மாருதியின் மானேசர் ஆலையில் நடந்த பெரும் வன்முறை சம்பவத்தில் 100 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், ஆலையின் உற்பத்தி பிரிவின் ஒரு பகுதி தீவைத்துக் கொளுத்தப்பட்டுவிட்டது.
அங்கு மூத்த அதிகாரி ஒருவரும் பலியானதால் அசாதரணமான சூழ்நிலை நிலவுகிறது. எனவே, மானேசர் ஆலையை உடனடியாக திறக்க முடியாத நிலை இருக்கிறது.
மேலும், ஆண்டுக்கு 5.5 லட்சம் கார்களுக்கு மேல் உற்பத்தி செய்யும் திறன்கொண்ட அந்த ஆலையில் தொடர்ந்து தொழிலாளர் பிரச்னையில் சிக்கி வருகிறது. கடந்த ஆண்டு தொழிலாளர்கள் நடத்திய நீண்ட வேலை நிறுத்தப் போராட்டங்களால் அந்த நிறுவனத்துக்கு 2500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, தற்போது ஏற்பட்டுள்ள தொழிலாளர் பிரச்னையால் அந்த நிறுவனத்துக்கு மீண்டும் பெரும் இழப்பை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மானேசர் ஆலையில் உற்பத்தி இழப்பால் நாள் ஒன்றுக்கு 75 கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது.
மேலும், இந்த பிரச்னை தீர்ந்து ஆலையை உடனடியாக திறக்கும் சூழ்நிலைகளும் இல்லை. இதனால், எப்போது ஆலை திறக்கப்படும் என்று தெரியவில்லை. மேலும், இந்த பிரச்னையால் பங்கு சந்தையிலும் அந்த நிறுவனத்தின் பஙகுகள் சரிவை சந்தித்து வருகின்றன.
பல வகையிலும் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மறுபுறம் வாடிக்கையாளர் மத்தியில் இருக்கும் நற்பெயரும் கெட்டுவிடும் நிலை இருக்கிறது. மாருதியின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களான ஸ்விப்ட் மற்றும் டிசையர் கார்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், வெயிட்டிங் பீரியட் அதிகமாகும் நிலை ஏற்பட்டுள்ளதால், புக்கிங் செய்து காத்திருக்கும் வாடிக்கையாளர்களும், புதிய வாடிக்கையாளர்களும் பிற நிறுவனங்களின் கார்களை வாங்க திட்டமிடக்கூடும். இதுவும் விற்பனையில் மாருதிக்கு பெரிய அளவில் இழப்பை ஏற்படுத்தலாம்.
மேலும், உற்பத்தி பிரிவின் ஒரு பகுதி தீவைத்துக் கொளுத்தப்பட்டதால் அதனாலும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால், உற்பத்தி இலக்கில் பாதிப்பு ஏற்படும் நிலையும் உருவாகியிருக்கிறது. இதுபோன்று பல்வேறு வகையிலும் இழப்பை ஏற்பட்டுள்ளதால் அந்த நிறுவனம் தற்போது பெரும் நெருக்கடியில் இருக்கிறது.