நிதி நெருக்கடி காரணமாக பல மாநில மின்பகிர்வு நிறுவனங்கள் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இவற்றைக் காப்பதற்காகவும், மீண்டும் செயல்படுத்துவதற்காகவும் மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது.
இந்த நடவடிக்கையின்படி மாநில மின் பகிர்வு நிறுவனங்களின் மொத்த கடன் சுமையில் 50 விழுக்காட்டுத் தொகை குறுகிய காலக் கடனாக அளிக்கப்படும். 2012-ம் ஆண்டு மார்ச் வரையிலான காலகட்டத்தில் உள்ள நிதிச் சுமை கணக்கில் கொள்ளப்பட்டு அவற்றை மாநில அரசுகளே ஏற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதை ஈடுகட்ட கடன் பத்திரங்கள் வெளியிடப்படும். இதற்கு மாநில அரசு உத்தரவாதம் அளிக்கும். எஞ்சிய 50 விழுக்காட்டுக் கடன் தொகை குறுகிய காலக் கடனாக மறு சீரமைப்பு செய்யப்பட்டு அளிக்கப்படும். இத்தொகைய திரும்ப செலுத்துவதற்கு நீண்ட காலக் கெடு அளிக்கப்படும். இத்தொகையை 2 ஆண்டு முதல் 5 ஆண்டுகளில் திரும்பச் செலுத்தும் வகையில் சிறப்பு கடன் பத்திரங்களாக வெளியிடப்படும்.
இந்த சீரமைப்பு நடவடிக்கையால் பல மாநிலங்களில் மின் கட்டணம் உயரக் கூடிய அபாயம் இருக்கிறது. தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டிருந்தது. ஆனால் மின்சாரம்தான் கொடுக்கப்படுவதில்லை. இந்த நிலையில் மீண்டும் மின்கட்டணத்தை உயர்த்தினால் கடுமையான அதிருப்தியை தமிழக அரசு சந்திக்க வேண்டியதிருக்கும்.