்து உயிருடன் மீண்டும் வந்த பீனிக்ஸ் பறவை போலக் கடனில் மூழ்கித் தத்தளித்துக் கொண்டிருந்த தந்தையின் ஐஸ்க்ரீம் கடையைத் தனது வித்தியாசமான ஐடியாவால் இன்று இந்தியா மட்டுமின்றி உலகின் பல நகரங்களின் முன்னணி ஐஸ்க்ரீம் நிறுவனமாக விளங்கி வரும் பாப்ராய் நிறுவனத்தின் வருட வர்த்தகம் ரூ.12 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
கோஹ்லி முதல் ஹிலாரி கிளிண்டன் வரை பிடித்த ஐஸ்க்ரீம்
அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் முதல் நம்மூர் அதிரடி நாயகன் விராத் கோஹ்லி வரை இவருடைய ஐஸ்க்ரீமுக்கு அடிமை என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? ஆனால் உண்மை அதுதான்
பெரிய நஷ்டம்
குணால், பெங்களூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு வரை வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்தான். அப்போது அவருடைய தந்தை நடத்தி வந்த ஐஸ்க்ரீம் நிறுவனம் பெரிய நஷ்டத்தைச் சந்தித்ததால் சுமார் ரூ.30 லட்சம் வரை நஷ்டத்தைத் தந்தது. இனிமேல் தன்னால் எழுந்திருக்கவே முடியாது என்று மனமுடைந்த தந்தையைத் தேற்றுவதற்காகத் தான் செய்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டுக் கொல்கத்தா திரும்பினார் குணால். அப்போது அவருக்கு வயது வெறும் 22 மட்டுமே.
எவ்வாறு நஷ்டம் வந்தது
குணால் தன்னுடைய தந்தை அனுவரத், சகோதரர் நிஷாந்த் ஆகியோருடன் முதலில் எவ்வாறு நஷ்டம் வந்தது என்பது குறித்து ஆலோசித்தார். எல்லோரும் தயார் செய்யும் ஐஸ்க்ரீமை இவர்களும் தயார் செய்தது, வாடிக்கையாளர்களுக்குக் கடன் கொடுத்தது, கொடுத்த கடன் திரும்பி வராதது ஆகியவையே நஷ்டத்திற்குக் காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டது.
யாரும் இதுவரை அறிமுகம் செய்திராத ஐஸ்க்ரீம்
அப்போதுதான் குணால் முடிவு செய்தார் வித்தியாசமான யாரும் இதுவரை அறிமுகம் செய்திராத ஐஸ்க்ரீமை தயார் செய்ய வேண்டும் என்று. ஐஸ்க்ரீமில் முதன்முதலில் பழங்களைக் கலந்ததுதான் இவரது ஐடியா. அதுவும் இயற்கையான பழங்களை ஐஸ்க்ரீமுடன் கலந்தார். வெண்ணிலா, ஸ்ட்ராபெர்ரி என்று சாதாரணமாகக் கொடுக்காமல் பழங்கள் கலந்த வெண்ணிலா, ஸ்ட்ராபெர்ரி என்று அறிமுகம் செயுதார்.
அதிர்ஷ்டம்
தந்தையின் ஐஸ்க்ரீம் நிறுவனம் இயங்கி வந்த இடத்தை மீண்டும் அந்தக் கடையின் உரிமையாளர் தர மறுத்தார். ஆனால் அதிர்ஷ்டம் அவரது கதவை தட்டியது. கொல்கொத்தாவின் இன்னொரு பகுதியில் ஐஸ்க்ரீம் வியாபாரம் செய்து வந்த ஒருவர் தன்னுடைய கடையுடனும் ஊழியர்களுடனும் குணாலுக்கு விற்க முன்வந்தார். அந்த நிறுவனத்தையே தனது தயாரிப்பு நிறுவனமாகத் தொடங்கினார் குணல்.
பார்பரைஸ்
தன்னுடைய புதிய ஐஸ்க்ரீம் நிறுவனத்திற்குப் பார்பரைஸ் என்று பெயர் வைத்தார். அதன் பின்னர் அவர்களுக்குத் தோல்வி என்பதே இல்லை. இயற்கை மற்றும் பிரஷ் ஆன பழங்களுடன் கூடிய ஐஸ்க்ரீமுக்கு ஆரம்பத்தில் குறைந்த அளவே வரவேற்பு இருந்தாலும் இவருடைய ஐஸ்க்ரீமின் தரம் காரணமாக வாடிக்கையாளர்களே விளம்பரதாரர்களாக மாறினர். கொஞ்சம் கொஞ்சமாக ஐஸ்க்ரீம் வகைகளை விரிவாக்கினார் குணால். குறைந்த காலத்தில் சுமார் 50 வகையான ஐஸ்க்ரீம்களை உருவாக்கிய பெருமை இவருக்கு மட்டுமே உண்டு.
