சென்செக்ஸ் 200 புள்ளிகள் சரிந்தும், நிப்டி குறியீடு 8,600-க்கும் குறைவாகவும் இன்று வர்த்தகம் ஆனது. அமெரிக்கக் குடியரசு தலைவர் டொனால்ட் டிரம்ப் குடியேற்ற கொள்கையில் கொண்டு வந்த மாற்றங்கள் மற்றும் மத்திய பட்ஜெட் போன்றவற்றால் பங்குச் சந்தை பெறும் சரிவை சந்தித்தது.
இன்று பங்குச் சந்தை முடிவில் சென்செக்ஸ் 0.70 சதவீதம் அல்லது 193.60 புள்ளிகள் சரிந்து 27,655.96 புள்ளிகளுடனும், நிப்டி 0.83 சதவீதம் அல்லது 71.45 புள்ளிகள் சரிந்து 8,561.30 புள்ளிகளுடனும் வர்த்தகமானது.
ஐடி நிறுவனப் பங்குகள்
அமெரிக்கக் குடியரசு தலைவர் டொனால்ட் டிரம்ப் குடியேற்ற கொள்கையில் கொண்டு வந்துள்ள மாற்றங்கள், எச்1பி விசா மீது புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வந்ததினால் ஐடி நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்தன.
டாப் ஐடி நிறுவனங்களின் நிலை
இன்றைய வர்த்தக நேர மூடிவில் மும்பை பங்கு சந்தையில் ஐடி நிறுவனங்களின் பங்குகள் 4 சதவீதம் வரை சரிவை சந்தித்துள்ளன. குறிப்பாக டிசிஎஸ் நிறுவனப் பங்குகள் 4.47 சதவீதமும், எச்சிஎல் நிறுவனப் பங்குகள் 3.67 சதவீதமும், டெக் மகேந்திரா நிறுவனத்தின் பங்குகள் 4.23 சதவீதமும் சரிந்துள்ளன.
அமெரிக்க விசா விதி
எச்1பி விசாவின் விதிகள் மாற்றப்பட்டுள்ளதால் தேசிய பங்குச் சந்தையில் ஐடி நிறுவனங்களின் பங்குகள் 5.4 சதவீதம் வரை சரிவை சந்தித்துள்ளன. சென்ற இரண்டு மாதத்தில் ஐடி நிறுவனப் பங்குகள் சரிந்ததில் இதுவே அதிகபட்சமாகும்.
ஐடியா
தொலைத்தொடர்பு நிறுவனமான ஐடியாவும், வோடாஃபோனும் இந்தியாவில் இணைவது குறித்துத் திங்கட்கிழமை வோடாஃபோன் அறிவித்ததினால் ஐடியா நிறுவனத்தின் பங்குகள் 12.51 சதவீதம் உயர்ந்தது.
மத்திய பட்ஜெட்
இன்று பிற்பகல் பொருளாதாரச் சர்வே அறிவிப்பின் போது 100 புள்ளிகள் வரை சென்செக்ஸ் உயர்ந்த. ஆனால் சர்வேயின் முடிவில் சொல்லிக்கொள்ளும்படி எதுவும் இல்லாததால் அறிவிப்பு முடிந்த உடன் மீண்டும் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கும் அதிகமாகச் சரிந்து வர்த்தக முடிவின் போது 193.60 புள்ளிகள் சரிவை சந்தித்தது.