டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆசிய பொருளாதாரம் தொடர்பாக பிரதமர் ஆற்றிய உரையில் கூறியதாவது:
21-வது நூற்றாண்டு என்பது ஆசியாவின் பொருளாதாரம் சார்ந்தது. உலக நாடுகளை ஒப்பிடுகையில் ஆசியாவின் பொருளாதாரமானது கடந்த 10 ஆண்டுகளில் கணிசமான முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறது. ஆசிய நாடுகளின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பானது 2012-ம் ஆண்டு 6.9 விழுக்காடாக இருக்கும் என கணக்கிடப்பட்டிருக்கிறது. இது 2013ஆ ஆண்டில் 7.3 சதவீதமாக அதிகரிக்கக் கூடும். 2050-ம் ஆண்டில் உலகப் பொருளாதாரத்தில் சரி பாதி பங்கு ஆசிய பொருளாதாரமாகத்தான் இருக்கும். இப்பொழுது இது 27 விழுக்காடாக இருந்து வருகிறது.
ஆசிய நாடுகளின் தொழில்துறையானது பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறது. சர்வதேச தரத்தில் போட்டியிடக் கூடிய வகையில் நமது கட்டமைப்பு முறை முற்றாக மாற்றப்பட வேண்டும். தொழில்துறை சார்ந்த சட்டங்களை சர்வதேச தரத்திற்கு பொருந்தும் வகையில் ஆசிய நாடுகள் உருவாக்க வேண்டும். சர்வதேச முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப பங்குச் சந்தைகளை முறைப்படுத்த வேண்டும். சர்வதேச முதலீட்டுக்கான சூழ்நிலையை நாம் நமது நாடுகளில் கட்டமைக்க வேண்டியது மிகவும் அவசியம். வெளிப்படையான நேர்மையான நிர்வாகத்தை நாம் கொடுக்க வேண்டும்.
ஆசிய நாடுகள் அனைத்தும் ஒரே மாதிரியானவை அல்ல. ஒவ்வொரு நாட்டுக்கும் கலாசார ரீதியா, புவியியல் ரீதியாக வேறுபாடுகள் உண்டு. சட்டங்களும் அமைப்புகளும் வெவ்வேறானவை. ஆனால் நம்மிடையே வேறுபாடுகள் இருந்தாலும் மனிதாபிமானத்தில் ஒன்றாக இணைகிறோம். ஆசிய நாடுகள் தங்களுக்குள் நல்ல புரிந்துணர்வை உருவாக்கிக் கொள்ள வேண்டும். கடந்த அரை நூற்றாண்டு காலத்தை நாம் மோதல்கள், சச்சரவுகளில் கழித்துவிட்டோம். இனி வரும் காலத்தில் ஆசிய நாடுகளிடை யே அமைதியும் பரஸ்பர ஒத்துழைப்பும் உருவாக வேண்டும். நவீன இந்தியாவின் சிற்பியாக திகழ்பவர் ஜவஹர்லால் நேரு. அவர்தான் தொழிற்சாலைகளைப் பற்றி சிந்தித்தவர். அணைகளைக் கட்டியவர். கிராமப் புற வேளாண் பொருளாதாரத்தைப் பற்றிய தொலைநோக்குப் பார்வை அவரிடம் இருந்தது.
நாட்டின் தொழில்துறை நிறுவனங்களுக்கான புதிய மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். இந்த மசோதா மூல சிறு முதலீட்டாளர்களும் பலனடைவர். உள்பேர வர்த்தகத்தை கடுமையான குற்றமாக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட உள்ள இந்த மசோதாவில் தொழில்துறை நிறுவனங்கள் சமூக நலன் சார்ந்த செயல்பாடுகளுக்காக தங்களது லாபத்தில் குறிப்பிட்ட விழுக்காட்டு ஒதுக்கவும் வகை செய்யப்படும் என்றார் அவர்.