ஏர் இந்தியா நிறுவனம் வாங்கியுள்ள ட்ரீம்லைனர் போயிங் 787 விமானம் தனது சேவையை இன்று முதல் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை டெல்லியில் இருந்து புறப்பட்ட விமானம் நண்பகல் சென்னை வந்தடைந்தது.
256 இருக்கைகள் கொண்ட அந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகள் விமான நிலையத்தில் கூறுகையில்,
ட்ரீம்லைனர் விமானத்தில் பயணம் செய்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதில் நல்ல இடவசதி இருந்தது. மற்ற விமானங்களுடன் ஒப்பிடுகையில் சத்தம் குறைவாகவும், பயண நேரம் 25 நிமிடம் குறைவாகவும் உள்ளது.
சொகுசு இருக்கைகள் மிகவும் வசதியாக இருந்தது. பிற விமானங்களுக்கு வசூலிக்கப்படும் கட்டணமே இதற்கும் வசூலிப்பது சந்தோஷமாக உள்ளது. இதனால் இந்த விமானம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெறும் என்றனர்.
பல்வேறு சிக்கல்களில் உள்ள ஏர் இந்தியா நிறுவனத்தை ட்ரீம்லைனர் விமானம் தூக்கி நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது டெல்லி-சென்னை, பெங்களூர் வழித்தடங்களில் மட்டுமே இது இயக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.