இலங்கையில் உள்நாட்டு போர் காரணமாக, அந்நாட்டின் வடக்கு பகுதிகளுக்கான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இலங்கையின் வடக்கு பகுதியை கைப்பற்றிய விடுதலை புலிகள், அப்பகுதிக்கு செல்லும் சாலைகள் மற்றும் ரயில் பாதைகளை சேதப்படுத்தினர்.
இதன்மூலம் அப்பகுதியில் இருந்த ரயில் நிலையங்கள், கட்டிடங்கள் ஆகியவற்றை விடுதலை புலிகள் ஆயுதங்களை பாதுகாக்க பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் தற்போது நாட்டில் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்து, தற்போது அமைதி திரும்பியுள்ளது. இதனால் இலங்கையின் வடக்கு பகுதிக்கு போக்குவரத்து வசதிகள் நவீனப்படுத்தப்பட்டு வருகிறது.
சாலை போக்குவரத்து தற்போது சுமூகமாகி உள்ள நிலையில், தமிழர்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதிகளுக்கு ரயில் போக்குவரத்தை துவக்க இலங்கை திட்டமிட்டுள்ளது. இதற்காக சேதமடைந்த ரயில் பாதைகளை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதற்கு இலங்கையின் பக்கத்து நாடான இந்தியா உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளது. இதில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு பகுதியில் உள்ள ரயில் பாதைகளை அடுத்த ஆண்டின் முடிவிற்குள் சீரமைக்க 800 மில்லியன் டாலர் இந்திய அரசு ஒதுக்கியுள்ளது. இதன்மூலம் இலங்கையில் மொத்தம் 252.5 கி.மீ தூர ரயில் பாதை சீரமைக்கப்பட உள்ளது.
இத்திட்டத்தின் மூலம் மெடவச்சியா-ஜாப்னா மற்றும் கனகிஷன்துரை பகுதிகள் இடையிலான ரயில் போக்குவரத்து சீரமைக்கப்படும். இதன்மூலம் இலங்கையின் வடக்கு பகுதியில் உள்ள வியாபார துறைமுகம் பெரும் வளர்ச்சி பெறும். இதற்காக இந்தியா, இலங்கை நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் அமைக்கப்பட்டுள்ளது.
18 மாதங்களில் மேற்கண்ட பணிகளை முடிக்கும் வகையில், முழுவீச்சில் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்திய அரசு நிறுவனமான இர்கான்' ரயில் பாதையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
இது குறித்து இர்கான் நிறுவனத்தின் அதிகாரி குப்தா கூறியதாவது,
இத்திட்டம் 4 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டத்தில் மெடவச்சியா-மதுரோடு இடையிலான பகுதி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் சீரமைக்கப்படும். அதன்பிறகு மதுரோடு-தலைமன்னார் மற்றும் ஒமந்தை-பாலை ஆகிய பகுதிகளுக்கு இடையிலான பணிகள் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் முடிவடையும். கடைசியாக பாலை-காங்கேசன்துறை இடையிலான பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெறும்.
ரயில் பாதையை விரிவுப்படுத்தும் திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை. பெரும்பாலான பகுதிகளில் ரயில் பாதை முற்றிலும் சேதமடைந்து, காடுகளாக காட்சியளிக்கிறது. எனவே அவற்றை சீரமைக்க வேண்டியுள்ளது என்றார்.
முன்னதாக இர்கான் நிறுவனம் இலங்கையின் தென் பகுதியில் உள்ள 100 கி.மீ ரயில் பாதைகளை சீரமைத்தது. ஆனால் கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் அவை மீண்டும் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.