டெல்லி: மத்திய பொதுத் துறை எஃகு தயாரிப்பு நிறுவனமான செயில் நிறுவனத்தின் (Steel Authority of India-SAIL) 10.82 சதவீத பங்குகளை ஏலம் விட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
முதலில் இந்த நிறுவனத்தின் பங்குகளை விற்க மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. இந் நிலையில் அதை ஏலம் மூலம் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது பங்குச் சந்தைகளில் இந்த நிறுவனத்தின் பங்கு விலைகளின் அடிப்படையில், 10.82 சதவீத பங்குகளை ஏலம் விட்டால் மத்திய அரசுக்கு ரூ. 4,000 கோடிக்கு மேல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசிடம் இந்த நிறுவனத்தின் 85.82 சதவீத பங்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டில் பொதுத் துறை பங்குகள் விற்பனை மூலம் (அதாவது இன்னொரு வகை தனியார்மயம்) ரூ. 30,000 கோடியைத் திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் செயில் நிறுவன பங்குகள் பங்குச் சந்தை மூலம் ஏலத்துக்குப் போகின்றன.
இந்த நிறுவனத்தைத் தொடர்ந்து இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ், தேசிய அலுமினிய நிறுவனம் (Nalco), இந்துஸ்தான் காப்பர், ஆயில் இந்தியா ஆகியவற்றின் உள்ள தனது பங்குகளையும் இந்த ஆண்டு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.









