இந்திய ரிசர்வ் வங்கியின் இருமாத நாணய கொள்கை கூட்டம் நாளை நடக்க உள்ள காரணத்தால் மும்பை பங்குச்சந்தையில் இன்று அதிகளவிலான முதலீடு குவித்துள்ளது.
அமெரிக்கப் பெடரல் வங்கி தனது வட்டி விகிதத்தை உயர்த்தத் திட்டமிட்டுக்கொண்டு இருக்கும் நிலையில், நாட்டின் பொருளாதாரத்தையும், வர்த்தகத்தையும் மேம்படுத்த, தொடர் அன்னிய முதலீட்டை ஈர்க்கும் திட்டத்துடன் புதன்கிழமை நடக்க இருக்கும் கூட்டத்தில் வட்டி விகிதங்கள் குறைந்தபட்சம் 0.25 சதவீதம் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் இன்றைய வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட், பவர், எண்ணெய், ஏரிவாயு, பிஎஸ்யூ மற்றும் ஐடி துறை சார்ந்த நிறுவனங்களில் அதிகளவிலான முதலீடு செய்யப்பட்டது.
செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 43.66 புள்ளிகள் உயர்ந்து, 26,392.76 புள்ளிகளை எட்டியது. அதேபோல் நிஃப்டி குறியீடு 14.40 புள்ளிகள் உயர்ந்து 8,143.15 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.