டெல்லி: வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்களுக்கு கட்டுப்பாடு விதித்த மத்திய அரசு, தற்போது மாநிலங்களுக்கு மண்ணெண்ணை ஒதுக்கீடு செய்வதிலும் கை வைத்துள்ளது. இதனால் தமிழகத்தில் ரேஷன் கார்டுகளுக்கான குறிப்பிட்ட அளவு மண்ணெண்ணையை விநியோகிக்க முடியாமல் மாநில அரசு திணறி வருகிறது.
ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு மானிய விலையில் 6 கேஸ் சிலிண்டர்கள் மட்டுமே வழங்கப்படும். அதற்கு மேல் பெறப்படும் சிலிண்டர்களுக்கு மானியம் கிடையாது என்று மத்திய அரசு அறிவித்தது.
இதனால் நாட்டில் உள்ள ஏழை, எளிய குடும்பங்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவிப்பை எதிர்த்து, எதிர்கட்சிகள் தரப்பில் நேற்று நாடு தழுவிய பந்த் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் இந்த மாதத்தில் இருந்து அடுத்த 6 மாதங்களுக்கு (மார்ச் வரை) 3 சிலிண்டர் தான் வழங்க வேண்டும் என்று எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐ.ஓ.சி) மேலாளர் எழிலரசன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
ஒரு சமையல் எரிவாயு இணைப்புக்கு ஆண்டிற்கு 6 சிலிண்டர்கள் மட்டுமே வழங்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி 2012 செப்டம்பர் முதல் 2013ம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான 6 மாத காலக்கட்டத்தில் 3 சிலிண்டர் மட்டுமே வழங்க வேண்டும் என்று எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தமிழகம் முழுவதும் உடனடியாக அமலுக்கு வருகிறது.
கூடுதல் சிலிண்டர் தேவைபடுவோருக்கு என்ன விலையில் சிலிண்டர் சப்ளை செய்வது என்பது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த அறிவிப்பு வந்தவுடன் அனைத்து சமையல் எரிவாயு முகவர்களுக்கும் சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கப்படும் என்றார்.
மண்ணெண்ணை ஒதுக்கீடு குறைப்பு:
இந்த நிலையில் மாநிலங்களுக்கான மண்ணெண்ணை ஒதுக்கீடு செய்வதிலும் மத்திய அரசு கை வைத்துள்ளது. தமிழகத்திற்கான மண்ணெண்ணை ஒதுக்கீடு கடந்த சில மாதங்களாக குறைந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள 1.5 கோடி ரேஷன் கார்டுகளுக்கான மண்ணெண்ணை விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கேஸ் சிலிண்டர்கள் இல்லாத குடும்பங்களுக்கு மாதந்தோறும் 10 லிட்டர் மண்ணெண்ணையும், ஒரு சிலிண்டர் வைத்திருப்பவர்களுக்கு 3 லிட்டர் மண்ணெண்ணையும் ரேஷன் கார்டு மூலம் வழங்கப்படுகிறது. இதற்காக மாதந்தோறும் 65,140 கிலோ லிட்டர் மண்ணெண்ணை தேவைப்படுகிறது.
இது குறித்து முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதினார். இதில் தமிழகத்துக்கான மண்ணெண்ணை ஒதுக்கீட்டை அதிகரித்து வழங்குமாறு தெரிவித்திருந்தார். ஆனால் இந்த மாத ஒதுக்கீட்டில் 13,377 கிலோ லிட்டர் மண்ணெண்ணையை மத்திய அரசு குறைத்து வழங்கியுள்ளது. இதனால் 45 ஆயிரம் கிலோ லிட்டர் மண்ணெண்ணையை வைத்து கொண்டு, விநியோகிக்க முடியாமல் மாநில அரசு திணறி வருகிறது.
இதனால் 10 லிட்டர் வழங்கப்பட்டு வந்த ரேஷன் கார்டுகளுக்கு தற்போது 8 லிட்டர் மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால் 3 லிட்டர் வழங்கப்பட்ட ரேஷன் கார்டுகளுக்கு விநியோகத்தில் எந்த மாற்றமும் இல்லை.
இது குறித்து ரேஷன் கடை ஊழியர் ஒருவர் கூறியதாவது,
10 லிட்டர் பெறும் ரேஷன் கார்டுகளுக்கு அளவை குறித்து வழங்குமாறு எங்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. ஆனால் 3 லிட்டர் பெறும் ரேஷன் கார்டுகளுக்கு விநியோகத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றார்.
ஆண்டிற்கு 6 சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் கிடைக்கும் என்ற அறிவிப்பினால் அதிர்ச்சி அடைந்த மக்களுக்கு, மண்ணெண்ணை அளவும் குறைக்கப்பட்டிருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.