அபுதாபியின் எதிஹாட் ஏர்வேஸ் கிங்பிஷர் பங்குகளை வாங்கப் போவதாகவும் இதற்கான முறையான அறிவிப்பு கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவன உரிமையாளர் விஜய்மல்லையாவின் பிறந்த நாளான டிசம்பர் 18-ந் தேதி வெளியாகக் கூடும் என்று 'ராய்ட்டர்ஸ்' நிறுவனம் தகவல் வெளியிட்டிருக்கிறது.
மேலும் இந்த டிசம்பர் மாதத்தில் கிங்பிஷரின் 30% விழுக்காடு பங்கையும் அடுத்த ஆகஸ்டில் 18% பங்கையும் அனேகமாக எதிஹாட் ஏர்வேஸ் வாங்கக் கூடும் என்று ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.
இந்தச் செய்தியை எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனம் மறுக்கவும் இல்லை.. உறுதி செய்யவும் இல்லை. ஆனால் இதை மறுத்திருக்கும் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம், பல பன்னாட்டு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்று மட்டும் தெரிவித்திருக்கிறது.
மேலும் இந்த செய்திகள் வெளியான நிலையில் கிங்பிஷர் ஏர்லைன்ஸின் பங்குகள் மதிப்பு இன்று காலை பங்குச் சந்தையில் 4.7% உயர்ந்திருந்தது.
கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சுமார் 2.5 பில்லியன் கடன் இருப்பதாகக் கூறப்படுகிறது. பணியாளர்களுக்கு பல மாதமாக ஊதியம் தராததால் பலமுறை விமானிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிறுவனத்தின் பணியாளர் தற்கொலைகூட செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.