2001-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை கறுப்புப் பணம் பதுக்கலில் உலக நாடுகளின் நிலை குறித்து சர்வதேச அமைப்பு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கறுப்புப் பணம் பதுக்கல் குறித்து 150 நாடுகளில் நடைபெற்ற கணக்கெடுப்பில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்துள்ளன.
பலகோடி ஆயிரம் ரூபாய்
இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் 123 பில்லியன் டாலர்கள் அளவிற்கு கறுப்பு பணம் பதுக்கப்பட்டுள்ளது. அவற்றில் பெரும்பாலான தொகை வெளிநாட்டு வங்கிகளில் போடப்பட்டுள்ளது. 2010-ம் ஆண்டு மட்டும் இந்தியாவில் இருந்து ரூ.8720 கோடி ரூபாய் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளது.
மத்திய அரசு வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கறுப்பு பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவித்த பிறகும் இந்தியாவில் இருந்து கறுப்பு பணம் வெளிநாடுகளுக்கு செல்வது குறையவில்லை.
இந்தியாவைப் பொறுத்தவரை இது மிகப்பெரிய இழப்பு என்று குறிப்பிட்டுள்ள இந்த ஆய்வாளர்கள். இந்த கறுப்புப் பணத்தை மீட்பதன் மூலம் கல்வி, சுகாதாரம், மின்சாரத்துறை, நாட்டின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீரமைக்கலாம் என்று கூறியுள்ளனர்.
சீனா நம்பர் 1
கறுப்பு பணம் பதுக்கலில் சீனா முதலிடத்தில் உள்ளது. இந்த நாட்டில் மட்டும் 2.74 ட்ரில்லியன் டாலர் அளவிற்கு கறுப்பு பணம் பதுக்கப்பட்டுள்ளதாம்.
இதனைத் தொடர்ந்து மெக்சிகோ, மலேசியா, சவூதி அரேபியா, ரஷ்யா, பிலிப்பைன்ஸ், நைஜிரியா, ஆகிய நாடுகள் அடுத்த இடங்களில் உள்ளன. இந்த லிஸ்ட்டில் இந்தியா 8 வது இடத்தில் உள்ளது. இந்தோனேசியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகள் 9, 10 -வது இடங்களில் உள்ளன.
அரசின் வெள்ளை அறிக்கை
வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்பு பணம், வரிஏய்ப்பு தொடர்பு குறித்து கடந்த மே மாதம் அப்போதைய நிதி அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி நாடாளுமன்றத்தில் வெள்ளை அறிக்கையாக தாக்கல் செய்தார். இந்த பட்டியலில் 2406 பில்லியன் டாலர் கறுப்பு பணத்துடன் சீனா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் 104 பில்லியன் டாலர் கறுப்பு பணம் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் கறுப்பு பணம் பதுக்கல் வெகுவாக குறைந்திருப்பதாக தெரிவித்த பிரணாப், 2006ம் ஆண்டில் இங்கு பதுக்கப்படும் பணம் ரூ. 23 ஆயிரத்து 373 கோடியாக இருந்தது. தற்போது இது 9 ஆயிரத்து 295 கோடியாக குறைந்திருக்கிறது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இந்த அறிக்கையில் வெளிநாடுகளில் பணம் பதுக்கியவர்கள் பட்டியலை வெளியிடாமல் ஏமாற்றி விட்டார் பிரணாப் முகர்ஜி என்றே குற்றம் சாட்டப்பட்டது.