பெங்களூர்: சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை ஆதரிக்கப் போவதாக மத்திய அரசு அறிவித்ததுமே அரசியல் கட்சிகள், வர்த்தகர்கள் உள்பட பலரும் பேரதிர்ச்சி அடைந்தனர்.
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கப் போவதாக மத்திய அரசு அறிவித்தது. இதற்கு அரசியல் கட்சிகளும், வர்த்தகர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இம்மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தும்போது அதை ஆதரிக்குமாறு ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.
பின்னர் கூடிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் எதிர்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறு மத்திய அரசு இது குறித்த மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தி அதை முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி மற்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவோடு வெற்றிகரமாக நிறைவேற்றியது.
சிங்கிள் பிராண்ட் ரீடைல்...
ஏற்கனவே ஒற்றை பிராண்ட் கொண்ட ரீடைல் கடைகளுக்கு (single brand retail) மத்திய அரசு அனுமதி அளித்துவிட்டது. அதாவது, ரீபோக் ஷூ நிறுவனம் தானே முழு முதலீட்டையும் போட்டு இந்தியாவில் எத்தனை கடைகளை வேண்டுமானாலும் திறக்கலாம். எவ்வளவு அன்னிய முதலீடு வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் ரீபோக் பிராண்டை மட்டுமே விற்க வேண்டும். இது தான் single brand retail. இதை பாஜக உள்பட எந்தக் கட்சியும், வர்த்தகர்களும் எதிர்க்கவில்லை.
மல்டி பிராண்ட் ரீடைல் வேண்டவே வேண்டாம்
வால்மார்ட், டெஸ்கோ, கேர்போர் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் தங்களது முதலீட்டைப் (அன்னிய முதலீடு) போட்டு மாபெரும் கடைகளைத் திறக்க அனுமதி அளிக்க மத்திய அரசு முடிவு செய்தது. ரீபோக் மாதிரி அனைத்து பிராண்ட் பொருட்களையும், டிவியில் இருந்து எலுமிச்சம் பழம் வரை எல்லா பொருட்களையும் விற்க அனுமதி உண்டு. இதற்குத் தான் வர்த்தகர்கள் இடையே பெரும் எதிர்ப்பு கிளம்பியது.
நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பில் வென்ற மத்திய அரசு
எப்.டி.ஐக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புடன் கூடிய விவதாம் நடத்த வலியுறுத்தின. அதன்படி நடந்த வாக்கெடுப்பில் இரு அவைகளிலும் மத்திய அரசு வெற்றி பெற்றது.
இந்தியாவுக்குள் நுழைய ரூ.125 கோடி செலவு செய்த வால்மார்ட்
இந்தியாவுக்குள் நுழைய வால்மார்ட் கடந்த 2008ல் இருந்தே காய் நகர்த்தியுள்ளது. இதற்காக அது அமெரிக்காவில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் செல்வாக்கு உள்ளவர்களுக்கு ரூ.125 கோடி செலவு செய்துள்ளது.
வெற்றிகரமாக இந்தியாவுக்கு வரும் வால்மார்ட்
நாடாளுமன்றத்தில் எப்.டி.ஐ. குறித்த வாக்கெடுப்பில் மத்திய அரசு வெற்றி பெற்றதால் வால்மார்ட் போன்ற சில்லறை வர்த்தக ஜாம்பவான்கள் விரைவில் இந்தியாவில் தங்கள் சூப்பர் மார்கெட்டுகளை திறக்க உள்ளனர்.