திங்கட்கிழமை வர்த்தகத்தில் வங்கி, ஐடி, மற்றும் எண்ணெய் நிறுவனங்களில் அதிகளவிலான முதலீடு செய்யப்பட்ட காரணத்தால், இன்று காலை வர்த்தகம் துவக்கம் முதல் நிலையான வர்த்தகத்தை பெற்று அசத்தியது.
இதன் காரணமாக சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் புதிய உச்சத்தை தொட்டது.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 216.98 புள்ளிகள் உயர்ந்து 32,245.87 புள்ளிகளை அடைந்தது. அதேபோல் நிஃப்டி குறியீடு 51.15 புள்ளிகள் உயர்ந்து 9,966.40 புள்ளிகளை அடைந்து திங்கட்கிழமை வர்த்தகம் முடிவடைந்தது.
காலாண்டு முடிவுகள்
அடுத்த சில வாரங்களில் நாட்டின் முக்கிய நிறுவனங்கள் தனது காலாண்டு முடிவுகளை வெளியிடும் காரணத்தால், ஆசிய சந்தையில் நிலையான வர்த்தக சூழ்நிலையில் அதிகளவிலான வளர்ச்சியை அடைந்தது.
கச்சா எண்ணெய் ஏற்றுமதி அமைப்பு
இன்று மாலையில் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் அமைப்பான OPEC அமைப்புடன், எண்ணெய் ஏற்றுமதி செய்யாத அமைப்புகள் முக்கிய கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டம் பங்கு வர்த்தக சூழ்நிலையை கணிசமாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி
மேலும் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி அளவு 2017-18ஆம் நிதியாண்டில் 7.2 சதவீதமாக இருக்கும் என சர்வதேச நாணய அமைப்பு தெரிவித்தது. கடந்த வருடம் இதனை 7.1 சதவீதமாக அறிவித்தது.
மேலும் 2018-19ஆம் நிதியாண்டுகளில் இதன் அளவு 7.7 சதவீதம் வரை உயரும் எனவும் ஐஎம்எப் அமைப்பு தெரிவித்துள்ளது.