அமெரிக்கப் பெடரல் வங்கி டிசம்பர் 15ஆம் தேதி நடக்க உள்ள நாணய கொள்கையில் தனது வட்டி விகிதத்தை உயர்த்தத் திட்டமிட்டுள்ள நிலையில், அமெரிக்கச் சந்தையில் அனைத்து வாய்ப்புகள் இதற்குச் சாதகமாக இருக்கும் காரணத்தால் முதலீட்டாளர்களுக்குச் சிறந்த தளமாகத் தற்போது அமெரிக்கா உருவெடுத்துள்ளது.
சர்வதேச சந்தையில் இருக்கும் அன்னிய முதலீடுகள் அனைத்தும் குறிப்பாக இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற ஆசிய சந்தையில் இருக்கும் அன்னிய முதலீடுகள் அமெரிக்கக் கடன் சந்தைக்குச் சென்று வருகிறது.
இதன் எதிரொலியாக அமெரிக்கப் பங்குச்சந்தை குறியீடான டாவ் ஜோன்ஸ் மற்றும் எஸ்&பி 500 புதன்கிழமை வர்த்தகத்தில் வரலாறு காணாத உயர்வை அடைந்துள்ளது.
மேலும் ஐரோப்பிய மத்திய வங்கியும் தனது பணப்புழக்க நடவடிக்கையை அடுத்த 6 மாதத்திற்கு நீட்டிக்கத் திட்டமிட்டுள்ளதால், ஐரோப்பிய சந்தையும் இன்று அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்றுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி நேற்று நடத்திய இருமாத நாணய மறுஆய்வு கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதத்தைக் குறைக்காவிட்டாலும், கனரா வங்கி போன்ற பல முக்கிய வங்கிகள் கடனுக்கான வட்டியைக் குறைத்துள்ளது. மேலும் அடுத்தச் சில நாட்களில் பிற அனைத்து வங்கிகளும் தங்களின் வட்டி விகிதத்தைக் குறை முடிவு செய்துள்ளது.
இத்தகைய சூழ்நிலையில் வியாழக்கிழமை காலை வர்த்தகம் துவங்கிய முதல் அதிரடியான முதலீட்டையும், வர்த்தகத்தையும் மும்பை பங்குச்சந்தை பெற்றது.
இதன் எதிரொலியாக இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 457.41 புள்ளிகள் உயர்ந்து 26,694.28 புள்ளிகளை அடைந்துள்ளது. மேலும் நிஃப்டி குறியீடு 144.80 புள்ளிகள் உயர்ந்து 8,200 புள்ளிகளைத் தாண்டி 8,246.85புள்ளிகள் என்ற வலிமையான நிலையை அடைந்துள்ளது.