டெல்லி: நாட்டின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கியுடன் இணைந்து மத்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்று மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.
நிதி அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்ற பிறகு டெல்லியில் செய்தியாளர்களிடம் ப.சிதம்பரம் பேசியதாவது:
நாட்டின் பொருளாதார நிலையை சீராக்குவதற்கான திட்டங்கள் வகுக்கப்படும். அனைத்துத் துறைகளிலும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெற முன்னுரிமை அளிக்கப்படும். பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கியுடன் இணைந்து அரசு நடவடிக்கை எடுக்கும். தற்போது கச்சா எண்ணெய், ஜவுளி, மின் துறைகளில் கடுமையான நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இதனை சீராக்க வழிமுறைகள் காணப்படும்.நடப்பு ஆண்டில் ஜூலை மாதம் வரையிலான பருவ மழை மிகக் குறைவாகவே உள்ளது. இதனால் ஏற்படும் வறட்சியால் விவசாயிகள் பாதிக்காத வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
முன் தேதியிட்ட வரிகள் சட்டம் மறு ஆய்வு செய்யப்படும். அதிகமான வங்கி வட்டி விகிதங்களிளை சீராக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.