கடந்த மாதம் 100 கிலோ எடை கொண்ட சர்க்கரை மூட்டை ரூ.2,900-க்கும், ஒரு கிலோ ரூ.31-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், தற்போது, ஒரு மூட்டை சர்க்கரை ரூ.3,900 ஆக உயர்ந்துள்ளது. இதனால், ஒரு கிலோ சர்க்கரை விலை ரூ.10 உயர்ந்து ரூ.41-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், உயரும் என்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெளிநாடுகளுக்கு 18 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. அதே நேரத்தில், கரும்பு கொள்முதல் விலையும் டன் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.2,200 வரை வழங்கப்படுகிறது. இப்படி அடுத்தடுத்து விலை உயர்வைத் தூண்டும் வகையிலான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்ததால்தான் விலை உயர்வு அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டுஎழுந்துள்ளது.
இதற்கிடையே, அரிசி விலையும் மறுபக்கம் உயரத் தொடங்கியுள்ளது. தென் மேற்குப் பருவ மழை மக்களை மட்டுமல்லாமல் விவசாயிகளையும் கடுமயாக ஏமாற்றி விட்டது. குறிப்பாக நெல் விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். விளைச்சல் குறைந்து போய் விட்டது. ஆனால் முட்டாள் மத்திய அரசு அரிசி ஏற்றுமதிக்கு அனுமதி அளித்துள்ளது. இதனால் அரிசி பெருமளவில் வெளிநாடுகளுக்குப் போகத் தொடங்கியுள்ளது. இதனாலும் அரிசி விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
கடந்த மாதம் பொன்னி அரிசி 25 கிலோ ரூ. 1000க்கு விற்றது. தற்போது அது ரூ. 100 கூடியுள்ளது. கடந்த மாதம் ரூ.42-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ வெள்ளை பொன்னி அரிசி, தற்போது ரூ.46 ஆக உயர்ந்துள்ளது.
ஆந்திராவிலும், தமிழகத்திலும், கர்நாடகத்திலும் நெல் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் அரிசி விலை மேலும் மேலும் உயரும் அபாயம் இருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இன்னொரு பக்கம் கோதுமை விலையும் உயர்ந்து வருவதால் மக்கள் விழி பிதுங்கிக் காணப்படுகின்றனர்.
சர்க்கரை விலை உயர்வு, அரிசி விலையும் உயர்வு என்றிருந்த நிலையில் தற்போது கோதுமை விலையும் உயர்வதால் எதைச் சாப்பிடுவது என்ற பெரும் குழப்பத்திற்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
அதேசமயம், பருப்பு விலையில் சரிவு காணப்படுவதால் மக்கள் சற்றே ஆறுதல் அடைந்துள்ளனர்.