மும்பை: ஒரு நிறுவனம் தனது முதலீட்டாளர் நலனைக்காவோ, தனது பங்கு இருப்பை அதிகரிக்கவோ சந்தை வர்த்தகத்தில் இருக்கும் பங்குகளை வாங்கும் இதுவே பைபேக் என்று கூறப்படுக்கிறது. பைபேக் செய்ய இது மட்டும் தான் காரணமா என்றால் இல்லை நிறுவனத்திலும், நிர்வாகத்தைப் பொருத்துக் காரணங்கள் மாறுபடும்.
ஆனால் இந்தப் பைபேக் மூலம் சில்லரை முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய லாபம் உண்டு. சில நேரங்களில் நஷ்டங்களும் ஏற்படும், ஆனால் இதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு.
ரூ.34,470 கோடி
மார்ச் 31ஆம் தேதி வரையில் முடிந்த 2016-17ஆம் நிதியாண்டில் பைபேக் மூலம் பட்டியலிடப்பட்ட இந்திய நிறுவனங்கள் சுமார் ரூ.34,470 கோடி மதிப்புள்ள பங்குகளைப் திரும்பப் பெற்றுள்ளது.
45 நிறுவனங்கள்
கடந்த நிதியாண்டில் மட்டும் மொத்தம் 45 நிறுவனங்கள், அவற்றின் பங்குகளைப் பைபேக் செய்திருக்கின்றன. இந்தத் தொகை என்பது கடந்த ஏழு ஆண்டுகளில் இந்திய நிறுவனங்கள் பைபேக் செய்துள்ள பங்குகளின் ஒட்டுமொத்த மதிப்பைவிட அதிகமாகும்.
எதற்காக இந்த பைபேக்?
இந்த அளவுக்கு அதிகமாகப் பைபேக் நடக்கக் காரணம், பங்கு முதலீடு மூலம் ரூ.10 லட்சத்துக்கு மேல் டிவிடெண்ட் கிடைக்கும்போது, 10 சதவிகித வரியை முதலீட்டாளர் கட்ட வேண்டும் என மத்திய அரசு புதிதாக 2016 ஏப்ரல் 1 முதல் விதிமுறை கொண்டு வந்திருப்பதாகும்.
கையிருப்புத் தொகை
மேலும், நிறுவனங்கள், முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்ட் வழங்கும் போது, டிவிடெண்ட் விநியோக வரியை (டிடிடி) அரசுக்குக் கட்டுகின்றன. இந்த இரு வரியையும் தவிர்க்கும் விதமாகத்தான் முன்னணி நிறுவனங்கள், அவற்றின் கைவசம் இருக்கும் கணிசமான கையிருப்புத் தொகை மூலம் முதலீட்டாளர்களுக்குப் பணத்தைக் கொடுத்து, பங்குகளை வாங்கி வருகின்றன.
முக்கிய நிறுவனங்கள்
இந்நிலையில் விப்ரோ (ரூ.2,500 கோடி), நால்கோ (ரூ.2,834 கோடி), கோல் இந்தியா (ரூ.3,650 கோடி), என்எம்டிசி (ரூ.7,527 கோடி) ஆகிய நிறுவனங்கள் அதிகத் தொகையைத் திரட்டியுள்ளன.
மேலும் நடப்பு நிதியாண்டில் இந்தப் பைபேக் அதிகமாக இருக்கும் என்கிறார்கள் சந்தை வல்லுனர்கள். 2017-18 ம் நிதி ஆண்டில் குறைந்தபட்சம் ரூ.25,000 கோடிக்கு மேல் நிறுவனங்கள் பைபேக் நடவடிக்கையைச் செய்யும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
டிசிஎஸ்
நாட்டின் முன்னணி மென்பொருள் நிறுவனங்களின் ஒன்றான டிசிஎஸ் இன்னும் இரு மாதங்களில் ரூ.16,000 கோடி மதிப்புள்ள பங்குகளைச் சந்தையில் இருந்து திரும்பப் பெற உள்ளது.
பிற ஐடி நிறுவனங்கள்
டிசிஎஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து எச்சிஎல் டெக்னலாஜீஸ் நிறுவனமும் ரூ.3,500 கோடி மதிப்புள்ள பங்குகளைப் பைபேக் மூலம் வாங்க முடிவு செய்துள்ளது.
இந்த வரிசையில் இன்போசிஸ் நிறுவனமும் சந்தையில் இருக்கும் பங்குகளைத் திரும்பப்பெற உள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.