ஈரோட்டில் மஞ்சளுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய கோரி பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு ராமதாஸ் பேசுகையில்,
விவசாயிகளுக்காக தொடர்ந்து போராடி வரும் ஒரே கட்சி பாமக தான். மற்ற கட்சிகளை விட விவசாயிகளின் நலனுக்காக- மேம்பாட்டுக்காக பாமக மட்டுமே குரல் கொடுத்து வருகிறது. மஞ்சள் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதைபற்றி எல்லாம் ஆண்ட கட்சிக்கும்-ஆளும் கட்சிக்கும் அக்கறை இல்லை.
இந்த கட்சிகள் நினைத்தால் மஞ்சள் விலையை கட்டுப்படுத்த முடியும். ஆனால் அவர்களுக்கு விவசாயிகளை பற்றி, தொழிலாளர்களை பற்றி எல்லாம் கவலை இல்லை. அவர்கள் அடுத்த தேர்தல் பற்றி தான் கவலைப்படுகிறார்கள். இவர்களை தண்டிக்க சரியான நேரம் தேர்தல் தான். தமிழ்நாட்டில் உள்ள பெரிய கட்சி பாமக தான்.
எனவே தான் விவசாயிகளின் நலனுக்காக குரல் கொடுத்து வருகிறோம். மஞ்சளை தமிழக அரசே ரூ. 15,000க்கு கொள்முதல் செய்து அதை இருப்பு வைத்து நல்ல விலை வரும் போது அதை விற்கலாம். இவ்வாறு செய்தால் மஞ்சளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கும்.
வியாபாரிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு உடனடியாக விலை நிர்ணயம் செய்கிறார்கள். ஆனால் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் விளை பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய முடியவில்லை.
பாமக சார்பில் கடந்த 5 ஆண்டுகளாக நிழல் பட்ஜெட் தயார் செய்து வெளியிடப்பட்டு உள்ளது. இதில் சிறப்பான திட்டங்கள் உள்ளன. இதை நடைமுறைபடுத்தினால் சிறிய விவசாயி கூட காரில் செல்லும் அளவுக்கு வசதி வாய்ப்பு கிடைக்கும்.
விவசாயிகள் தங்களது மனக்குமுறலை வெளிப்படுத்தும் நேரம் வரும் என்று எச்சரிக்க விரும்புகிறேன். மஞ்சள் மண்டியில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு போதிய ஊதியம் வழங்க வேண்டும். நான் முதலில் விவசாயி, பிறகு டாக்டர், பிறகு போராளி, கடைசியில் தான் அரசியல்வாதி.
இதனால் தான் மற்ற கட்சிகள் எல்லாம் சென்னையில் இருந்து அரசியல் நடத்தும்போது நான் மட்டும் ஒரு கிராமத்தில் இருந்து அரசியல் நடத்துகிறேன். விவசாயிகளின் கஷ்டத்தை உணர்ந்தவன் நான். எனவே உங்களது பிரச்சனைக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்றார்.