ஒரு வீட்டுக்கு ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் மட்டுமே மானியத்தில் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்ததை அடுத்து தங்கத்தின் விலையைப் போல நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது சமையல் எரிவாயு. இருப்பினும் புதிய எரிவாயு இணைப்பு கோரி, விநியோகஸ்தர்களிடம் தினம் தினம் விண்ணப்பம் குவிந்து வருகிறது. இன்றைய சூழ்நிலையில் நுகர்வோர்களுக்கு 40 நாட்களுக்கு ஒருமுறைதான் சிலிண்டர் கிடைக்கிறது. இதனால் இல்லத்தரசிகளின் பாடு படும் திண்டாட்டமாக உள்ளது.
காத்திருப்போர் அதிகரிப்பு
ஆயில் நிறுவனங்கள் விநியோகஸ்தர்களுக்கு முறையாக சிலிண்டர்கள் சப்ளை செய்யாததாலும், சென்னையில் கள்ள மார்க்கெட்டில் சிலிண்டர்கள் விற்பனையை தடுப்பதற்காகவும் புதிய இணைப்பு கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு சிலிண்டர்கள் வழங்கும் முறையை சமையல் எரிவாயு விநியோகஸ்தர்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.
இது குறித்து எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
புதிய சமையல் கியாஸ் இணைப்பு கோரி விண்ணப்பித்துள்ள மனுக்கள் மீதான பரிசீலனையில் மூன்று ஆயில் நிறுவனங்களும் ஈடுபட்டு வருகிறது. இதில் ஏற்கனவே இரண்டு அல்லது மூன்று எரிவாயு இணைப்புகள் வைத்திருப்பவர்களை அடையாளம் காண்பதுடன், உண்மையிலேயே சமையல் எரிவாயு இணைப்பு இல்லாதவர்களுக்கு புதிய இணைப்பு வழங்குவதில் முழு முனைப்புடன் செயல்படுகிறது என்றார்.
அத்துடன் அரசு அறிவித்தப்படி ஒரு வீட்டுக்கு ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் மட்டும் மானியத்துடன் வழங்குவது ஆகியவை முறைப்படுத்தப்பட்டால், புதிய இணைப்பு வழங்குபவர்களுக்கும் தங்குதடையின்றி சிலிண்டர்கள் விநியோகிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
புது இணைப்பு நிறுத்தம்
ஆனால் ஆயில் நிறுவனங்கள் போதிய அளவு சிலிண்டர்கள் விநியோகம் செய்யாததால் விநியோகஸ்தர்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்று விநியோகஸ்தர் கூறியுள்ளனர்.
இது குறித்து அகில இந்திய இன்டேன் விநியோகஸ்தர்கள் சங்க பொது செயலாளர் சி.ஜி.கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:-
சமையல் எரிவாயு புதிய இணைப்பு கோரி விண்ணப்பித்தவர்களுக்கு சிலிண்டர்கள் வழங்குவது கடந்த ஆகஸ்டு மாதம் வரை வழங்கப்பட்டது. ஆனால் செப்டம்பர் மாதம் விண்ணப்பித்தவர்களுக்கு புதிய இணைப்புக்கான சிலிண்டர்கள் வழங்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 10000ம் பேர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். ஆயில் நிறுவனங்கள் முறையாக சிலிண்டர்களை வழங்கினால் மட்டுமே மீண்டும் 10 நாட்களுக்கு பிறகு புதிய இணைப்பு கோரியவர்களுக்கும் சிலிண்டர்கள் வழங்க முடியும் என்று கூறியுள்ளார்.
பாரத் கேஸ் இணைப்பு
பாரத் பெட்ரோலியம் கட்டுப்பாட்டில் உள்ள சமையல் எரிவாயு விநியோகஸ்தர்களிடம் புதிய இணைப்பு கோரி விண்ணப்பிப்பவர்கள் முறையான ஆவணங்கள் வழங்கினால் உடனடியாக இணைப்புகள் வழங்கப்படுகிறது. பிற நிறுவனங்கள் போன்று புதிய இணைப்பு கேட்டு விண்ணப்பிக்கும் முறை நிறுத்தப்பட வில்லை.