கடன் இல்லை
கடந்த காலக் கசப்புணர்வு காரணமாக எந்த வாடிக்கையாளர்களுக்கும் கடன் கொடுப்பதைத் தவிர்த்தார். குறைந்த லாபம் போதும், ஆனால் கேஷ் பிசினஸ்தான் எந்தக் காரணத்தையும் முன்னிட்டும் கடன் கிடையாது என்ற இவரது கொள்கை ஆரம்பத்தில் விநியோகிஸ்தர்களால் விரும்பத்தகாத வகையில் இருந்தாலும், பொதுமக்களிடத்தில் பிரபலம் ஆக ஆக, நடைமுறைக்குச் சாத்தியமாகியது.
படிப்பு
ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்த நிஷாந்த் பார்பை அவர்களின் உழைப்பால் கொல்கத்தாவில் உள்ள மிகப்பெரிய ஓட்டல்கள், ரெஸ்டாரெண்டுகள், கேட்டரிங் நிறுவனங்களிடம் இருந்து ஆர்டர்கள் குவிந்தன. 2009ஆம் ஆண்டுக் கொல்கத்தாவில் உள்ள மால் ஒன்றில் இவர் போட்ட ஸ்டால் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
கிளைகளைத் தொடங்க உரிமை
அதன்பின்னர் தனது தயாரிப்பின் பல கிளைகளைத் தொடங்க உரிமை அளித்தார் குணால். ஆரம்பத்தில் எந்தவித முன்பணமும் பெறாமல் கிளை தொடங்க உரிமை கொடுத்த குணால் தன்னுடைய பிராண்டு முக்கியத்துவம் பெற்றதை அடுத்து ஒரு குறிப்பிட்ட தொகையை முன்பணமாகப் பெற்றார். ரூ.50000 என்று தொடங்கிய முன்பணம், இன்று ரூ.3.5 லட்சமாக உள்ளது. இன்று இவருடைய ஐஸ்க்ரீம் நிறுவனம் டெல்லி, மும்பை, ஐதராபாத் மற்றும் சென்னை உள்படச் சுமார் 10 நகரங்களில் 25 கிளைகளுடன் வெற்றிகரமாக இயங்கி வருகிறது. மேலும் இன்னும் 31 கிளைகள் தொடங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. விஜயவாடா, ராஜ்பூர், புனே உள்பட ஒருசில முக்கிய நகரங்களில் விரைவில் பாப்ராய் நிறுவனத்தின் கிளைகள் தொடங்கப்பட உள்ளன.
ஒரு நாள் உற்பத்தி
நாள் ஒன்றுக்கு 15000 முதல் 20000 லிட்டர் வரை தற்போது ஐஸ்க்ரீம் தயாரித்து வரும் குணாலின் ஒரே ஒரு கனவு, தனது தந்தை நஷ்டம் அடைந்த அதே கடையில் ஒரு கிளையைத் தொடங்க வேண்டும் என்பது தானாம். அதுவும் விரைவில் நிறைவேறும் என்று கூறுகிறது குணாலின் குடும்பம்.
விரைவில் உலகம் முழுவதும் பாப்ரைஸ்
மேலும் மிக விரைவில் உலகின் பல நாடுகளில் பாப்ரைஸ் ஐஸ்க்ரீமின் கிளைகள் தொடங்கவுள்ளன. இன்று பாப்ராய்ஸ் நிறுவனம் மிகப்பெரிய நிறுவனமாக இருந்து வந்தபோதிலும் இந்த நிறுவனத்தின் மொத்த கணக்கு வழக்கையும் பார்ப்பது அவருடைய குடும்பத்தின் முக்கிய உறுப்பினரான 60 வயது தல்கி பாப்ராய் தான். இவருக்குத் தெரியாமல் குணால் ஒரு பைசா கூட எடுத்துச் செலவு செய்ய மாட்டாராம்.
இந்தியாவின் அபாரமான தொழிலதிபர்
உண்மையான உழைப்பு, வித்தியாசமான ஐடியா, நேர்மை மற்றும் கொஞ்சம் அதிர்ஷ்டம் ஆகியவை காரணமாக இன்று இந்தியாவின் அபாரமான தொழிலதிபராக இருந்து வரும் குணாலுக்கு ஒரு சல்யூட் போடலாமே....