இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு இடையே மணிக்கு 300 முதல் 350 கிமீ வேகத்தில் செல்லும் புல்லட் ரயில் விட ரயில்வே துறை திட்டுமிட்டுள்ளது. ஆனால் இத்திட்டத்தை செயல்படுத்த போதிய நிதி இல்லாததால் இப்போதைக்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட மாட்டாது என்று ரயில்வே வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனா அதிவேக புல்லட் ரயிலை அறிமுகப்படுத்திவிட்டது. ஆனால் இந்தியாவுக்கு புல்லட் ரயில் வர இன்னும் சிறிது காலம் ஆகும்.
இந்நிலையில் டெல்லி-மும்பை இடையே மணிக்கு 200 கிமீ வேகத்தில் ரயில் இயக்கும் திட்டத்தை செயல்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை ரயில்வே துறை எடுத்து வருகிறது. தற்போது ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் மணிக்கு 100 முதல் 120 கிமீ வேகத்தில் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற ரயில்கள் மணிக்கு 80 கிமீ வேகத்தில் தான் செல்கின்றன.
இது குறித்து ரயில்வே வாரிய தலைவர் வினய் மிட்டல் கூறுகையில்,
ஏராளமான நிதி தேவைப்படுவதால் புல்லட் ரயில் திட்டத்தை இப்போதைக்கு செயல்படுத்த முடியாது. ஆனால் கடுமையான நிதிப் பிரச்சனைகளுக்கு மத்தியிலும் டெல்லி-மும்பை இடையே மணிக்கு 200 கிமீ வேகத்தில் ரயில் விடும் திட்டத்தை செயல்படுத்தவிருக்கிறோம். வட இந்தியாவில் நிலவி வரும் கடுங்குளிரால் ரயில்வே துறைக்கு வருவாய் குறைந்துள்ளது என்றார்.